ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 1, 2018

பிறரை வேதனைப்படுத்திச் சேர்க்கும் பணத்தால் சந்தோஷம் வருமா...?

1.இன்று பெரும்பகுதி எதைக் குறிக்கோளாக வைத்துத் திருமணங்கள் நடைபெறுகின்றது?
மனிதராகப் பிறந்த நாம் இன்று எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

பெரும்பாலான குடும்பங்களைப் பார்த்தோமென்றால் மருமகளிடம் கடுமையாகப் பேசுபவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அல்லது மருமகள் மாமியாரிடம் கடுமையாகப் பேசும் நிலை இருக்கின்றது.

இன்று குடும்பங்களில், சிறு சிறு சர்ச்சைகள் இருந்து கொண்டிருக்கின்றன. இவைகளெல்லாம் எதனால் வருகிறதென்றால், மருமகளாக வருபவள் 50/100 பவுனுடன் வரவேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

ஆனால் தன் மகளைக் கலயாணம் செய்து கொடுக்கும் பொழுது 10 பவுனைக் குறைத்துவிடலாமா, அல்லது 20 பவுனைக் குறைத்துவிடலாமா.., என்று நினைக்கின்றார்கள்.

மருமகள் வந்தால் இத்தனை பவுன் வேண்டும் என்று கேட்கின்றோம். ஆனால் இதனின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அந்த ஆசையின் எண்ணங்கள்தான் வருகின்றதே தவிர “மனிதரைத் தெளிவாக்கும் நிலைகள் வருகின்றதா?” என்றால்  இல்லை.

ஆகவே, இத்தகைய உணர்வின் தன்மைகளை வளர்த்துக் கொண்டால் நமது உயிர், அதனின் அணுக் கருக்களைத்தான் நமக்குள் உருவாக்கும்.

2.”மருமகள் இவ்வளவுதானே கொண்டு வந்தாள்…” என்று விஷத்தை ஊட்டுவார்கள்
நியாயம் தர்மம்,” அனைத்தும் பேசுவார்கள். ஆனால் மகனுக்கு மனைவியாக வருபவள் இவ்வளவு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும், என்று “ஏராளமாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

மகனைப் பார்த்து “ஏன்டா ராஜா.., உன்னுடைய மனைவி இவ்வளவு தானே கொண்டு வந்தாள்…” என்று விஷத்தை ஊட்டுவார்கள்.

இந்த விஷத்தின் தன்மை கொண்டு நான்கு தரம் சொன்னால் வெறுப்பாகும். அந்த வெறுப்பின் தன்மை கொண்டு தனது அம்மாவின் மனதை அடக்க.., “ஒரு பத்தாயிரம் வாங்கி வந்துவிடு என்று மனைவியிடம் கூறுவார்கள்.

அங்கே உள்ள கஷ்டம் இவர்களுக்குத் தெரியாது.

இப்படி வேதனைப்படுத்தி வேதனைப்படுத்தி வாங்கிய காசை இவர்கள் அனுபவிக்க முடியாது. எதற்குச் செல்வழிப்பார்கள் என்றால்,
1.இவர்களுக்குள் வேதனைப்படுத்தியதின் உணர்வால் விளைந்த நோயை நீக்கச் செலவழிப்பார்கள்.
2.யார் யாரோ தின்பதற்குக் கொடுத்துவிட்டு வருவார்கள்.
3.இவர்களுக்கு எதற்காவது உதவுகிறதா என்றால் அதுவும் இல்லை.
4.நரக வேதனை மட்டும்தான் மிச்சமாகும்.

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். மற்ற மிருகங்கள் தான் வாழப் பிறரிடம் பணம் கேட்கின்றதா?

இல்லை.

மனிதராகப் பிறந்த நாம் மட்டும் பணம் பொருள் வேண்டும் என்று “பிறரை வேதனைப்படுத்துகின்றோம்.

3.வேதனைப்படுத்திக் கொண்டு வந்த பணம் தங்காது – வேதனையைத்தான் தரும்
செல்வத்தின் பெயரில் இன்னும் ஏன் பணம் கொண்டு வரவில்லை? என்று பிறரை வேதனைப்படுத்திச் செல்வத்தைக் கொண்டு வந்தால் அங்கே சிரமம் வரும். பிறகு கொண்டு வந்ததெல்லாம் அடகு வைத்துச் சாப்பிட வேண்டிய நிலை வரும்.

வேதனைப்படுத்திக் கொண்டு வந்த பணம் தங்காது.

