ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 25, 2018

வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பை... எண்ணையை வைத்து வறுத்து அகற்றுவது போல் “மகரிஷிகள் உணர்வை வைத்து” நம்மையறியாது இயக்கும் தீமையான உணர்வுகளை அகற்ற வேண்டும்

உதாரணமாக உடைகளில் அழுக்குப் பட்டதும் துவைத்து விடுகின்றீர்கள். உடலில் அழுக்குப் பட்டதும் குளித்து விடுகின்றீர்கள்.
1.உங்கள் உணர்வுடன் சேர்ந்த அழுக்கைத் துடைக்க வேண்டும் என்று
2.நீங்கள் எண்ணவில்லை என்றால்... யார் அதைத் துடைப்பது...?
3.துடைக்கக்கூடிய சக்தி உங்களிடம் இருக்கின்றது.
4.அதைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமல்லவா...!

அதைப் பயன்படுத்தாமல் என்ன செய்கின்றோம்...?

அங்கே சண்டை போடுபவர்களையும் வேதனைப்படுபவர்களையும் வேடிக்கை பார்த்தோம். உற்றுப் பார்த்த அந்த உணர்வுகள் அந்தந்த குணத்தின் அணுக்களாக விளைந்து அது நம் உடலில் நோயாக மாறுகின்றது.

அம்மம்மா... ஐய்யய்யோ ஐய்யயோ...! என்று நம் உடலில் அதுவாக ஆகி விடுகின்றோம். அதை நாம் மாற்ற வேண்டுமல்லவா...!

 நாம் எல்லோரும் படித்து விட்டு வரவில்லை. படித்து விட்டு வந்தாலும் கூட இதிலே (நமக்குள் இயக்கும் உணர்வுகளில்) கவனம் இருப்பதும் இல்லை.

படித்தவர்களும் சரி. படிக்காதவர்களும் சரி. சந்தர்ப்பத்தில் நாம் கடுமையான வேதனைப் பட்டுவிட்டோம் என்றால் அந்த வேதனையிலிருந்து மீள முடியவில்லை... மீளத் தெரியவில்லை...!

ஆனால் அந்த வேதனை நம் உடலில் நோயாக உண்டாக்கிக் கொண்டு இருக்கின்றது. நம் சொல் தொழிலையும் கெடுக்கின்றது. குடும்பத்தில ஒற்றுமையும் கெடுக்கின்றது.

வீட்டில் இருக்கும் பொழுது அந்த வேதனையான எண்ணங்களையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகி விடுகின்றது.

பின்பு வீட்டில் நாம் சும்மா இருந்தாலும் கூட அந்தச் சங்கட அலைகள் நம் மீது பாய்ந்து அந்தச் சங்கடத்திற்குத் தக்கவாறு நம்மை இயக்கும்.

அடிக்கடி சங்கடமாக வேதனையாகப் பேசிக் கொண்டு அந்த உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்டோம் என்றால் மழை மோடம் (வெயிலில்லாது இருட்டாகி) போட்டால் போதும்.

அப்போது வீட்டிற்குள் என்ன செய்யும்..? வீட்டில் “கபகபா...!” என்று அந்த உணர்வலைகள் வரும். அப்போது அந்த நேரத்தில் சண்டை போட்டது... போனது வந்தது... “என்ன வாழ்க்கை...?” என்று வெறுப்பான உணர்வுகள் தான் தோன்றும். “பார்க்கலாம்...!”

மழை பெய்யும் அந்த நேரத்தில் வீட்டில் உட்கார்ந்து பாருங்கள்.

என்னத்த இது…? அப்படி இருக்கிறதே... இப்படி இருக்கின்றதே...! என்ற உணர்வுகள் தன்னை அறியாமலே பல வெறுப்பான நிலைகள் கொண்டு போவதைப் பார்க்கலாம். உங்களை அப்படி எண்ண வைக்கிறதைப் பார்க்கலாம். உடல் சோர்வடையும்.

இந்த மாதிரி உணர்வுகளை மாற்றுவதற்கு வாய்க்கு ருசியாக ஏதாவது செய்து தின்று கொண்டு இருந்தால் இது கொஞ்சம் மாறும்.

வாய்க்கு ருசியாக என்று சொல்லும் பொழுது லட்டு ஜிலேபி இருந்தால் ஒத்துக் கொள்ளாது.  
1.காரசாரமாக அந்த உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய காரம் தான் வேண்டும்.
2.ஏனென்றால் அந்த உணர்வின் இயக்கம் அது.

