ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 25, 2024

செயற்கை யுகம் வந்ததன் காரணம்

செயற்கை யுகம் வந்ததன் காரணம்

 

பதம் என்பது எப்பதமும் இரண்டு வகை உண்டு…
1.நல்லது கெட்டது
2.நல்ல அணு தீய அணு
3.நல் மணம் தீய மணம் என்பதைப் போல்
4.எல்லா வழியிலும் உள்ளதப்பா இரண்டு பதம்.

மாற்று இல்லாமல் எதுவும் இல்லை…!

உலக இயற்கையே மாற்றுடன் தான் கலந்துள்ளது. உயிரைப் பிழைக்க வைக்கவும் மருந்துள்ளது… உயிரை அழிக்கவும் மருந்துள்ளது…! அணுவையும் செய்கின்றான் அழிக்கவும் செய்கின்றான் ஆக்கபூர்வமான உலகத்தில் “ஆக்கலும் அழித்தலும்” தான் இவ்வுலகமே.

நல்லெண்ணம் படைத்து நல் சுவாசம் எடுத்து நல்லதையே செய்கின்றான் நாடு போற்ற. சிறு துளி எண்ணத்தின் கலப்பினால் வருகின்றதப்பா துவேஷிக்கும் தன்மை எல்லாம்.

நுகரும் தன்மையைப் பகர்ந்துள்ளேன் சுவாச நிலை என்று. நுகரும் தன்மை மனிதனுக்கு மேல் மற்ற ஜீவராசிகளுக்கும் இருக்கின்றதப்பா.

ஒரு நிலையில் அணுவான ஆத்மாவிலும் ஆவியின் தன்மையிலும் நுகரும் தன்மை உள்ளதப்பா. நல் மணம் உள்ள இடத்தில் நல் சுவாசம் இருக்கின்ற போதினிலே நல்ல அணு வந்தடைகின்றது என்று பகர்ந்துள்ளேன்.
1.நல்லணு என்பதெல்லாம் நல்லோரின் ஆசிகள் தானப்பா
2.தீய அணு என்பதெல்லாம் காற்றுடனே கலந்திருக்கும் ஆவிகளின் அணுக்கள் தான்.

நல்லணுவில் வருபவன் எல்லாம் இவ் உடலை விட்டுச் செல்லும் பொழுது மறு ஜென்மம் எடுத்திடாமல்… சூட்சும உலகத்தில் கலந்துவிட்ட தேவர்கள் என்னும் தேவாதி தேவர்கள்தான்.
1.அதில் உள்ளவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும் பல கோடி நற்பயனை அடைந்து விட்ட
2.நல் இதயம் உள்ள நம் போகரின் நிலையில் உள்ளவர்கள் அப்பா.

நல் உணர்வை எடுத்திடு… நல் உணர்வை எடுத்திடு… சுவாச நிலையை மாற்றி விடாதே…! என்ற பொருள் இப்பொழுது புரிந்ததா…? நல் உணர்வை நல் சுவாசத்தை எடுக்கும் பொழுது…
1.நீ எண்ணுபவர்கள் எல்லாம் அணுவின் அணுவாக உன்னுள்ளே வந்து
2.உன் நிலையை உயர்த்துவார்கள்.

மறு பாதியில் தீய அணு என்று செப்பினேன். தீய அணுக்களின் வேலையெல்லாம் பெரும் பேராசைக்காரர்களும் ஆணவக்காரர்களும்… தான் பிறந்த பயனை பாதியிலே முடித்துக் கொண்டவர்களும் (தற்கொலை)… அடித்துக் கொலை செய்யப்பட்டவர்களும் கொலைகாரப் பாவிகளும் (கொலையுண்டவர்கள் - கொலை செய்தவர்கள்) விபத்தினால் ஐயோ என்று அவன் நிலையில் சென்றவர்களும்… இப்படி உலகில் உள்ள ஆவிகள் எல்லாம் இக்காற்றுடன் தான் கலந்துள்ளன அணுக்களாக.

நல்லுணர்வில் உள்ளவர்கள் ஆவிகளை எப்படிப் பார்க்கின்றோமோ அதே நிலையில் இந்த ஆவிகளும் தெரிந்திடும். இவ்வாவிகளின் வேலையெல்லாம் மிகத் துரிதமாகச் செயல்படுவதே…! தன் எண்ணத்தை எவன் உருவில் வந்து முடித்திடலாம் என்ற எண்ணத்துடனே சுற்றுகின்றது.

உன் நிலையில் கோபதாபங்களோ அதிக ஆசைகளோ மனச்சோர்வோ உள்ள பொழுது உன் எண்ணத்தைக் குறுக்கி விடுகின்றாய். அந்நிலையில் உள்ள பொழுது…
1.உன் சுவாச நிலை எடுத்திடும் மூச்செல்லாம் நல் மணம் கலந்திடாமல் பெரும் பாரத்துடனே உள் செல்கின்றது.
2.அந்நிலையில் அத்தீய ஆவிகளுக்கு அண்டிக் கொள்ளும் தன்மை உடனே வந்து விடுகின்றது
3.அதற்காகத்தான் பூஜை அறையில் நல் மணங்கள் உள்ள புஷ்பங்களை சாம்பிராணி கற்பூர வாசனைகளைப் போடுவது.
4.தீய அணுக்கள் வந்திதிடாது… அந்த இடத்திற்கும் அதன் நிலை வர முடியாது.

