ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 16, 2018

கருவிலிருக்கும் குழந்தைக்குக் கண்ணன் உபதேசிக்கின்றான்...!


அன்றைய அரசர் காலங்களில் வாழ்ந்தவர் தான் திருஞான சம்பந்தர்

தெய்வ நெறிகள் கொண்டு நல் ஒழுக்கத்தைக் கற்பித்து இது தான் இறை உணர்வுகள் என்ற நிலையில் அதை ஏக்கமாகக் கொண்டு அதன் வழி சீராகப் பண்படுத்திய தாயின் வயிற்றில் பிறந்தவர்.

சீர்காழி என்ற ஊரில் நீண்ட நாளாகக் குழந்தை பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த அந்தத் தாய் தன் தீமையை மறந்து மெய் ஒளியைப் பெற்று அந்த உணர்வின் ஆக்கபூர்வமாகத் தாய் சுவாசித்த உணர்வின் தன்மைக்குள் தனக்குள் உரு பெற்றவர்தான் திருஞானசம்பந்தர்.

 கண்ணன் கருவிலிருக்ககூடிய குழந்தைகளுக்கு உபதேசித்தான் என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது. அதாவது கண்ணன் என்றால் கண்கள்.
1.நம் கண்ணுக்குள் (கருவிழிக்குள்) மெய் உணர்வுகளைச் (நினைவினைச்) செலுத்தி
2.அதே நினைவின் ஆற்றலைத் தன் கருவுக்குள் (உடலுக்குள்) செலுத்துவது தான்.

இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு வெகு நாளாகக் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்தாலும்
1.தன் கருவுக்குள் மெய் ஒளியின் தன்மையை அந்தத் தாய் ஊட்டியதனால்
2.குழந்தைப் பாக்கியமாகக் கிடைத்தது.
(பராசக்தி ஞானப் பால் ஊட்டியது என்றும் சொல்வார்கள்)

தாய் கண்களால் உற்றுப் பார்த்த மெய் உணர்வுகளே உடலிலே கருவாக உருவாகி “ஞானக் குழந்தையாக….!” திருஞான சம்பந்தராக அங்கே உருவாகியது.

மெய் ஞானிகளின் அருள் வாக்கை உங்களிடம் அடிக்கடி சொல்வது அதற்காகத்தான்...! சும்மா சும்மா சாமி (ஞானகுரு) இதையே பேசுகிறார் என்று யாரும் எண்ண வேண்டாம்.

உங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் ஞானிகளின் உணர்வை இணைக்கும் படி செய்து மெய் ஒளியின் உணர்வைக் கருவாக… “ஒளியான அணுக்களாக உங்கள் உடலில் உருவாகச் செய்து கொண்டிருக்கின்றோம்….!”

நீங்கள் எல்லோரும் அருள் ஞானம் பெறவேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் ஆற்றலை உங்கள் உடலுக்குள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் ஊடுருவச் செய்கின்றோம்.

அந்த மெய் ஒளியைச் சீராக நீங்கள் பெறவேண்டும் அது உங்களுக்குள் என்றுமே நிலைத்ததாக உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்குத்தான் அடிக்கடி உபதேசம் கொடுப்பது.

உங்கள் உள்ளங்களில் இது பதிவாகின்றது. நீங்கள் வெளிவிடும் மூச்சலைகள் சூரியனின் காந்தப் புலனால் கவரப்பட்டு அலைகளாகப் படர்கின்றது. மெய் உணர்வுகளாக இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்கின்றது.

நம் பூமிக்குள் பல உணர்வுகள் இருந்தாலும் ஒருக்கிணைந்த நிலைகளில் நாம் ஞானிகளின் அருள் சக்திகளைப் பரப்பபடும் பொழுது
1.ஞானத்தைப் பெறவேண்டும் என்று ஏங்கித் தவிக்கும் உணர்வுகள் உள்ளோருக்கும்
2.அவர்கள் எங்கிருந்தாலும் இதை நினைவு கொள்ளும் பொழுது
3.அவர்களும் இந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற முடிகின்றது.

வராகன் தன் உடலுக்குள் அசுத்த சக்தி இருந்தாலும் இந்தப் பூமியில் அசுத்தங்கள் படர்ந்திருந்தாலும் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை எடுத்துக் கொள்கின்றது.

அதைப் போல இன்றிருக்கும் விஷத் தன்மையான விஞ்ஞான உலகிலிருந்து நம்மை அறியாது எத்தகைய தாக்குதல் வந்தாலும் அதிலிருந்து நம்மை மீட்டி ஒளியின் சரீரமாக நாம் அடைய முடியும்.