அதன்பின் இதனின் வேதனையின் உணர்வுகளைச் சுவாசித்து நம்மையறியாது நமக்குள் தண்டனை கொடுக்கும் உணர்வுகளைச் சுவாசிக்கின்றோம்.

நாம் எண்ணியது எதுவோ அதுவாக நம் உணர்வின் தன்மை அங்கே உருவாக்கிவிடும்.

உதாரணமாக நாம் மனைவியை அடித்து உதைத்து, “உன் தாய் தந்தையிடம் போய்ப் பணம் வாங்கி வா!” என்று சொன்னால் அதைக் கேட்ட மனைவி “ஐயோ,” என்று அழுது கொண்டிருக்கும்.

எப்படியாவது, கொண்டு வா என்று துன்புறுத்துவோம், அல்லது மாமியார் இதைச் செய்வார்.

1.அதை ரசித்தால்
2.உடல் முழுவதும் வேதனைகளை உருவாக்கும் “அணு செல்கள் நிச்சயம் உருவாகும்.
3.இதிலிருந்து யாரும் தப்பமுடியாது.

அப்படி வேதனைகளை உருவாக்கும் அணுக்கருக்களாக உடலில் உருவாகிவிட்டால், கொஞ்ச நாளில் நோய் வரும் அதன்பின்,
1.இந்த டாக்டரிடம் போனேன்,
2.இந்த நகையை அடமானம் வைத்தேன் அந்த நகையை அடமானம் வைத்தேன் என்ற நிலை வரும் பொழுது வெறுப்பின் உணர்வுகள் தோன்றும்,
3.தொழிலும் குன்றும், மனவேதனையும் கூடும்.

இது போன்று பிறரை வேதனைப்படுத்தி பணம் பொருள் கேட்டு வாங்கிய குடும்பங்களின் நிலையை நீங்கள் கண் கூடாகக் காணலாம்.

பணம் வந்தால்.., பின்னால் நோயும் வரும். உடலில் நோய் வந்தால் நரக வேதனையைத்தான் உடலில் வளர்க்கும் நிலை வரும்.

இந்த மனித உடலில் விஷத்தன்மை கூடிய பிறகு உடலை விட்டு வெளியே செல்லும் உயிரான்மா, அடுத்து விஷம் கொண்ட கீழான பிறவிகளுக்கே சென்று சேரும்.

இதைத்தான்  கீதையில் “நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய் என்று நமது வாழ்க்கையின் ரகசியத்தை, ஒரு சொல்லுக்குள் அடக்குகின்றது உணர்த்துகின்றது.

4.குடும்பத்திலுள்ளோர் தம் மனதை உயர்த்தினால் செல்வம் அங்கே கொட்டும்
நம்முள் மனமொத்த உயர்ந்த நற்குணங்களைப் பெறும்பொழுது,  அது நமக்குள் மகிழ்ச்சியை உருவாக்குகின்றது. தொழில் எண்ணங்களைப் பெருக்கச் செய்கின்றது.

இதன் வழி கொண்டு செல்வத்தை ஈட்டுவோர் எவரோ அவரே மனிதராக முடியும்.

ஆனால் பொருள் எளிதாக வருகிறதென்று பிறரை வேதனைப்படுத்திப் பொருள் சம்பாதிக்க எண்ணினால் அவர்கள் நொந்திடும் உணர்வுகள் இங்கே வந்து விடுகின்றது,

இது போன்ற தீய நிலைகளிலிருந்து மனிதர் தாம் விடுபடும் எண்ணம் பெறவேண்டும்.

ஏனென்றால் மனிதர்களான நமக்குப் பணம் தேவையில்லை, “உயர்ந்த மனம் தேவை.

இரு மனமும் உயர்ந்த நிலை கொண்டு
1.என் கணவர் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
2.அவர் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும்,
3.அவர் அருள் ஞானம் பெறவேண்டும்.
4.அவர் செய்யும் தொழில் எல்லாம் உயர்வாக வேண்டும்,
5.அவரை அனைவரும் போற்றவேண்டும் என்று
6.மனைவி தன் மனதை உயர்த்தினால் அங்கே செல்வம் கொட்டும்.

இதன் வழி வாழ்க்கையை நடத்தினால் அந்தக் குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் தேடி வரும்.


இந்த மனித வாழ்க்கையில் நிறைவு எய்த முடியும். உடலை விட்டுச் செல்லும் பொழுது ஏகாந்தமாக “விண் செல்ல முடியும்.