ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 21, 2018

மெய் ஞானிகள் ஆவதற்கு முன் அவர்கள் அனைவரும் ஒன்றும் தெரியாதவர்களே...! – ஒன்றும் தெரியாதவர்களே மெய் ஞானியாகும் பொழுது நம்மால் ஆக முடியாதா......?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் மெய் ஞானிகளின் அருள் வித்தாக உங்கள் உடலுக்குள் ஆழமாகப்  பதிவாகிக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே இதைக் கேட்ட அன்பர்கள் அனைவருக்குள்ளும் உங்கள் உடல்களில் வீரிய சத்தாகப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள். அதே சமயத்தில் புதிதாக இதைப் படிப்போர் உள்ளத்திலேயும் ஆழமாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இதையெல்லாம்... “நாம் என்றைக்குத் தெரிந்து எடுக்கப் போகின்றோம்...? நம்மாலே முடியுமா...! என்று விரக்தியான எண்ணங்களை எடுத்து விட்டால் அவர்கள் உள்ளங்களிலே இது பதிவு ஆவது மிகவும் கடினம்.

1.சாமிகள் (ஞானகுரு) சொல்லும் தத்துவம்... அது மிக மிகப் பெரியது..!.
2.அதை எப்படி நாம் முழுவதும் அறிவது…? என்ற நிலையை எண்ணினால்
3.அதனுடைய நிலைகள் தனக்குள் “கதவடைத்த நிலையும்”
4.தன்னை அறியாத நிலையையும் தான் உருவாக்கச் செய்கின்றது.

விஞ்ஞானத்தில் இன்று வெறும் காகிதத்தில் (நாடா) காந்தப் புலனின் அறிவைக் கூட்டி மற்றதை ஈர்த்துப் பதிவாக்கும் தன்மையை ஏற்படுத்தி கம்ப்யூட்டர் (ELECTRONIC) மூலம் படத்தையோ ஒலிகளையோ மற்றவைகளையோ இணைக்கப்படும் பொழுது அதிலே பதிவாகின்றது.

மீண்டும் அதிலே காந்த ஊசியை வைத்த பின் அதிலே பதிவான உணர்வின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.

நாம் படித்துணர்ந்து அறிந்தவர்கள் ஒரு பாடலை நாம் பாட வேண்டும் என்றால் நம்மால் உடனே முடிவதில்லை. ஆனால் ஒன்றுமறியாத இரண்டு வயதுக் குழந்தை அந்தப் பாடலைக் கூர்மையாக இரண்டு தரம் மூன்று தரம் கவனித்தால் போதும்.
1.அந்தப் பாடல்கள் பதிந்துவிடும்.
2.பின் அந்தப் பாடலைப் பாடு...! என்றால் அது அதன் வழியே தெளிவாகப் பாடும்.

குழந்தைகளிடம் வேறு சிந்தனை இல்லாததால் அறியாத பிஞ்சு உள்ளங்களிடம் இருக்கக்கூடிய அந்தக் காந்தப் புலனின் அறிவுகள் கூர்மையாகக் கவனித்த உணர்வுகளை அப்படியே கவர்ந்து பதிவாக்கி விடுகின்றது.

அத்தகைய குழந்தைகள் உள்ளங்களில் மெய் ஞானியின் அருள் வித்துகள் சுலப நிலைகளில் பதிவாகின்றது.

ஆனால் வளர்ந்து பெரிய மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் பல புத்தகங்களைப் படிக்கின்றோம். படித்துணர்ந்த நிலைகள் கொண்டு
1.நாம் இதைப் பெற முடியுமா…?
2.இது மிகப் பெரிய விஷயமாயிற்றே...!
3.சாதாரண மனிதனின் வாழ்க்கையில் இதை எப்படிப் பெற முடியும்...? என்ற உணர்வைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால்
4.அந்த உணர்வின் செயலாக்கத்தில் தான் நாம் செல்ல முடியும் – இந்த எண்ணமே நம்மைத் தடைப்படுத்திக் கொண்டிருக்கும்...!

படிப்பது எதற்கு…? மெய் உணர்வைக் காணுவதற்குத்தான். ஆனாலும் மெய் ஞானிகள் அனைத்தும் “ஒன்றுமறியாதவர்கள் தான்...!” அவர்கள் உடலிலே பதிவான உணர்வுகளே அவர்களை இயக்கி மெய்யை அறியும்படியும் உணரும்படியும் செய்தது.

ஆகவே எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று வேட்கையின் நிலைகள் கொண்டு பல புத்தகங்களைப் படித்தோர் உள்ளங்களில் இது பதிவது மிகக் கடினம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தாலும் அதைத் தகர்த்துவிட்டு குழந்தை உள்ளங்கள் போன்று உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
1.மெய் ஒளி பெறவேண்டும் என்ற ஏக்கத்தைச் செலுத்துங்கள்.
2.மெய் ஒளியின் தன்மையைச் சமத்துவப்படுத்துங்கள்
3.மெய் ஞானியின் அருள் வித்தை உங்களுக்குள் பதியச் செய்யுங்கள்.

பதிந்த அந்த உணர்வின் தன்மை கொண்டு மகரிஷிகளின் அருளாற்றலைப் பெருக்குங்கள். மெய் ஞானிகள் காட்டிய அருள் வித்தின் ஞானத்தை நீங்கள் காணலாம்.

உங்கள் சொல்லுக்குள் இனிமை காணலாம். உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய துன்பத்தைப் போக்க இது உதவும். “உங்களை நீங்கள் நம்புங்கள்...!”

ஆகவே மெய் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கும் ஒவ்வொரு நிலையையும் உங்களுக்குள் பதிவு செய்யும் ஏட்டாக நினைத்துப் பதிவாக்கிக் கொண்டால்
1.மீண்டும் அதை நினைவு கொள்ளும் பொழுது
2.அந்த ஆற்றல் மிக்க சக்திகளை உடனுக்குடன் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
3.அதனின் வளர்ச்சியில் நீங்கள் மெய் ஞானியாகின்றீர்கள்.

இது மனிதனால் சாத்தியமாகக்கூடியது தான்...!