ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 6, 2018

இந்த மனித உடலுக்குப் பின்… நாம் யாருடன்… “எங்கே செல்ல வேண்டும்…?” என்ற எண்ணமே யாருக்கும் வருவதில்லை…!

ஐயப்பா...! எனக்குக் கஷ்டமாக இருக்கின்றதே எனக்கு இப்படி எல்லாம் சிரமமாக வருகிறதே..! என்று சொல்லித் தான் ஐயப்பனை வணங்கி வருகின்றார்கள்.

மக்களைக் காக்க அவர் பல நன்மைகளைச் செய்தாலும் ஐயப்பனை எண்ணித் தன் கஷ்டத்தை எல்லாம் சொல்லி இன்னும் கொஞ்சம் வேதனையை அவரிடம் கொட்டி அவரைக் கீழே இழுக்கும் நிலை தான் அது...

எந்த ஞானிகளை எண்ணினாலும் இப்படித்தான் சாதாரணமாக நம் கஷ்டங்களையும் குறைகளையும் வேதனைகளையும் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் பெற்ற ஆற்றல்களை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.

திருமூலரைப் பற்றி எடுத்துக் கொண்டாலும் பதஞ்சலி முனிவராக இருக்கப்படும் பொழுது மந்திரம் யந்திரம் என்று பல நிலைகளில் அவர் செயல்பட்டவர் தான்.

பின்னாடி… மந்திரம் யந்திரம் எல்லாம் “தவறு…!” என்று உணர்ந்து இன்னொரு (மாடு மேய்ப்பவன்) உடலுக்குள் வந்தாலும் உண்மையின் நிலையைத் “திருமூலம்…!” என்று கண்டுணர்ந்தார்.

திருமூலம் என்பது இயற்கையின் உணர்வின் அலையை அன்று அகஸ்தியன் கண்டுணர்ந்ததைத் தனக்குள் உணர்ந்து... உணர்ந்த நிலைகளைத் திருமூலராக நின்று வெளிப்படுத்திக் காட்டினார்.

1.ஒவ்வொரு நிலைகளிலும் உள்ள இயக்கச் சக்தியை உணர்ந்து
2.(நாம்) மனிதனாவதற்கு முன் உயிர் எப்படி ஒளியானதோ
3.அந்த ஒளியின் தன்மையை (நம்மை உருவாக்கிய சக்தியை) அதைத் தான் திருமூலம் என்பது.
4.அணுவிற்குள் இருக்கும் இந்த உணர்வின் தன்மையைத்தான் திருமூலர் இயக்கினார்… உணர்ந்தார்…!

உயிரின் இயக்கத்தையும் அணுவிற்குள் இருக்கும் ஆற்றலையும் அந்த மூலத்தையும் அவர் உணர்ந்து வெளிப்படுத்தியிருந்தாலும்
1.அவர் சொன்னதைத் “திருமூல மந்திரம்…” என்று நாம் சொல்லி
2.அவன் அருள் பெறவேண்டும் என்று ஏங்கினாலும்
3.இந்த உடலின் சுகபோகத்திற்குத்தான் பயன்படுத்துகின்றோம்
4.விண் செலுத்தும் மார்க்கமோ… விண் செல்லும் மார்க்கமோ… இல்லாதபடி ஆகிவிட்டது.

அதே போல 5300 ஆண்டுகளுக்கு முன் அணுவின் ஆற்றலின் இயக்கத்தின் தன்மையைக் கண்டறிந்த போகனோ அவன் உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அவன் விண் சென்றாலும் கூட போகன் மந்திரம் என்று “சம்போ மகாதேவா…!” என்று மாற்றிவிட்டார்கள்.

தாவர இனச் சத்தின் போதையை மாற்றி அதனின் உணர்வு கொண்டு இன்றைய உடலின் சுகத்திற்கும் தன்னுடைய பெருமைக்கும் தான் இன்று அதைச் செயல்படுத்துகின்றனரே தவிர
1.அந்தப் போகமாமகரிஷி சொன்ன உணர்வின் தன்மை கொண்டு
2.விண் செல்ல வேண்டும்…! என்று யாரும் எண்ணவில்லை.

தனது உடலின் ஈர்ப்புக்குத் தனது சுகத்திற்கு அவனுடைய சக்தியை நாம் உணர்ந்து அவனின் சக்தியின் துணை கொண்டு இந்த உடலே பிரதானம் என்ற நிலைகளில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சதமற்ற இந்த உடலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.

1.இந்தச் சதமற்ற உடலை விட்டுப் பிரிந்து
2.என்றும் ஒளியின் சரீரமாக உயிருடன் ஒன்றி
3.அவனுடன் அவனாக (உயிருடன்) அவனாக வாழ வேண்டும் என்று விரும்பிய
4.அந்த மகரிஷிகளின் நிலையை நாம் காணவில்லை.
5.அந்த நிலைகளை இப்பொழுது யாரும் எண்ணுவதில்லை.