ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 5, 2018

நமக்குள் ஒருவருக்கொருவர் சண்டை எதனால் எப்படி வருகின்றது…! என்றுமே சந்தோஷமாக வாழ நாம் என்ன செய்ய வேண்டும்…?


உதாரணமாக ஒரு தெருவிலுள்ள மக்கள் இன்னொரு தெருவிற்குப் போனால் அந்தத் தெருவிலுள்ள மக்கள் சண்டைக்குப் போகின்றார்கள்.

இப்போது நாம் கர்நாடகாவிலிருந்து தண்ணீர் விடவில்லை என்று சண்டை போடுகின்றோம். இங்கே தமிழ் நாட்டுக்குள்ளேயும் பவானி சாகரிலிருந்து பக்கத்தில் மற்ற ஊருக்குத் தண்ணீரை அது எப்படித் திறந்து விடலாம் என்று இங்கே சண்டைக்குப் போகின்றார்கள்.

கர்நாடகாவில் தண்ணீர் விடவில்லை என்று அங்கே சண்டைக்குப் போகின்றோம். இங்கே விடவில்லை என்று நம் தமிழ் நாட்டிற்குள் சண்டைக்குப் போகின்றோம். அப்போது
1.மன இரக்கம் இருக்கின்றதா…!
2.ஒன்றுபட்டு வாழும் நிலை இருக்கிறதா…? என்றால் இல்லை.

ஒரு தெருவிலே வளரும் உயிரினங்கள் இந்தத் தெருவிலே வளர்ந்தது என்றால் அடுத்த தெருப் பக்கம் வரும் போது அடுத்த தெருவில் வளரும் மற்ற உயிரினங்கள் அதை விடுவதில்லை. அந்த நாய் இதைப் பார்த்தவுடனே சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்.

காடுகளிலே வளரக்கூடிய புலிகளை எடுத்துக் கொண்டாலும் வேறொரு பக்கம் உருவாகி வாழ்ந்த புலிகள் இந்தப் பக்கம் தப்பி வந்தால் இந்தப் புலிகள் எல்லாம் சேர்ந்து அதைக் கொல்லப் போகின்றது.

இதைப் போன்று கூட்டாக வாழும் மான் இனங்களில் ஒரு பகுதி இணைந்து வாழ்ந்தாலும் இன்னொரு பகுதிக்குச் சென்றால் இவையெல்லாம் எதிர்த்துத் தாக்கும் நிலை வருகின்றது. ஏனென்றால்
1.தன் உணவுக்காக அங்கே சென்று விட்டால்
2.நமது உணவு போய்விடுமே…! என்று இப்படிப் போர் முறைகள் வருகின்றது.
3.இயற்கையிலிருந்தே இந்த நிலை வருகின்றது.
4.இதைப் போன்று தான் மனித நிலைகளிலும் மாறுபட்டு வந்தது.

 நாட்டுக்கு நாடு அரசர்கள் மற்ற நாட்டை அடிமைப்படுத்தி அந்த நாட்டுக்காரன் இங்கே வந்தால் நம்மை அடிமைப்படுத்திவிடுவான் என்று இப்படி ஒருவருக்கொருவர் அடிமைப்படுத்தும் தன்மை இன்று வரையிலும் வந்துவிட்டது.

தன் பிள்ளையை நாம் பாதுகாக்கின்றோம். அவன் பிள்ளையை அவன் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை வந்தாலும் அந்த நாட்டிலிருந்து இங்கே ஒருத்தன் வந்தால் அவனை இரக்கமற்று நாம் கொல்கின்றோம்.

மதம் இனம் என்ற நிலைகளை நாம் வளர்த்துக் கொண்டால் அது மற்ற இனத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை இருக்கின்றதென்றால் அதற்குப் பட்சாதாபம் கூட நாம் பார்ப்பது இல்லை. அடுத்த இனத்துக்காரன் என்று கொல்லத் கொல்லுகின்றோம்.

இதனின் உணர்வின் இயக்கம் என்ன…?

நாம் எடுக்கும் பேச்சும் மூச்சும் சூரியனின் காந்தப்புலன் கவர்ந்து கொள்கின்றது. அந்த அலைகளை இன்னொரு மனிதன் நுகர்கின்றான்.

உதாரணமாக ஒருவன் தவறு செய்கின்றான் என்றால் அந்தத் தவறு செய்த மனிதன் வெளிப்படுத்திய உணர்வை  நல்ல மனிதன் நுகர்ந்தான் என்றால்
1.அந்த உணர்ச்சியின் தன்மை அந்த நல்ல மனிதனுக்குச் செல்லும் போது
2.தவறு செய்கிறான் என்ற உணர்வின் அந்த எண்ணங்கள் அங்கு தோற்றுவிக்கின்றது.
3.தவறு செய்கிறான் என்று சொன்னாலும் தவறு செய்தவனுக்கோ
4.நம்மைப் பற்றி இவன் தவறு சொல்கிறானே என்ற நிலைகள் அவன் மேலே பழி வருகின்றது.
5.என்னை இவன் தவறென்று சொல்கிறான் என்ற நிலையில்
6.அப்போது அவனை எதிரியாகப் பார்க்கின்றான்.
7.அவனுக்கு எப்படியும் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வு தான் வருகின்றது.

நாம் வெளிப்படுத்தும் உணர்வுகளை மற்றவர்கள் நுகர்ந்தால் அந்த நுகர்ந்த உணர்வு  அவர்களில் எப்படிச் செயல்படுகின்றது என்று இதைப் பார்க்கலாம்.

இப்போது நண்பர்களாகப் பழகுகின்றோம். அன்பாகப் பழகுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நம் கூடப் பழகும் நண்பன் இன்னொரு பக்கம் தவறு செய்கின்றான். அவன் பெரிய குற்ற இயல்பைச் செய்கின்றான். அப்போது அவனை… “ஏன் இப்படிச் செய்கின்றான்…?” என்று கேட்கின்றார்கள்.

1.நண்பன் மேல் பற்று இருக்கும் பொழுது
2.அந்தப் பாசத்தினால் அவன் தவறை மறந்து
3.தவறு செய்தவனைக் கேட்கப் போனவனை அவனையும் தாக்க ஆரம்பிக்கின்றார்கள்.
4.இது தான் இன்று இருக்கக்கூடிய உணர்வின் இயக்கம்.

பற்று எதன் மேல் இருக்கின்றதோ இவன் உணர்வும் இங்கே வந்து விடுகின்றது. இந்த உணர்வின் வழிப்படியே இவர்கள் செயலும் மாறுகின்றது என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து இதைப் போன்ற தீமைகளோ பகைமை ஊட்டும் உணர்வுகளோ நம்மை இயக்காத வண்ணம் தடுத்துப் பழக வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும். அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று இந்த உணர்வுகளை நாம் காலையில் எழும் பொழுதும் இரவு படுக்கச் செல்லும் பொழுதும் கண்டிப்பாக எண்ணுதல் வேண்டும்.
1.நம்மை அறியாது வரும் பகைமைகளை அகற்ற முடியும்.
2.மன அமைதி கிடைக்கும்.
3.உடல் நலத்துடன் என்றென்றும் மகிழ்ந்து வாழ முடியும்.