ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 14, 2013

நமக்குள் முந்தைய நிலைகளில் பதிவு செய்ததை, நிறுத்த வேண்டும்

ஒவ்வொரு குணமும், தன்னை வளர்த்துக் கொள்ள முந்துகின்றது. முந்தும் பொழுது, தீமையை அகற்றும் சக்தியாக எடுத்தால், தீமைகளை அகற்றும். ஒரு நஞ்சான உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால், நஞ்சின் தன்மை நமக்குள் நல்ல குணங்களை அழிக்கும்.

இந்தப் பேருண்மையை அறிந்துகொள்வதற்குத்தான் இங்கே கோலமாமகரிஷி, எதை எதை எடுத்தார், வெறுத்தார், அறிந்தார், ஞானத்தால் உணர்ந்தார் என்ற நிலையை அறிவதற்குத்தான், யாம் இங்கே கொல்லூரில் அவ்வளவு காலம் தங்கியிருந்து ஜெபமிருந்தோம்.

தண்ணீர் கிடையாது, உணவு கிடையாது, ஒன்றும் கிடையாது. எம்மை இங்கே விட்டுவிட்டுச் சென்று விட்டார் குருநாதர். இங்கே பல நாட்கள் தங்கிவிட்டு, பின்புதான் வெளியே வந்தோம். யாருக்கும் தெரியாது.

இவ்வாறு அறிந்து கொண்ட நிலைகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோமென்றால், “எமது வார்த்தையைக் கேட்பது பெரிதல்ல. எம்மைப் பின்பற்றுவதும் பெரிதல்ல”. ஆனால்,
நாம் முந்தைய நிலைகளில்
பதிவு செய்த நிலைகள் நமக்குள் உண்டு.
அதை நாம் அடக்க வேண்டும்.

நமது அன்பர் ஒருவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி வருகிறார். அப்பொழுது, அது அவருக்குக் குஷியாகத் தெரிகிறது. ஆனால், தபோவனத்தின் கேட்டின் பக்கம் வரும்போது, பிரேக் போட்டவுடன், சரியான நேரத்தில் திருப்பாமல் விட்டதால், கவிழ்ந்து விட்டது. அவர் தப்பி விட்டார். வண்டியில் இருந்தவர் சிக்கிக் கொண்டார்.

இதற்கெல்லாம் காரணம்,
நமது உணர்வுகளில் வேகம் எதுவோ,
அதில் மகிழ்ச்சியைத் தூண்டும்.
அதனின் வேகச் செயலாக, வேலை செய்யும்.
இதன் விளைவை நமக்குள் எப்படி ஊட்டும்?
என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான், இதைச் சொல்கிறோம்.

இதேமாதிரிதான், நாம் ஆர்வமாகத் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். அப்படி ஆர்வமாக இருக்கும்போது, முந்தைய நிலைகள் நமக்குள் இயக்கும்போது,
என்னத்தை எடுத்தோம், இப்படி வருகிறதே
நாம் ஜெயிக்கவில்லை,
நம்மால் முடியவில்லை போலும்
என்று விரக்தி அடைந்துவிடுவார்கள்.

யாம் நீங்கள் பெறவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றோம். இந்த உணர்வின் தன்மை, மனக்கட்டுப்பாடு இல்லாதபடி இயக்கி வருகிறது.
ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள்,
குறுக்கே குறுக்கே வருகிறது.
நாம் செய்யும் தியானம் சரியாக இல்லையோ
என்று எண்ணத் தூண்டும்.

இப்படி, முந்தைய நிலைகளில் பதிவு செய்த நிலைகள், நமக்குள் உண்டு. அதை நாம் நிறுத்த வேண்டும். இந்த ஆறாவது அறிவிற்குள், அந்த மெய்ஞானிகளின் உணர்வைக் கவரும், திறமையாக வரவேண்டும். இதைப் படைக்க வேண்டும்.

இதுதான் பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன். இந்த ஆறாவது அறிவால், நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும். அப்படி அதை ஞானமாக்க வேண்டும்.

இதை நமக்குள் படைக்கும் பொழுதுதான், அந்த உணர்வின் இயக்கம் நமக்குள் வரும், என்ற உண்மையை இங்கிருந்து யாம் உணர்ந்தோம். சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

இதைத்தான், உங்களுக்கு அடிக்கடி யாம் பதிவு செய்கிறோம். நம்மையறியாது சேர்ந்த தீமைகளை, நாம் எப்படி நீக்கிப் பழகவேண்டும் என்று உபதேசிக்கிறோம். எமது அருளாசிகள்.