ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 7, 2018

“நமக்குள் தினசரி நடக்கும் போராட்டத்தைத்தான்…” மகாபாரதப் போராகக் காட்டினார் வியாசகர்…!


மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் அது மகாபாரதப் போர் என்று வியாசகர் காட்டியுள்ளார்.

சூரியனிலிருந்து வரக்கூடியது
1.வெப்பம்
2.காந்தம்
3.விஷம்.
அது மூன்று என்றாலும் உதாரணமாக புலியை ஒரு மாடு சந்திக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். புலியின் உணர்வை அது எடுத்துக் கொண்டால் அதன் வலிமையை எடுத்துக் கொள்கின்றது.

கண்ணன் (கண்கள்) அந்த உணர்வைப் பார்த்து வலிமையைக் கொடுத்து அர்ச்சுனனுக்கு தாக்கும் உணர்ச்சிகளைக் கொடுக்கின்றது. அதுதான் “அர்ச்சுனன்…!”

அந்த வலிமையை எடுத்துக்கொண்டால் அதனுடைய இயக்க உணர்ச்சிகள் – “நகுலன்…” இந்த மூன்றுக்குள் (வெப்பம் காந்தம் விஷம்) இது வருகின்றது நகுலன்.

இந்த உணர்ச்சிகள் ஒரு உடலுக்குள் சேர்த்து அதன் உணர்வை உருவாக்க இந்த உணர்ச்சியின் அமைப்புகள் அமைகின்றது, அதுதான் “சகாதேவன்...!”

இந்தப் புலியின் உணர்வுகள் மாட்டின் உடலுக்குள் அது உருவாக்கி விட்டால் பீமன். புலியின் உணர்வுகள் மாட்டின் உடலுக்குள் சேர்ந்து விட்டால் பீமன்.

அப்பொழுது அந்த வலிமை கொண்டு அந்த உடலில் மற்றவைகளை அடக்கும் சக்தி பெறுகின்றது. மிக வலிமையானது “பீமன்…”

வலிமையாகிவிட்டதென்றால் அதன் வழி இயக்கச் சக்தியாக அடுத்த உடலை உருவாக்கி அதன் வழி சாந்தமாக இயக்கும் தன்மை வருகின்றது “தர்மன்…!”

உடலிலே உருவாக்கிய உணர்வுகள் எல்லாம் கௌரவர்கள். எந்தெந்த உணர்வுகள் கொண்டு அந்த உடல்களை வளர்த்துக்கொண்டதோ அந்த உடலைக் காக்கும் அந்த கௌரவப் பிரச்சினைகள் வரும், அந்த உணர்வின் தன்மை தான் காக்கின்றது.

கௌரவர்கள் நூறு பேர். நூறு விதமான குணங்கள் ஒவ்வொரு நிலைகளிலேயும் அதைப் பாதுகாக்க வேண்டும் என்று ஒற்றுமையுடன் அவர்கள் இருப்பார்கள்.

எல்லாம் சேர்ந்து உடலுக்குள் ஒற்றுமையாக இருக்கும்போது பஞ்ச பாண்டவர்கள் நாம் நல்லவைகளை நுகர்ந்து நல்லவைகளைச் செயல்படுத்த வேண்டும் என்ற நிலையில் செயல்படுகின்றோம்.

அப்பொழுது இந்த நூறு பேரும் உடலுக்குள் இருக்கும் அந்த நூறு விதமான உணர்வுகள் அந்த நல்ல உணர்வுகளை உள்ளே விடாது தடுக்கின்றது.  நம் உடலிலே வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் அதிகரித்தால் அது கௌரவர்கள்.

1.எப்படியும் நல்லதைச் செய்ய வேண்டும் என்ற உணர்வுகளை நாம் நுகர்ந்தாலும்
2.உள்ளுக்குள் இருக்கக்கூடிய அந்தக் கௌரவர்கள்
3.அவர்களுடைய அழுத்தத்தால் விடுவதில்லை.

காரணம் நமது கண் கண்ணனாக இருப்பினும் நமது உயிர் கண்ணனின் சகோதரி திரௌபதை.

