ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 14, 2018

மனிதனாகப் பிறப்பது அபூர்வம்...! பிறந்தாலும் மெய் ஞானத்தைப் பெறுவது மிகவும் அரிது...! – இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்...!


விஞ்ஞான அறிவால் வந்த நிலைகளால் பூமி முழுவதுமே அநேகமாக நச்சுத் தன்மைகளாகப் படர்ந்து விட்டது. நீர் நிலைகளும் பூமிக்குள் மாறிவிட்டது.

வான் வெளியிலேயும் அதே மாதிரி பிரபஞ்சத்திலும் மிக ஆற்றல் மிக்க நிலைகள் பரீச்சாந்திரமாக விண்ணிலே ஏவப்பட்டு அணு குண்டுகளும் ஹைட்ரஜன் குண்டுகளும் வெடிக்கப்பட்டு விஷத் தன்மைகள் படர்ந்து விட்டது.

நம் பூமியும் இந்த ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் சுழன்று கொண்டு இருக்கின்றது.
1.பூமிக்குள் வெடித்தாலும் சரி
2.பிரபஞ்சத்திற்குள் வெடித்தாலும் சரி
3.சூரியன் ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் இந்த நஞ்சின் தன்மை படர்கின்றது.

வான மண்டலமும் மற்றதும் மாறுபடப் போகும் போது இந்த உணர்வின் தன்மை மனிதன் சிந்திக்கும் செயல் இழந்து “மனிதனின் சிந்தனையே... கூண்டுடன் அழியப் போகின்றது...!”

ஆரம்பக் காலங்களில் மனிதன் மிருகத்தைப் போன்று இருந்தது போல இந்த உலகம் பூராமே அப்படி ஆகப் போகின்றது. மீண்டும் பூமி சுத்தமாக வேண்டும் என்றால் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

அன்று காட்டு மனிதர்களுக்குள் சிறுகச் சிறுக சிந்தனைகள் உருவாகி மீண்டும் மனிதருடைய அறிவின் நிலைகள் வந்ததோ இதைப்போல மீண்டும் பல சுற்றுக்கள் ஆகி...ஆகி மாறி...மாறி அடுத்த நிலையான சரீரத்தைப் பெறும் தகுதி வரும்.

நம் பூமியும் சீக்கிரம் வியாழன் கோள் போன்று பரிமணம் பெறும் நிலை பெறப் போகின்றது.

விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட விஷத் தன்மைகள் அனைத்தும் பிரபஞ்சத்திலே சேர்க்கப்பட்டு சூரியனுடைய ஒளிக் கதிர்கள் பூமிக்கு வருவதைத் தடைபடுத்தும் நிலைகள் வரப்போகின்றது. அவ்வாறு தடைபடுத்தும் போது
1.பூமியில் நீர் நிலைகள் அதிகமாகி
2.எடை கூடிச் சுழற்சியின் வேகம் அதிகமாகிவிடும்.

அப்பொழுது ஈர்க்கும் தன்மையான சூரியனுடைய காந்தப்புலன்கள் தடைப்படும் போது பூமி இறங்கும் நிலை (சூரியனை விட்டு விலகும்) வருகின்றது.

அவ்வாறு இறங்கும் நிலைகள் வந்து விட்டால் பூமி குளிர்ச்சியாகிப் பனிப் பாறைகளாகி விடும். எந்த நிமிடத்தில் இது ஏற்படும்...? என்று சொல்ல முடியாது.

நம்மிடம் ஒருவர் நன்றாகத்தான் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார். திடீரென்று கீழே விழுந்து விடுவார். பரிசோதித்தால் உடலில் “இரத்தமே இல்லை...!” என்று சொல்வார்கள்.

அதாவது உடலுக்குள் சில விஷத்தின் தன்மைகள் வளர்ந்தவுடனே
1.இரத்தத்திற்குள் இருக்கக்கூடிய செவ்வணுக்கள் எல்லாம் மடிந்து
2.வெள்ளணுக்களின் இயக்கங்கள் அதிகமாகப் படர்ந்து
3.அதனுடைய சத்துக்களை இது உறிஞ்சி விடுகின்றது.

இதைப் போன்று தான் பூமியின் தன்மையும் பெரும் கோளாக மாறி வியாழனைப் போல வெகு வேகமாக தன்னைத் தானே பிரிந்து செல்லும் நிலை வரும்.

இதனுடன் சேர்ந்து சுற்றும் சந்திரனும் அருகில் இருக்கக்கூடிய செவ்வாய்க் கோளும் மற்றவைகளும் இதிலிருந்து பிரிக்கப்பட்டுவிடும். ஏனென்றால் சூரியனின் ஆற்றல்கள் கிடைக்காமல் தடைபடப் போகும் போது சூரியனை விட்டு விலகிச் செல்லும்.

இதை விஞ்ஞானிகள் கண்டு கொள்ள வேண்டும் என்றால் பல வெகு காலம் ஆகும்.

இந்த உணர்வின் இயக்கங்கள் அது எவ்வாறு இயங்குகின்றது...? என்ற நிலையைக் குருநாதர் காட்டியதனாலே அதை உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

அதற்குள் கூடுமான வரையிலும் நம் நினைவலைகளை மாற்றிக் கொள்வது நல்லது. இல்லை என்றால் நம்முடைய சிந்தனைகள் அழிந்துவிடும்.

மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம். மனித வாழ்க்கையில் இப்பொழுது நாம் வாழ்ந்தாலும் மெய் ஞானிகள் பெற்ற சக்திகளைப் பெறுவது அரிதான (நல்ல) சந்தர்ப்பம் தான்.

ஆனால் எனக்குச் (ஞானகுரு) சந்தர்ப்பம் என் மனைவி உடல் நிலை சரியில்லாத போது ஏற்பட்ட சந்தர்ப்பம் தான் இத்தகைய பேருண்மையைக் கண்டறியும் சந்தர்ப்பம் வந்தது.

1.எனக்குக் கல்வி அறிவு இல்லாவிட்டாலும்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பதிவாக்கிய அருள் வித்துக்கள் எனக்குள் விளைந்து
3.அதை வளர்க்கும் தன்மையும் வந்தது.

அதே போன்று பல ஞான வித்துக்களை உருவாக்கும் நிலையும் குருநாதர் உருபெறச் செய்ததனால் இத்தகைய நிலையை நீங்களும் பெறும் வாய்ப்பாக இப்பொழுது அமைகின்றது.

இந்த ஆற்றல் மிக்க நிலையை உங்களுக்குள் இருக்கும் ஆயிரத்தெட்டு நல்ல குணங்களுக்குள்ளும் பதியச் செய்து உரமாகக் கொடுத்து ஊட்டமாக்குகின்றோம்.

இதன் துணை கொண்டு அந்த மெய் ஞானியின் அருள் ஒளியை நீங்களும் வளர்த்துக் கொள்ளுங்கள். நாளை வரும் விஷத் தன்மைகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும். அதற்குத் தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.

இதை வளர்த்துக் கொள்வோர் சிறிது பேர் இருந்தாலும் உங்கள் மூலம் இந்தக் காற்று மண்டலத்தில் மெய் ஞானிகள் உணர்வுகள் பரவி மற்றவர்களையும் காத்திடும் சக்தியாகப் பரவும்.