ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2024

ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்

ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்

 

உலகத்தன்மையிலே ஈர்ப்பு நிலை இருந்து விட்டால் ஈசன் அருள் வந்ததப்பா. ஈர்ப்பு நிலையில் தான் இவ்வுலக நிலையே உள்ளதப்பா. மூச்சின் பாடத்தைப் பகர்ந்துள்ளேன்.

1.எந்நிலைக்கும் ஈர்ப்பு நிலை வேண்டுமப்பா…!
2.மனித மனத்திற்கு ஈர்ப்பு நிலை இருந்தால் தான் அவ்வீசனையும் வணங்கிடுவான்

ஈர்ப்பு நிலை ஈர்ப்பு நிலை என்பதெல்லாம் காற்றை இந்த பூமி தன்னுள் ஈர்ப்பதனால் தான் இப்பூமியே சுற்றுகிறது என்றேன். ஈர்ப்பு நிலையின் பாடங்கள் பல உள்ளன.

1.ஈர்க்கும் தன்மையை எடுத்துக் கொள்…!
2.எந்நிலைக்கும்… ஒருவர் சொல்வதையும் “நம் மனதில் ஈர்ப்பு நிலை இருந்தால் தான்” எடுத்துக் கொள்ள முடியும்.
3.அவ்வீர்ப்பு நிலையில் தான் ஈசன் அருளையும் பெற்றிட முடியும்.

அவ்வீர்ப்பு நிலையினால் தான் ஒரு தாயின் வயிற்றில் அக்கருவும் தரிக்கிறது மலரின் மணத்தை ஈர்க்கின்றது அவ்வண்டு என்ற வழிமுறை தெரிந்து இருக்கும்.

அதைப் போல் தான் தாயின் வயிற்றில் வந்து உதிக்கும் கருவின் நிலையும். மணங்களின் பாடம் பகர்ந்திட்டேன். ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு மணம் உள்ளது. பூவிற்கு மணங்கள் உள்ளது போல் மனித உடல்களுக்கும் அந்த மணங்கள் உள்ளன.

ஜென்மப் பலனைப் பகர்ந்திட்டேன் மணத்தையும் முதல் பாடத்தில் பகிர்ந்துள்ளேன் அக்கரு எப்படி வந்து உதிக்கிறது…? என்று.

இவ்வுலகத்தில் பல தேசங்கள் உள்ளன. எத் தேசத்தில் பிறந்தவனும் முதல் ஜென்மத்தில் விட்ட குறையினால் மறுஜென்மம் எடுக்கின்றான் என்பதைப் பகர்ந்து உள்ளேன்.

அண்டகோடியில் உள்ளவன் தன் ஆவி ரூபத்தில் தன் எண்ணத்தின் செயலை “எப்பிறவி எடுத்தால் முடித்திடலாம்…?” என்று எண்ணுகின்றான்.

அதனுடைய ஈர்ப்புத் தன்மையினால் தாயின் எண்ணத்தின் மணத்தை அறிந்து அத்தாயின் வயிற்றில் உதிக்கின்றான்.

பிறவி எடுப்பதற்கு முன் அவ்வாவிகளின் நிலை எல்லாம் ஈர்ப்புத் தன்மை தான். “ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்...” ஒருவர் எடுக்கும் மூச்சிலிருந்து அவர்களுடைய மணத்தையும் மனத்தையும் ஈர்க்கின்றது அவ்வாவிகள்.

அதிலிருந்து தான் அவ்வாவிகள் பிறக்கின்றன கருவில்… இப்பாட நிலை புரிந்ததா…?
1.மனித மனத்திற்கு வேண்டுமப்பா ஈர்ப்புத் தன்மை.
2.இவ்வுலகம் ஈர்ப்பதினால் தான் உன் நிலை நடக்கின்றது… நிற்கின்றது.

இவ்வுலக மண்டலத்திற்கு “பல மைல்களுக்கு அப்பால்… ஈர்ப்பு நிலை இல்லையப்பா…”

உலக மண்டலத்தில் உள்ளவர்கள் எல்லோருமே கலியில் வந்துள்ளார்கள் என்ற பாடத்தைப் பகர்ந்துள்ளேன். இவ்வுலகத்தில் உள்ளவர்கள் பிற மண்டலத்தில் பிறக்கின்றார்களா…? என்று சாமியிடம் கேட்டாய் எங்கும் பிறக்கின்றார்கள்… ஆனால் அந்த வழிகள் வேறு.

