ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 15, 2017

“மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அகஸ்தியமாமகரிஷிகளின் விருப்பம்” - அவர்களைப் போன்று நாமும் மகரிஷிகளாக ஆக வேண்டும் என்பது தான

ஒரு வெளிச்சத்தைக் காட்டினால் அந்த வெளிச்சத்தினால் நாம் பல பொருள்களை “இது இன்னது தான்… இது இன்னது தான்…” என்று காண முடிகின்றது.

இதைப் போல அந்த அருள் மகரிஷிகள் தன் உணர்வின் ஆற்றல் மிக்க சக்தி கொண்டு அவர்கள்
1.“ஒளி கண்ட உணர்வின் தன்மை கொண்டு” எதனையும் பிளந்து
2.அதற்குள் இருக்கும் இருளைப் பிளந்து
3.அதற்குள் இருக்கும் உணர்வின் சத்தை உணர்ந்தவர்கள்.

தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சிகரமாக மாற்றினார்கள்.

ஒளியாக மாற்றிடும் ஆற்றல் கொண்டு விண்ணுலகிலிருந்து வரும் நஞ்சு கொண்ட உணர்வுகள் உருவாகி வருவதைப் “பலவீனமாக்கி…” அதனின் உணர்வையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றார்கள்.

அண்டத்தின் உணர்வை இந்த மண்ணுலகில் தோன்றிய இந்தப் பிண்டத்திற்குள் (இந்த உடலில்) மாற்றி இன்றும் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் பெருக்கிக் கொண்டுள்ளார்கள்.

விண்ணுலக ஆற்றல் (அண்டத்தின் சத்து)
1.அது இங்கே மண்ணுலகில் கலந்து மாறி வருவதற்கு முன்பாக
2.அண்டத்தின் உணர்வை அடக்கி அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி
3.இந்தப் பிண்டத்திற்குள் (தன் உடலுக்குள்) உருவாக்கினார்கள்
அன்று மகரிஷிகள்.

அதனின் துணை கொண்டே உணர்வின் ஒளியாக ஒளியின் சரீரமாக “துருவ நட்சத்திரமாகவும்… சப்தரிஷி மண்டலமாகவும்…” இன்றும் (என்றும்) நிலைத்துள்ளார்கள்.

பூமியின் துருவப் பகுதியில் நிலை கொண்டு விண்ணின் ஆற்றல் புவியின் ஈர்ப்புக்குள் “நுழையும் தருவாயில்…” அதைத் தனக்குள் நுகர்ந்தறிந்து உணர்வின் ஆற்றலை ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளார்கள்.

இந்த மனித உடலில் இருப்பது போன்றே உயிருடன் ஒன்றிய உணர்வின் சத்தை ஒளியின் சிகரமாக மாற்றி “என்றும் பதினாறு” என்று அழியாத நிலைகளில் உள்ளார்கள்.

“அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றல்” மற்ற அலைகளை அடக்கி ஒளியின் தன்மையில் பொருளைக் காணும் நிலையாக விளைந்திட்ட அந்த அருள் ஞானியின் உணர்வுகள் “நமக்கு முன்” சுழன்று கொண்டிருக்கின்றது.

இந்த உபதேசத்தின் வாயிலாக அதை நீங்கள் கேட்டுணரும்போது சக்தி வாய்ந்த “ஞான வித்தாக…” உங்கள் உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

அதனை நீங்கள் நினைவு கொள்ளும்போது நினைத்த மாத்திரத்தில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறமுடியும்.

தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால் செம்பையும் பித்தளையும் அது ஆவியாக மாற்றுகின்றது. தங்கம் பரிசுத்தம் அடைகின்றது.

அதைப் போன்று நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள் இந்த மனித வாழ்க்கையில் துயரத்தையும் துன்பத்தையும் வெறுப்பையும் உருவாக்கும் நிலைகளை அடக்கி
1.மெய் ஒளியின் உணர்வின் சரீரமாக “உடலை அது காத்து”
2.அதுவே “குருவாக…” நின்று உங்களை நல்வழிப்படுத்தும்.

இந்தப் பிண்டமான உடலுக்குள் இருந்து… அகஸ்தியனைப் போன்று “அகண்ட அண்டத்தை எட்டிடும்” உணர்வின் ஆற்றலைப் பெற முடியும்.

அதைப் பெற்று இந்தப் பிண்டத்திற்குள் விளைந்த நஞ்சை அகற்றி நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்ற முடியும்.

ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வைக் கணங்களுக்கு அதிபதியாக்குவோம். அதைப் பற்றுடன் பற்றும்போது எளிதில் நாம் விண் செல்ல முடியும்.

விண் சென்ற அந்த அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்கு
1.அனைவரையும் அழைத்துச் செல்லும் நிலையாக அமைவதே

2.யாம் உணர்த்தும் இந்த உபதேசத்தின் நோக்கம்.