காரமான பதார்த்தத்தை எடுத்துச் சாப்பிட்டோம் என்றால் “ஜிர்...ர்....ர்...” என்று அந்த உணர்ச்சிக்குப் போய்விடும். அப்போது இது அதை மாற்றுவதற்கு அது உதவுகிறது.

இதைப்போல நாம் ஒவ்வொரு உணர்ச்சிகளும் நமக்குள் என்ன செய்கின்றது...? எப்படி இயக்குகிறது...? என்கிற வகையில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறர் சண்டையிடுவதையும் துன்பப்படுவதையும் உற்றுப் பார்த்தோம். அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் விளைந்து நோயாகிச் சிரமப்படுகின்றோம்.

இந்த இக்கட்டான நிலை வரப்போகும் போது நம் பையன் வந்து விளையாண்டு கொண்டிருக்கும் பொழுது “டப்...!” என்று ஒரு பாத்திரம் கீழே விழுந்தால் போதும்.

தொலைந்து போகிறவன் இப்படிச் செய்து கொண்டு இருக்காயேடா...! என்று ஆத்திரம் வரும். அவனைச் சாபமிட்டுப் பேச வைக்கச் சொல்லும்.

ஆண் பிள்ளையாக இருந்தால் “ஒரு அடி போட்டேன்...! என்றால் பாருடா...! என்று அவனை உதைக்கச் சொல்லும்.

ஏனென்றால் அந்த எரிச்சலான உணர்வுகள் நம் உடலில் நோயால் வந்த இக்கட்டைச் சமாளித்து கொண்டு இருக்கும் போது குழந்தைகளைப் பார்த்தவுடனே தன்னை அறியாமல் இந்த நிலைகளைச் செய்வோம்.

தவறு யார் செய்வது...? இதைத் தான் கீதையிலே எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று காட்டுகின்றார்கள்.

இப்போது நாம் குழம்பு வைக்கும் போது காய்களில் இருக்கக்கூடிய காரலை நீக்குவதற்காக வேக வைத்து விடுகின்றோம்.

வெண்டைக்காயில் வழுவழுப்பு இருக்கிறது என்றால் எண்ணெய் வைத்து லேசாக ஒரு தரம் வறுத்து விட்டோம் என்றால் அந்த வழுவழுப்பு  இருக்காது வெண்டைக்காய் ருசியாக இருக்கின்றது.

ஆனால் அதே வெண்டைக்காயை வறுக்காமல் அப்படியே குழம்பில் போட்டால் என்ன செய்யும்...? குழம்பெல்லாம் வழுவழு என்று ஆகிவிடும். குழம்பை ஊற்றிச் சாப்பிட முடியவில்லை. சுவையும் மாறுகின்றது.

ஆக அந்த வெண்டைக்காயை முதலில் எண்ணெயை விட்டு வறுத்துவிட்டு அந்தக் குழம்பில் போடும் போது சுவையாக இருக்கும். “ரொம்பப் பிரமாதமாக இருக்கின்றது...!” என்கிறோம்.

அப்போது என்ன செய்கிறது...?
1.அந்த வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பை
2.அது கக்காத நிலைகள் கொண்டு அதற்குள் அடக்கி விட்டு விடுகின்றது.
3.அது நமக்குத் தெரிகின்றது. அதனால் அதை ருசியாகச் சமைக்கின்றோம்.

நாம் குழம்பு வைக்கும் போது இத்தனை ருசியாக வைத்து அதனுடைய நிலைகளை அடக்கிச் சமைத்து விடுகின்றோம். இதைப்போல நம் உடலில் வேதனையான உணர்வுகள் வருகின்றது என்றால் அதை அடக்கக்கூடிய சக்தி வேண்டுமல்லவா...!

அதற்காகத்தான் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். அவர்கள் நஞ்சினை அடக்கிப் பழகியவர்கள். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றியவர்கள் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் பேரருள் உணர்வுகளைச் சுவாசித்தோம் என்றால் நம்மையறியாமல் இயக்கும்
1.தீமையான உணர்வுகளை இயக்கவிடாது அடக்கித்
2.தீமைகளைப் பிளந்து “அவைகளை”
3.நன்மையின் பயனாக மாற்றிக் கொண்டு வர முடியும்.