ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 27, 2018

கம்ப்யூட்டருக்குள் இருக்கும் பதிவு தான் (SOFTWARE) அதைச் சீராக இயக்குகின்றது - அதுபோல் மெய் ஞானிகளின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் “மெய் ஒளியைச் சீராக உங்களுக்குள் காணலாம்”


மனிதர்கள் தனக்கு வேண்டியதை டைப் (TYPING) செய்து ஒரு கம்ப்யூட்டரில் ஆணையிட்டு (COMMAND) விடுகின்றார்கள். இன்னென்ன நிலைகள் தான் என்று ஆணையிட்டவுடனே அந்த உணர்வலைகள பதிவாகி (RECORD) விடுகின்றது.

உதாரணமாக குளிரூட்டக் கூடிய ஒரு இயந்திரத்தில் இவ்வாறு ரெக்கார்ட் செய்து வைத்து இயக்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அங்கிருக்கும் சீதோஷ்ண நிலை (CLIMATE) மாறுகின்றது... “வெயில் அதிகமாகிறது” என்ற இந்த உணர்வின் அலைகள் வந்தவுடனே அந்த மாற்றத்திற்குத் தகுந்த மாதிரி உடனே அந்தக் கம்ப்யூட்டர் என்ன செய்கின்றது...?

அதைச் சமப்படுத்துவதற்கு உடனே ஒரு சுவிட்சை மாற்றுகின்றது. அலை வரிசை மாறி அந்தக் குளிர்ச்சியாக்கும் (COOLING) நிலையைத் தட்டி விட்டுவிடுகின்றது. தானாக அவ்வாறு இயக்கிக் காட்டுகிறது.

மனிதன் அவன் கண்டுபிடித்த இயந்திரத்தில் எது பதிவு செய்யப்பட்டதோ அதற்குத் தகுந்த மாதிரி அது இயங்கி சீராக (AUTOMOATIC) வேலை செய்கிறது. ஆக எது பதிவோ அது தான் இயக்குகின்றது.
1.இயந்திரத்தில் எப்படியோ அது போல் தான்
2.மனிதருக்குள்ளும் நாம் எதைப் பதிவாக்குகின்றோமோ அது தான் நம்மை இயக்கும்.
3.இதைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

உதாரணமாக அண்ணனும் தம்பியும் ஒரு கல்லூரியில் படிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அண்ணன் பொறியியல் படிக்கின்றார். தம்பி வேறு ஒரு துறையைப் படிக்கின்றார்.

அப்பா… தம்பிக்கு மட்டும் பணம் அதிகமாகக் கொடுக்கின்றார். எனக்கு மட்டும் கொடுக்க மாட்டேன் என்கிறார். நான் கேட்டுக் கேட்டு வாங்க வேண்டி இருக்கின்றது. ஏதாவது அவசரத்திற்குக் கேட்டால் கொடுக்க மாட்டார் என்று அண்ணன் கொஞ்சம் முறைத்துக் கொண்டு வந்தால் போதும்.

இந்த உணர்வு உடலுக்குள் அதிகமாகக் கலந்துவிடும். அப்புறம் இன்ஜினியர் படிப்பு என்ன ஆகிறது...? என்று பார்த்துக் கொள்ளலாம். பணம் தரவில்லை என்கிற பொழுது அதனால் சண்டையாகிவிடும்.

 ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கின்றார் என்று இதையே அண்ணன் வளர்த்துக் கொண்டு வருவார். தம்பிக்குப் பணம் கொடுக்கும் போதெல்லாம் இந்த உணர்வுகள் விளைந்து கொண்டே வரும்.

வெறுப்பின் தன்மை அதிகமாகும் பொழுது கடைசியில் படிப்பில் மட்டம் ஆகிவிடுவார். அப்புறம் பரீட்சைக்குப் போனால் எல்லாம் கோட்டை விட்டுக் கொண்டே இருப்பார். இன்ஜினியராகத் தேறி வர முடியாது.

ஆனால் தம்பியோ அப்பா சொல்லைக் கேட்டு… “எப்படியும் நன்றாக இருக்க வேண்டும்…” என்ற அந்த உணர்வின் தன்மை பதிவாகி அது அவருக்குள் விளையும் பொழுது அவர் தேர்ச்சி ஆகி வந்து விடுவார்.

அதைப் போன்று தான் யாம் (ஞானகுரு) மெய் ஞானிகளைப் பற்றி உபதேச வாயிலாகச் சொல்லிக் கொண்டு வரும்போது நீங்கள் இதைக் கூர்ந்து கவனித்து ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் மீண்டும் நினைத்துப் பார்க்கும் போது அந்த ஞானிகள் உணர்வு இயக்கி உங்களை நல்லதாக்கும்.

1.என்னமோ சாமி (ஞானகுரு) சொல்லிக் கொண்டு இருக்கின்றார் என்கிற வகையில் சாதாரணமாக எண்ணிக் கொண்டோ...
2.அவசர வேலையாகப் போக வேண்டும் என்ற நிலையிலோ...
3.யாராவது தவறு செய்கின்றார்கள் என்றால் அவர்களைப் பற்றி எண்ணிக் கொண்டோ...
4.கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே “நேரமாகி விட்டதே...!” சீக்கிரம் முடித்தால் பரவாயில்லை என்ற எண்ணத்தில் இருந்தால்
5.”பரவாயில்லை...!” என்கிற நிலையில் அது தான் முன்னணியில் நிற்கும்.
6.அதாவது அந்த ஞானியின் அருள் சக்தியைப் பெற விடாமல் “உங்கள் உணர்வு அதைத் தடுக்கின்றது…!” என்று பொருள்.

யாம் கொடுக்கும் உபதேச உணர்வை எந்த எண்ணத்தில் எண்ணி உங்களுக்குள் கலக்கின்றீர்களோ அந்த நிலை தான் உங்களுக்குள் பதிவாகும். ஏனென்றால்
1.பதிவு இல்லை என்றால் “எதையுமே” நினைவுக்குக் கொண்டு வர முடியாது.
2.நினைவு இல்லை என்றால் நாம் சக்தியைப் பெற்று வளர்க்க முடியாது. 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேச வாயிலாக ஒவ்வொன்றையும் எமக்குள் பதிவாக்கித் தான் மெய் ஞானிகளின் ஆற்றலைப் பெறச் செய்தார். அதை எம்மால் வளர்த்து உங்களுக்கும் தெளிவாகச் சொல்ல முடிகின்றது.

உங்களுக்குள் அர்த்தமாகவில்லை என்றாலும் கூட யாம் உபதேசிக்கும் உணர்வுகள் “ஆழமாகப் பதிவாக வேண்டும்…!” என்ற ஏக்கத்தில் நீங்கள் இருந்தாலே போதுமானது.

பதிவான உணர்வுகள் (COMMAND) கொண்டு ஒரு கம்ப்யூட்டர் இயங்குவது போல் நீங்கள் நினைவுபடுத்தியவுடன் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குத் தக்க சமயத்தில் ஞானத்தின் அறிவை ஊட்டும்.
1.உங்களை அந்த மெய் வழியில் அழைத்துச் செல்லும்.
2.மெய் ஞானிகள் சென்ற பாதையில் நீங்கள் செல்ல ஏதுவாகும்.
3.பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யும்.