ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 12, 2018

மூலாதாரத்திலோ அல்லது முதுகுத் தண்டிலோ தட்டி ஏழுப்பி எந்தச் சக்தியும் பெற முடியாது...!


தியானம் எடுத்துக் கொண்டவர்கள் அந்த வலுவின் துணை கொண்டு முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண்ணிலே உந்திச் செலுத்தி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும். அவர்களை ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

அவர்களை அங்கே இணைத்து விட்டால் அவர்கள் மூலம் மகரிஷிகளின் ஆற்றலை எளிதில் பெற முடியும்.

1.ஒரு செயின் தொடர் போல நாம் எடுத்துக் கொண்டால்
2.அடுத்து நாம் ஆத்ம சுத்தி செய்யும் போது
3.மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணியவுடனே
4.அந்த ஞானிகளால் வெளியிடப்பட்ட சக்தியைப் பெறுகின்றோம்.

 எந்த ஞானிகள் சப்தரிஷி மண்டலங்களாக இருக்கின்றார்களோ அவர்கள் துணை கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற நண்பர்களின் உறவினர்களின் (ஏனைய) உயிராத்மாக்களையும் அங்கே உந்தித் தள்ளும் ஆற்றல்கள் பெறுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளை உருவாக்கச் செய்வதுதான் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த தியானத்தின் உட்பொருள். குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் அல்ல.

1.மூலாதாரத்தைத் தட்டி எழுப்புவதும்...
2.முதுகுத் தண்டை தட்டி எழுப்புவதும்...
3.குரு சொன்ன நிலைகள் படி நான் செய்ததும்
4.ஜிர்...ர்ர்ர்... என்று எனக்குள் சக்திகள் இறங்குகிறது என்று சொல்வதெல்லாம் பைத்தியக்காரத்தனமானது.

“மந்திர ஒலி...” கொண்டு எந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டனரோ அது அந்த இயக்கத்தின் தன்மை சிலதுகள் தெரியும். (மந்திர ஒலி என்பதே மனித உடலில் விளைய வைத்து எடுக்கப்பட்ட உணர்வு தான்)

மனித உணர்வுக்குள் நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற நிலைகள் மந்திர ஒலியால் எடுக்கப்பட்ட நிலையை
1.அதை மீண்டும் நினைவூட்டும் போது
2.இன்னொரு மனித உடலுக்குள் இணைக்கப்பட்ட இந்த உணர்வுகள்
3.அதைத் தொட்டவுடன்... “ஜிர்...ர்ர்ர்...!” என்று இருக்கும்
4.உடனே... ஆகா...! இவர் பெரிய மகான் என்று போற்றுவோம்.
5.அவர்கள் எடுத்துக் கொண்ட மந்திர ஒலிக்குள் சேர்க்கப்பட்ட சில நிலைகள் தான் அவ்வாறு செயல்படுத்துகின்றது.
6.மெய் ஞானியின் அருள் சக்தியைப் பெறும் தகுதி இல்லை
7.அதன் அருகிலே சென்றாலும் அந்த எண்ண அலைகள் இவர்களைச் சுட்டுப் பொசுக்கி விடும்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்திருக்கும் விஷத்தை நம் உடல் மலமாக மாற்றிவிடுகின்றது. நல்ல சத்தை உடலாக மாற்றிக் கொள்கின்து.

அதைப் போன்று தான் மெய் ஞானிகளின் ஆற்றல்களை நாம் எடுத்து உடலில் சேர்த்து விளையை வைத்துக் கொண்டால் நம் உயிராத்மா வெளியே வந்த பின்
1.உணவில் மறைந்த விஷத்தை உடல் கழித்துவிடுவது போல்
2.உடல் பெறும் உணர்வைக் கழித்துவிட்டு
3.எந்த விண்வெளியின் ஆற்றலை நுகர்ந்தோமோ நம் உயிராத்மா அங்கே தான் போய்ச் சேருமே தவிர இங்கே அல்ல.
4.ஆக சாதாரண மனிதன் யாரும் நம்மைக் கவர்ந்து கொள்ள முடியாது.
5.இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் யாம் சொல்வது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். நீங்கள் சொல்வது எல்லாம் மிகவும் சரி தான் என்பார்கள்.

வீட்டிற்குள் போய் உட்கார்ந்தவுடன் என் பையன் சொன்னபடி கேட்காமல் இருக்கின்றானே...! இப்படியே தப்பு செய்து கொண்டிருக்கின்றானே...! என்று எண்ணினால் போதும்.

அவன் மேல் உள்ள பாசத்தினால் இத்தகைய வெறுப்பான எண்ணங்களை எடுத்துக் கொண்ட பின் உடலை விட்டுப் பிரியும் நம் உயிரான்மா அடுத்து நேராக அந்தப் பையன் உடலுக்குள் தான் போகும்.  வேறு எங்கேயும் போக முடியாது.

நாம் வாழ்ந்த காலத்தில் வெறுப்பும் சலிப்பும் வேதனையும் கோபமும் ஏற்படுத்திக் கொண்ட பின்
1.வேறு எந்த உடலுக்குள் சென்றாலும்
2.இதே உணர்வின் தன்மை தான் அங்கேயும் இயக்கும்.
3.அதிலிருந்து மீளும் வழி இல்லை...!

இதைப் போன்ற நிலைகளில் இருந்து மீளுவதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு ஒவ்வொரு நாளும் இந்த உபதேசத்தின் தன்மை கொண்டு அந்த மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

செடிகளுக்கு உரமிட்ட பின் அந்தப் பயிர் செழித்து வளர்வது போல் உங்களுடைய நினைவலைகளை அங்கே அந்த மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளச் செய்து பேராற்றல்களைப் பெறச் செய்கின்றோம்.

உபதேசித்த உணர்வுகள் கொண்டு அந்த மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டபின் இந்த உடலை விட்டுச் சென்றால்... “அவதார புருஷனாகக் கல்கி...!” என்ற நிலையை நிச்சயம் அடைகின்றீர்கள்.

நம்மைப் போன்று மனிதர்களாக வாழ்ந்தவர்கள் சென்றடைந்த எல்லை அது தான்.