ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2018

“விபூதி வேண்டும்… விபூதி கொடுத்தால் போதும்…,” என்ற எண்ணத்தில் தான் வருகின்றார்கள்...!

இன்று பெரும்பகுதியானவர்கள் எதை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்?

சாமி வந்தார்.., சாமியிடம் ஆசீர்வாதம் கேட்டேன். என்னைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னார். அப்படி என்றால் “அவர் தானே காப்பாற்ற வேண்டும்” என்று சாமியைத்தான் எண்ணுகின்றார்களே தவிர
1.உங்கள் கஷ்டமெல்லாம் நீங்கிவிடும் என்று சொல்கிறேன்.
2.அதை மட்டும் எண்ணுவதில்லை.
3.கஷ்டத்தை மட்டும் இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றார்கள்.
சாமி சொன்ன வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள். உங்கள் உடலுக்குள் சென்றவுடன் நோயைப் பிளந்துவிடும். உங்களுக்குள் அந்த நல்லது நடக்கும். ஆகையினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுங்கள் என்று சொல்கிறேன்.

ஆனால், அதை யாரும் எண்ணுவதில்லை. இங்கே வந்தால் உடனே எனக்கு அந்த “விபூதி” வேண்டும். “விபூதி இருந்தால் போதும்..,” சாமி தான் காப்பாற்றுவார் இந்த எண்ணம் தான் வருகின்றது.

1.சாமி சொன்னவைகளை நினைத்து
2.அந்த அருள் சக்திகளை எடுத்தால்
3.”அந்த எண்ணம்” நம்மைக் காக்கும் என்ற எண்ணத்திற்கே வருவதில்லை.
4.விபூதி கொடுத்தால் போதும் என்ற எண்ணம் தான் வருகின்றது.

ஆனால், சாமி சொன்னதைப் பதிவு செய்வோம். நமக்கு முன் உள்ள இந்தக் காற்று மண்டலத்தில் மறைந்திருக்கும் அந்த அருள் சக்திகளை எடுப்போம். நல்லதாவோம் என்ற எண்ணம் வர மாட்டேன் என்கிறது.

ஆசீர்வாதம் வாங்கிச் சென்றவுடன் சிறிது நாளைக்குப் பார்ப்பது. அது கிடைக்கவில்லை என்றால் அப்புறம் என்ன சொல்வார்கள்…!

என்ன.., இந்தச் சாமி? என்ற நிலைக்குத்தான் போவார்கள். இதைத்தான் மீண்டும் மீண்டும் கற்றுக் கொண்டு வருகின்றோமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

அதே மாதிரி கோவிலுக்குச் சென்று அவனுக்கு இரண்டு தேங்காய் பழத்தை வைத்து உடைத்தோம் என்றால் சரியாகும் என்ற நிலையில் செல்வார்கள். விரதம் இருந்து இது எல்லாம் செய்த பின் “நினைத்தது நடக்கவில்லை” என்றால் என்ன சாமி இது…,?

எத்தனை நாள் தான் இந்தச் சாமி என்னைச் சோதிக்கிறது என்று பார்க்கிறேன்…! நாம் எத்தனை நாள் விரதமிருந்தேன் எல்லாம் செய்தேன் என்பார்கள்.

முதலில் சாமி கடவுள் என்று கும்பிடுவார்கள். கடைசியில் அதைக் “கல்” என்றே நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். கோவிலில் அப்படித்தான் நினைக்கின்றோம்.

அந்தச் சிலை தான் கடவுள் என்ற நிலைகளும் தெய்வம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோமே தவிர அந்த மெய் ஞானிகள் காட்டிய நிலைகளை எண்ணி எடுப்பார் யாரும் இல்லை.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஒவ்வொரு நிலைகளிலும் நம் வாழ்க்கையில் நல்லதைத் திரை மறைக்கும் “சித்திரை” தீமைகளை அகற்றிப் பழகுதல் வேண்டும்.

பிறர்படும் வேதனைகளைக் கேட்கின்றோம். “நல்ல உணர்வை அது மறைத்து விடுகின்றது”. அந்தத் திரையை நீக்க மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி இதைப் பிளத்தல் வேண்டும்.

ஒரு அணுவைப் பிளந்து அதை ஒருக்கிணைந்து அணு குண்டாகச் செய்து அதை வெடிக்கச் செய்கின்றனர். கல்லுக்குள்ளும் இரும்புக்குள்ளும் கதிரியக்கம் உண்டு.

ஆக தன் இனத்தைச் சேர்த்துச் சேர்த்து அந்த உணர்வின் தன்மை பரவப்படும் பொழுது ஒரு நொடிக்குள் இரும்பானாலும் கரைந்து காணாமல் போய்விடும். கல்லாக இருந்தாலும் உருகிக் காணாமல் போய்விடும். அதே கதிரியக்கம் தான்.

இதைப் போன்று தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைச் சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்து அதனை நமக்குள் சேமிக்க வேண்டும்.
1.பின் உணர்வால் வளர்ந்த இந்த உடலை
2.இந்த உடல் பெறும் உணர்வைக் காணாது செய்துவிடும்.
3.உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்து இருக்கும்.

அந்த மகரிஷிகள் எதைப் பெற்றார்களோ அதன் வழிக்குக் காரணப் பெயரை வைத்துக் காவியங்களையும் ஆலயங்களையும் அமைத்தார்கள்.


அதைக் கருத்துடன் ஏற்றுக் கொண்டால் அந்தக் கருத்தின் உணர்வு உன்னை வாழ வைக்கும் என்ற நிலைகளை நமது காவியங்கள் தெளிவுற எடுத்துரைத்துள்ளது.