மனித ஜீவராசிகள் இவ்வுலகத்தில் உள்ளது போல் வேறு எந்த உலகத்திலும் இல்லையப்பா. வேறு உலகத்தில் ஜீவராசிகள் நிலை எல்லாம் உருளும் தன்மையில் தான் ஊரும் தன்மையில் தான் உள்ளதப்பா.

இவ்வுலகில் உள்ள ஈர்ப்பு தன்மை பிற மண்டலத்தில் இல்லையப்பா…! பிற மண்டலத்தின் தன்மை எல்லாம் மாறுபடுகின்றது.

இன்று விஞ்ஞானத்தில் பிற மண்டலத்திற்குச் சென்று உயிர் வாழப் போகின்றானாம்… நடந்து பார்க்கின்றானாம்… பயிர் செய்து பிழைப்பானாம்…! கால நிலையைக் கடத்துகின்றார்கள் பெரும் கஷ்டத்திற்குள்ளே.

ஜெப நிலையில் இருந்தவனுக்குத் தெரிந்துவிடும் பிற மண்டலத்தின் நிலை. இவ்வுலகம் ஈர்ப்புத் தன்மையில் நடப்பது போல் அந்நிலையில் அவன் நடந்துவிடுவானா…?

செயற்கையுடன் சென்று நடந்தேன் என்று செப்புகின்றானாம். எப்படி அப்பா நடந்திருப்பான்…? “உருண்டல்லவா சென்றிருப்பான்…!” இவ்வுலக நிலை எவ்வுலகிலும் இல்லையப்பா.

இவ்வுலகில் பிறந்த பயனைப் பெற்றிடுங்கள் என்பதெல்லாம் இதுவே தான்.

1.ஈர்ப்புத் தன்மைக்கும் மனநிலைக்கும் ஒத்திருந்தால் எல்லா நிலையும் ஈசனே பார்த்துக் கொள்வானப்பா
2.நம் நிலை வேறு நினைத்தாலும் அவ்வீர்ப்பு நிலையைத் தான் ஈசன் முடித்திடுவான்.

இதைப் போல்தான் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு சொல்லும்
1.அவ்வீசனின் நிலையில் ஈர்ப்பு இருந்தால் நடந்திடுமப்பா… ஈர்ப்பு நிலைப்பாடத்தை இதற்காகத்தான் பகர்ந்திட்டேன்.
2.மனதில் உள்ள எந்நிலையையும் அவ் ஈசனின் ஈர்ப்புக்கு விட்டு விட்டால் அவ்வீசன் பார்த்துக் கொள்வான் எல்லாமே… புரிந்ததா…?

ஈர்ப்பு நிலை வைத்திடம்மா… உன் நிலைக்கு மிகத் துரிதமாக எல்லா நிலையும் கிட்டிவிடும்… ஜெப நிலையும் தான்…!

ஒவ்வொரு மனதிற்கும் ஈர்ப்புத் தன்மை எப்படி அறிவு வளர்ச்சி என்று சொல்கின்றோமோ அதைப்போல ஈர்ப்புத் தன்மையும் மாறுபடுகின்றதம்மா.

ஒரே முறையில் பலர் சமைத்தாலும் சமையல் ருசியும் மணமும் மாறுபடுகின்றது கை வாக்கு என்கின்றார்கள்… அது “மனவாக்குத் தான்…”

அது ஒரு நாள் செய்த முறையிலேயே மறுநாள் சமைத்தால் அந்தச் சுவை இருப்பதில்லை. இது எல்லாம் மன வாக்குத் தான் அது. மனதின் ஈர்ப்பு நிலை எப்படி உள்ளதோ இதைப் பொறுத்துதான் எல்லாமே.

உன் மனதின் ஈர்ப்பை இன்று ஈசனிடம் செலுத்தி விடு நோயைப் பற்றி எண்ணிவிடாதே கலசம் வைத்ததின் பயனை நீ பெறுவாய்.

காட்சி:- நிறைய சித்தர்கள் ரிஷிகள் சுற்றி நின்று ஆசீர்வாதம் செய்தல்.
1.ஒரு சித்தர் அல்ல… பல சித்தர்கள் இங்கே வந்துள்ளோம்
2.சித்தாதி சித்தர்களின் ஆசிகளை அருளியுள்ளோம். பல கொழுந்துகளை ஆசீர்வாதம் செய்துள்ளோம்
3.வாரி இறைப்பேன் ஞானச் செல்வங்களை உனக்கு…!