இப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட ஆசையில் நல்லதைச் செய்ய வேண்டும் என்று இந்த உடலில் உள்ள ஆறாவது அறிவால் மாற்றி அமைக்க வேண்டும் என்று எண்ணினாலும்
1.உடலுக்குள் முன் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது கௌரவர்கள்.
2.உடலில் நோயாக இருந்தால் அதுவும் கௌரவர்கள்.
3.ஆசை கொண்டு பொருளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அதுவும் கௌரவர்கள் தான்.

நம்மிடம் கடன் வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம். “இப்படிப் பண்ணுகிறானே..” என்ற கோபம் வந்து உயிரிலே படுகின்றது, குரு.

இந்தச் க்ஷேத்திரத்தில் அவன் செய்த தவறின் உணர்வு போர் முறையாக நடக்கின்றது. அதனின் உணர்வு கொண்டு நாம் எதை எண்ணுகின்றோமோ இந்தக் கண் என்ன செய்கின்றது..? வழி... காட்டுகின்றது.

அவனிடம் போய் “நீ எப்படி இப்படிச் செய்யலாம்..?” என்று இரண்டில் ஒன்று பார்க்கலாம் என்று கேட்கும் நிலைகளுக்கு வழி காட்டுகின்றது.  அப்பொழுது இங்கே போர் நடக்கின்றது.

ஆனால் நடந்தாலும் நாம் இதில் தப்புவதற்கு வழி இல்லை. குருக்ஷேத்திரப் போர் நடந்தவுடன் உடலுக்குள் போய் என்ன செய்கின்றது…? அவன் செய்த வேதனைப்படும் உணர்வுகள் அர்ச்சுனன், குறி வைத்துத் தாக்கி விடுகின்றான்.

நம் இரத்தத்தில் போனவுடன் என்ன செய்கின்றது? நகுலன். அவனின் வேகமான உணர்ச்சிகள் என்ன செய்கின்றது…? ஒரு மிளகாயை வாயில் போட்டவுடன் “ஆ..!” என்று நம்மை அலறச் செய்கின்றது. நகுலன், விரிந்து உள்ளுக்குள் போகின்றது.

சகாதேவன் அதிலுள்ள காந்தம் இரண்டற இணைக்கின்றது. இணைத்தவுடன் என்ன செய்கின்றது…? அதன் பின் கோபமான உணர்வு வரும்போது பீமன். நமக்குக் கோபம் வந்துவிடுகின்றது. பயங்கரமான கோபம் வருகின்றது.

அப்படிப் பீமனாகும் பொழுது அடிக்கடி கோபம் வந்து வலுவாகும் போது நமக்குள் இரத்தக் கொதிப்பாகின்றது.
1.எப்படி ஒரு வேப்பமரத்திற்குப் பக்கம் ரோஜாப்பூவின் மணத்தை விடுவதில்லையோ
2.இதைப்போல நல்ல சுவாசத்தையும் நல்ல உணர்வுகளையும் உள்ளே விடாதபடி
3.இதைத் தடுத்து விடுகின்றது எதிர் நிலை…!

ஆனால் திரௌபதை (உயிர்) என்ன செய்கின்றது?

பஞ்ச பாண்டவர்கள் அதாவது ஐந்து புலனறிவை இயக்கி நீங்கள் நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணிணாலும் உள்ளுக்குள் (உடலுக்குள்) உள்ள கௌரவர்கள் இதை அவமதிக்கின்றனர். திரௌபதை (உயிர்) அப்பொழுது படாத துயர்படுகின்றது.

ஒவ்வொரு வீட்டிலும் பார்த்தோம் என்றால் “எனக்கு ஒரே மனக் கலக்கமாக இருக்கின்றது.. அப்படி இருக்கின்றது.. என் வீட்டுக்காரர் இப்படிச் செய்கின்றார்...! என் பையன் இப்படிச் செய்கின்றான்..!” என்று இந்தப் போர் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

நல்லவைகளைச் செயல்படுத்துவதற்காக உடலுக்குள் எப்படிப் போர் முறைகள் நடக்கிறது…? என்பதனைத் தெளிவாக்கத்தான் மகாபாரதப் போரைக் காட்டினார் வியாசகர்.

நம் சாஸ்திரங்களில் இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள். அதில் தவறு எதுவும் இல்லை. நாம் புரிந்து கொண்டோமா…?