ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 4, 2013

ஞானகுரு - யாம் திரும்பத் திரும்ப உபதேசிப்பதன் நோக்கம்

1. அருள் ஞான வித்தை, இரத்த நாளங்களிலே யாம் பதிவு செய்கின்றோம் 
நமது குருநாதர் காட்டிய  அருள்வழியில், அகஸ்தியன், துருவனாகி, துருவ நட்சத்திரமாகி, அதிலிருந்து வரக்கூடிய உணர்வை, அந்தச் சக்தி வாய்ந்த பேரருளை நீங்களும் நுகர வேண்டும் என்பதற்காகத்தான்,
பல முறை உபதேசத்தைக் கொடுத்து,
பல விதமான உணர்வை நுகரச் செய்து,
இரத்தங்களிலே கலக்கச் செய்து,
உங்க உடலிலுள்ள அணுக்களுக்கு, அதைப் பெறச் செய்வதற்குத்தான்
யாம், மணிக்கணக்கிலே பேசுகின்றோம்.

சில சாமியார்கள், அரை மணி நேரத்தில்
பேசிவிட்டுச் சென்று விடுவார்கள்.
யாம் மணிக்கணக்கிலே சொல்கிறோம் என்றால்,
அந்த மூன்று மணி நேரம் சுவாசிக்கின்ற உணர்வுகள், உங்கள்  இரத்தங்களிலே கலக்கும்.

எந்த அளவுக்கு உற்றுக் கவனிக்கின்றீர்களோ,
அந்த அளவிற்கு இரத்தத்தில் கலந்து,
அந்த அணுக்களில், கொஞ்சம் கொஞ்சமாக இணையும்.

அவ்வாறு, உற்றுப் பார்த்த உணர்வுகளை, மீண்டும் அதை நினைவுபடுத்தி எடுத்தீர்களென்றால், அருள்ஞானவித்து உங்களிலே விளையும். யாம் உங்களிடம் பதிவு செய்த ஞான வித்தை, நீங்கள் வளர்க்க வேண்டும்.

செடிகளுக்கு வித்து வைத்தவுடன், நெல்லுக்கு ஒரு உரம் போடுவார்கள். சோளத்துக்கு ஒரு உரம் போடுவார்கள். அதே போன்று, இந்த ஞானவித்திற்கு, அருள்ஞான உணர்வின் உரத்தை, நாம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

யாம் சொல்லும் உணர்வுகள் ஞானவித்தாக, உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் அதற்குச் சத்து கொடுக்க வேண்டுமென்றால், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும், எங்கள் ஜீவாத்மா, ஜீவணுக்கள் பெறவேண்டும், என்று உள்ளுக்குள் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இது இரத்தங்களில் கலந்து என்ன செய்யும் என்றால், கொஞ்சம் கொஞ்சமாக, உங்கள் உடலிலுள்ள நல்ல அணுக்களை உயர்த்தும். அதற்குத்தான் யாம் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம். எமது அருளாசிகள்.
2. யாம் பதிவு செய்த ஞான வித்தை, உங்களுக்குள் விளைய வைக்கும் வழி
தியானத்திலே இருக்கிறவர்களுக்கு, காலை 4 மணியில் இருந்து 6 மணி வரை, இந்த உணர்வுகள் தட்டி எழுப்புவதை நீங்கள் பார்க்கலாம். உங்களையறியாமலேயே விழிப்பு வரும். அந்த நேரத்திலே, அந்த அருள் சக்திகளை நுகருங்கள்.



அப்பொழுது பெண்கள், தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும், ஆண்கள், தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். எண்ணியபின், அந்த குரு அருளைப் பெற வேண்டும். என் கணவர் பார்வையில், தீமைகள் அகற்றும் அந்த சக்தி பெற எண்ண வேண்டும். அவர் செயலிலே புனிதம் பெற வேண்டும், அவரைப் பார்ப்போரெல்லாம், அந்தப் புனிதநிலை பெற வேண்டும் என்று, எண்ண வேண்டும்.


அதே மாதிரி, கணவன், மனைவியை ஓர் 5 நிமிடம் எண்ணிப் பழக வேண்டும். இப்படி நீங்கள் எண்ணினால், காலையில் 6 மணிக்கு விழித்தெழும் பொழுது, ஓர் ஆனந்தமான நிலை வரும்.

இந்த மாதிரி எண்ணும் பொழுது பார்த்தால், உங்கள் உடலில் பளீர், பளீரென்று வெளிச்சம் வரும்.
ஏனெனில், அது நுகரப்படும் பொழுது
இது பட்டவுடன் மோதி, அந்த இருள் நீக்கி
வீட்டிற்குள் ஒரு வெளிச்சம் வருவதைப் பார்க்கலாம்.

சூரியன், தன் உடலில் எடுத்துக் கொண்ட பாதரசத்தால், தன் அருகில் வந்தவுடன் மோதி, பளீரென்று உலகம் முழுவதும் ஓர் வெளிச்சத்தை கொடுக்கிறது. அதே மாதிரி,
நம் மூச்சலைகள் பட்டவுடன்,
நமது வீட்டிற்குள் இவ்வாறு எண்ணும் பொழுது,
நம் உடலில் எடுத்து கொண்ட சக்தி, தீமை என்ற நிலையில் மோதியவுடனே, அது விலகிப் போகும். உடலில், ஒரு விதமான வெளிச்சம் வரும். உடலில் மகிழ்ச்சி ஏற்படும்.

இதை நீங்கள், ஒவ்வொரு நாளும் காலையில் 4 மணிக்கெல்லாம் செய்து பழக வேண்டும். அப்படிச் செய்தால், யாம் பதிவு செய்கின்ற ஞானவித்திற்கு, அப்பொழுது நீங்கள் சக்தி ஊட்டுகிறீர்கள்என்று அர்த்தம்.