ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 14, 2018

தீமைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வலுப்பெறுகின்றது - காட்டிற்குள் நடந்த நிகழ்ச்சி

குருநாதர் என்ன செய்தார்?

எம்மைக் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் ஒரு பச்சிலையைக் காண்பித்து..., இது பேசுமாடா? பாருடா பச்சிலையை என்றார்.

அது எப்படி சாமி பேசும்? என்றேன். "பேசாது" என்றேன்.

இப்படி ஒரு 100 செடியைக் காட்டிக் கேட்டார். பேசாது பேசாது என்று சொல்லிக்​ கொண்டே வந்தேன். பல தடவைகள் கேட்டபின் பிறகு நான் பச்சிலை பேசும் என்று சொன்னேன்.

அது எப்படிடா பேசும் என்று எம்மைக் கேட்டார்?

எனக்கு என்ன தெரியும்...!

பிறகு எல்லா உண்மையயும் சொல்வார்.

இதே மாதிரி, ஒரு புலி செத்துப் போய்விட்டது, இது என்னடா செய்யும்? என்று கேட்டார்?

சாமி, அது செத்துப்போய்விட்டது என்றால், எப்படி எதை எதைக் கொன்றதோ அங்கே போய் இந்த உயிர் பிறக்கும் என்றேன்.

அது எப்படி..? என்று நீ சொல்லுடா என்பார். அது செத்துப் போய்விட்டது. அதில் இருந்த அது சேர்த்த சத்தெல்லாம் எங்கடா போனது? என்பார்.

அது செத்துப் போனால் ஆவி எல்லாம் காற்றிலே போகும் என்று யாம் சொன்னால், ரெண்டு பேருக்கும் தர்க்கம் ஆகும்.

யாம் இந்த மாதிரிச் சொன்னாலும்
1.உடனே அவர் அது எப்படிக் காற்றில் போகும்?
2.காற்றில் போனால் என்ன செய்யும்? என்று கேட்பார் குருநாதர்.
3.இப்படியெல்லாம் விளக்கம் கேட்பார்.

அன்றைக்கு யாம் காட்டுக்குள் செல்லும் பொழுது சாப்பாடு இல்லை. நடந்து போகக் கூட முடியாது.

நாம் ஏதோ நினைக்கின்றோம். ஆனால் காட்டுக்குள் போய் நடந்து போகக்கூடிய சக்தியை இழந்துவிட்டால் என்ன செய்ய முடியும்?

அப்பொழுது, அந்த இடத்தில் வேதனை வரும்.

1.அந்த வேதனையை எடுக்கப் போகும் போது என்ன ஆகும்?
2.வேதனை ஏற்பட்ட உடனே குருநாதரை எண்ணி.., இப்படி இந்த மாதிரிப் பண்ணிவிட்டாரே,
3."எப்படியும்.., அவர் சொன்ன இடத்திற்குப் போக வேண்டும்" என்ற எண்ணம் வரும்.

எமக்கு வேதனை வரும் பொழுது சொல்கின்றார் குருநாதர்.

வேதனைப்படுத்தி விட்டார் என்று நீ எண்ணினால் உன்னால் நடக்க முடியாது. ஆனால், நடக்க முடியவில்லை என்றால் நீ என்ன செய்கிறாய்...?”

அங்கே அந்த இடத்திற்கு நாம் போய்விட்டால், உடனே கொஞ்சம் சௌகரியமாக இருக்கலாம் என்ற எண்ணம் வருகின்றதல்லவா?

1.எப்பொழுது வருகிறது?
2.அங்கே... அந்த எண்ணம் வருகின்றது.
3.அப்பொழுது அந்த எண்ணம் வரும் பொழுது அந்த உணர்வு வருகின்றது.
4.இதிலிருந்து "எப்படியும் தப்பிக்க வேண்டும்...," என்ற எண்ணம் வருகின்றது.

இப்படித்தான் தீமைகளை நீக்கும் "வலுவான எண்ணத்தை.., அனுபவபூர்வமாக" எமக்குக் கொடுத்தார் குருநாதர்.