அதன் நிலை எல்லாம் கெட்ட வாசனை உள்ள இடம் துர்நாற்றம்… துர் மனது உள்ளவர்களையே தான் வந்து அண்டுகின்றது.

“வியாதியஸ்தர்கள் உள்ள வீட்டில் புகை போட்டிடுங்கள்…” என்பதெல்லாம் இதற்காகவே.

அத்தீய அணுக்கள் என்பவை நான் பகர்ந்த துர் ஆவியின் நிலையே… தீய அணுக்கள் எல்லாமே துர் ஆவிகள் நிலை தான்.

1.நம் பெரியோர்கள் வழி வழியாக பல வழிகளை வாழ்க்கையுடன் வடிவமைத்து ஒன்றச் செய்தார்கள்
2.ஆனால் உள் அர்த்தங்களையும் உள்ள நிலைகளையும் மக்களுக்கு புரிந்திடாமல் செய்துவிட்டார்கள்
3.அதனால் வந்தது தானப்பா இச்செயற்கை யுகம் எல்லாம்.

புகை மண்டலம் எழுப்பி… அக்காலத்தில் யாகங்கள் என்ற பெயரால் பெரும் தவசு முனிவர்களும் யோகிகளும் எதற்காகச் செய்தார்களப்பா…?

யாகங்கள் வளர்ப்பதுவே அதில் செலுத்தும் சந்தன மரங்களும் பசுவின் நெய்யும் யாகத்துடன் கலந்து நல் வாசனை பரப்பும் பொழுது
1.அந்த வாசனையை நுகர்ந்திட தீய அணுக்களினால் முடியாது
2.அந்த இடங்களிலே அதனால் இருக்கவும் முடியாது.

இக்காற்று மண்டலம் உள்ள இடத்தில் தான் இவ்வணுக்களின் வேலையெல்லாம். இப் புகை மண்டலம் செல்லும் பொழுது இக்காற்றிலிருந்து அணுக்கள் மேல் நோக்கிச் சென்றுவிடும். அந்நிலையில் அத்தீய அணு இந்நிலைக்குத் திரும்பிடாது. (இவ்வுலகத்திற்கு)

மண்டலம் மாறுபடுகின்றது அத்தீய அணுக்களின் வேலைகளில் யாகம் வளர்த்து அமர்வதன் பொருள் இச்சுவாச நிலைக்குத் தானப்பா. நம் உடலில் நல்ல அணுக்களாக வந்து அண்டிடவே நாம் செய்யும் யாகமெல்லாம்.

யாகத்தின் பொருள் புரிந்ததா…?

உன் வீட்டிலும் தினமும் சாம்பிராணிப் புகை போட்டு அந்த நெருப்பிலேயே மஞ்சள் பசு நெய்யும் கலந்து புகை போட வேண்டும். இதனால் தீய அணுக்கள் அண்டாது.

நல்லதை எண்ணிடும் பொழுது நல்லெண்ணம் உயர்ந்து நிற்க உன் மனதை ஒருநிலைப்படுத்திடு. உன் மனதில் எந்த நிலையிலும் கோபதாபங்கள் வேண்டாம் என்றதும்… பெரும் அவசரத்தை விட்டு விடப்பா என்றதும் இதற்காகவே.

கோபமும் அவசரமும் வந்தவுடன் நீ இழுக்கும் மூச்சினிலே சுவாச நிலை மாறுபடுகின்றது. சுவாச நிலையை மாற்றி விட்டால் தீய அணு வந்து அண்டுகின்றது.
1.நல்லெண்ணத்தை நீ பெற்ற நல்ல ஜெபத்தை எல்லாம் நாசப்படுத்துகிறது இத் தீய அணு.
2.பிற்கு மறு முறையும் ஜெப நிலைக்கு வந்திட நாள் செல்லுகிறது.

பாட நிலைகளை மனதில் ஊற்றிக்கொள் எண்ணத்தினுள்ளே மறு எண்ணத்தைக் கலக்க விடாதே. ஒன்றை நினைத்திருக்கும் பொழுது மறு எண்ணம் வருவதெல்லாம் இவ்வணுக்களின் வேலை தான்.
1.அவ்வணுக்களை அண்ட விடாதே
2.நல்ல அணுக்களைப் பெற்று விடப்பா…!

இன்றையப் பாடம் மிகவும் முக்கியம். இந்நிலையைப் புரிந்து கொண்டால் ஜெப நிலையைக் கூட்டிவிடுவாய்… புரிந்ததா…?