ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 10, 2017

நம்மிடம் தீமையான வினைகள் சேராதிருக்கவும் நல்ல வினைகளைச் சேர்ப்பிப்பதற்காகவும் தான் நாம் பார்க்கும் இடங்களில் எல்லாம் “விநாயகரை” வைத்தார்கள் ஞானிகள்

குடும்பத்தில் தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிள்ளையைப் பார்த்து நீ அங்கேயெல்லாம் போகிறாயாடா..? அவன் மோசமானவன்டா… அவனிடம் பழகாதடா…, அவன் எப்படிப்பட்டவன் தெரியுமாடா உனக்கு…? “ஏண்டா அப்படியெல்லாம் செய்கிறாய் என்று பிள்ளை மேல் உள்ள பாசத்தால் தாய் கேட்பார்கள்.

ஆனால் பிள்ளையோ அவன் மீது ரொம்பவும் சிநேகிதமாக இருப்பான். தன் தாயைப் பார்த்து நீ சும்மா… “நச்…நச்…, என்று எதையாவது சொல்லிக் கொண்டேயிருப்பாய்…” என்பான்.

பாசத்தினால் தாய் “நீ இப்படிச் செய்யாதடா.., நீ பழகுபவர்கள் நல்லவர்கள் இல்லை” என்று சொன்னால் பையன் உனக்கு எப்பொழுது பார்த்தாலும் “நான் செய்வது தப்பாகத்தான் தெரியும்” என்பான்.

“ஐயோ…! இப்படிச் சொல்கிறானே… இப்படிச் சொல்கிறானே… இப்படிச் சொல்கிறானே…” என்ற வேதனை தான் வரும்.

அடுத்து… வருபவர்களிடத்தில் எல்லாம் சொல்வார்கள். “பாருங்கள்…!” மற்ற பசங்களுடன் சேர்ந்து இப்படிச் செய்கின்றான். கெட்டுப் போகின்றான். அதை நான் கேட்டால் என்னையும் இப்படிப் பேசுகின்றான் என்பார்கள்.

வெளியிலிருந்து வரும்போது பையன் அதே கோபத்துடன் வருவான். “உன்னை உதைத்தால் தான் சரியாக இருக்கும்” என்பான்.

இதையெல்லாம் தாய் கேட்டு நான் வேதனைப்பட்டுக் கொண்டயிருக்கின்றேன் என்பார்கள்.

இப்படித்தான் நடக்கின்றது.

ஆனால் விநாயகரை எதற்காக வைத்துள்ளார்கள்?

நல் வாழ்க்கையில் நம்மை அறியாமலே இதைப் போன்ற தீமைகள் வினையாகச் சேர்த்து நம்மை அழித்துக் கொண்டிருக்கின்றது. இந்த வினைகளை நீக்க வேண்டும் என்பதற்காகத்தான் விநாயகரைத் தெருவுக்குத் தெரு வைத்துள்ளார்கள்.

விநயகரைப் பார்த்து அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் வினையாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும்.
2.குடும்பத்திலுள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
3.அந்த எண்ணத்தை இங்கே வீட்டில் பாய்ச்ச வேண்டும்.

பையனை எண்ணும் பொழுது திட்டியிருந்தாலும் அவனை அறியாத இருள்கள் நீங்க வேண்டும். அன்னை தந்தை என்ற நிலைகளில் அவன் மதித்து நடக்க வேண்டும். வசிஷ்டர் அருந்ததி போல எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும்.
1.பையன் ஞானத்தில் வளர்ச்சி அடைய வேண்டும்.
2.அவன் எல்லோரும் போற்றும் நிலை பெறவேண்டும் என்று இப்படி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

பையனைப் பார்த்து தம்பி…! இப்படி எல்லாம் இருக்கின்றது. எல்லாம் அந்த ஆண்டவனின் செயல். “நீ அந்த விநாயகரிடம் சென்று இந்த முறைப்படி வேண்டு…” கோவிலுக்குச் சென்று இப்படி வணங்கு என்று சொல்லலாம்.

பையன் விநாயகரைப் பார்த்து எதை எண்ண வேண்டும்?

என் அன்னை தந்தையரின் அருளாசி நான் பெறவேண்டும். அவர்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
1.என்னை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
2.என் குடும்பத்தில் பற்றுடன் வாழ்ந்திடும் சக்தி எனக்கு வரவேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று
அவன் இப்படித் தெய்வமாகக் கும்பிட வேண்டும்.

ஆனால் அப்படி நாம் செய்கிறோமா…?

“கோவிலுக்குப் போடா…” என்று சொன்னவுடனே பையன் என்ன செய்வான். கோவிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு சாமிக்கு இவ்வளவு ரூபாய் காணிக்கை என்று போடுவான்.

அங்கே பூஜை செய்யும் பூசாரிக்குக் கூடக் கொஞ்சம் காசை வைத்தால் “வாங்க தம்பி..” என்பார். சாமி மேல் போட்டிருக்கும் மாலையை எடுத்து “இந்தாப்பா மாலை…” என்று கொடுப்பார்.

தன் தாயிடம் சொல்வான். நான் சாமியை வணங்காமலா இருக்கின்றேன். நான் மாலை கூட வாங்கியிருக்கின்றேன். நீ வாங்கிக் கொண்டுவா பார்க்கலாம் என்பான். இப்படிச் சொல்வதற்குத்தான் இருக்கின்றது.

காசைக் கொடுத்துவிட்டு விலைக்கு வாங்கும் சக்தியாகத்தான் இருக்கின்றதே தவிர ஞானிகள் காட்டிய நிலைகள் நம்மை அறியாமல் இருக்கும் இருளை நீக்கி எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் அது நல்லதாகும்.

நம்மிடம் நல்ல குணமும் கெட்ட குணமும் உண்டு.

1.அந்த ஞானிகள் சொன்ன முறைப்படி நல்ல சக்திகளை எடுத்து
2.நல்ல குணத்திற்கு வலு கொடுத்தால்
3.நாம் தெய்வமாக இருந்து “கெட்ட குணத்தை எல்லாம் ஒடுக்க முடியும்”.

தியானத்தில் உட்கார்ந்தவுடன் பார்த்தால் சிலர் என்ன சொல்வார்கள். “அவன் என்னை இப்படிப் பேசினான்.. இவன் அப்படிச் செய்தான்..” இப்படிப் பல எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு என்னால் உட்காரவே முடியவில்லை என்பார்கள்.

தியானம் என்பது என்ன?

“எப்பொழுதெல்லாம் நம் உணர்வுகள் மாறுகின்றதோ…. அப்பொழுதெல்லாம்…” மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இப்படி எண்ணி அந்த உயர்ந்த சக்திகளை நமக்குள் சேர்ப்பது தான் தியானம்.

யார் மேல் வெறுப்பு வந்ததோ அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதைத் தியானித்துப் பாருங்கள்.
1.உங்களிடம் கெட்டது வராது
2.மன பலம் வரும்.
3.உடல் நலம் பெறும்.
4.சொல்லில் இனிமை பெறும்.
5.உங்கள் பார்வை எல்லோரையும் நல்லதாக்கும். 

இதற்காகத்தான் கோவிலைக் கட்டி வைத்தார்கள் ஞானிகள்.