ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 26, 2024

பிறவிகளைப் பற்றிய உண்மைகள்

பிறவிகளைப் பற்றிய உண்மைகள்

 

தாயைப் போல் பிள்ளை… நூலைப் போல் சேலை…! என்கிறார்கள் தாய் வழி தந்தை வழி என்பதெல்லாம் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தை எல்லாம் ரத்தத் தொடர்புடையது… “வம்ச வழி” வந்தது என்கிறார்கள்.

வம்ச வழி என்பதெல்லாம் என்னப்பா…?

ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தை எல்லாமே வம்ச வழியில் வந்தது தான் என்றிட்டால் ஒரு தாய்க்கு ஒரு மகன் பிறக்கின்றான். அடுத்த பிறவியில் அத்தாயே பிறவி எடுத்தாலும் பத்துக் குழந்தை பிறப்பதில்லையா…! வம்ச வழி என்றால் என்னப்பா…?

இப்பிறவியில் பிறந்த எல்லோருமே அவரவர் குடும்பத்திலேயே தான் மறுபிறவியலும் பிறக்கிறார்களா…? இல்லையப்பா…!

இப்பிறவியில் இருந்து மறுபிறவிக்குச் செல்லும் பொழுது இப்பிறவியில் உள்ள ஆசை பாசம் இவைகளை வைத்து மறுபிறவியில்
1.எந்த இடத்தில் பிறந்திட்டால் இந்தப் பிறவியில் விட்ட ஆசைகளை முடித்து விடலாம் என்று தெரிகிறதோ
2.அங்கு தான் பிறக்கின்றது அவ்வாவி மறு ஜென்மத்தில்.

தாயின் வழி என்பதெல்லாம் வளர்க்கும் முறையில் தான் வந்திருக்கின்றது
1.குழந்தைகளுக்கு வம்ச வழியும் இல்லை… வந்த வழியும் இல்லை.
2.வளர்க்கும் முறையில் தான் எண்ணத்தின் எண்ணமாக வந்திருக்கின்றான் ஒவ்வொருவனும்.

ஒரு தாயின் வயிற்றுக் குழந்தைகளும் மனநிலையிலும் குண நிலையிலும் மாறுபட்டுத் தான் இருக்கின்றன. அவரவர்களின் முற்பிறவியின் பயனால் தான் இம் மாறுபாடு நிலை எல்லாம்.

தந்தை மகனுக்கு எழுதி வைக்கும் சொத்தெல்லாம் ஒன்று போல் பகிர்ந்திட்டாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் தான் செல்லுகின்றது. ஒரு மனிதன் அழிக்கின்றான் பல மடங்கும் பெருக்குகின்றான். ஒருவன் அந்தப் பொருளை ஒரே நிலையில் வைத்துள்ளான்.

இதன் பொருள் எல்லாம் முற்பிறவியின் பலனாகும்…! அவன் எடுத்த மூச்சுத் தன்மையினாலும் அவன் எண்ணத்தின் தன்மையினாலும் வந்தது தானப்பா இந்நிலை எல்லாம்.

வளரும் தன்மையிலேயே வடிகால் அமைத்துத் தந்திடலாம். அவ்வண்ணத்தை ஊன்றிக் கொண்டு அவ்வழியில் சென்றிட்டால் உயர்ந்திடலாம் தன் வழியில் செல்பவனுக்கு.

1.அவனவன் எண்ணத்தைப் பொருத்துத் தான் அமைகிறது வாழ்க்கை எல்லாம்
2.தாய் தந்தையரின் வளர்ப்பினிலே வருகின்றது “மனநிலையின்” மாற்றம் எல்லாம்.

பூர்வ புண்ணியப் பலன் உள்ள குழந்தைகளையும் மன நிலையில் மாற்றிடலாம்… எண்ணத்தின் வழியினிலே. தாய் தந்தையரின் எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!

வளரும் சூழ்நிலையைப் பார்த்திருப்பாய், மண் வாடை நீர் வாடை என்கிறார்கள் அதுவும் உண்மைதானப்பா.

ஒவ்வொரு இடத்திற்குத் தகுந்த மனநிலையும் நம் மனநிலையைப் பொறுத்து வரும் மூச்சினால் அவ்வழியில் வளரும் குழந்தைகளின் தன்மை எல்லாம் ஒன்று போல் இருக்குமப்பா.

மண் வாடை எல்லாமே அந்நிலையில் உள்ள நிலையைப் பொறுத்துதானப்பா வருகின்றது. அங்கு வளரும் குழந்தைகளின் எண்ணமும் செயலும் ஊரின் தன்மையும் ஊன்றிப் பார்த்தால் புரிந்திடும் மன நிலைகள்.

பெரும் நகரத்தில் அந்தந்தப் பகுதிகளிலும்… சிறு ஊர்களில் அந்தந்த ஊர்களின் தன்மையிலும்… ஊன்றிப் பார்த்தால் உனக்குள்ளே தெரிந்துவிடும் எல்லாமே.

அவ்விடத்தில் உள்ள மனநிலையைப் பொறுத்துதான் மண்வாடையும் வருகின்றது… நீரின் சுவையும் தெரிகின்றது.

ஒரு வீடு ஒரு வீதி ஒரு ஊர் என்று சொல்கின்றோம். ஒரு வீடு என்னும் பொழுது அவ்வீட்டின் தன்மையும் வீதியின் தன்மையும் கலந்திருக்கும். வீதியின் தன்மையிலே ஊரின் தன்மையும் கலந்து விடுகின்றது.

அவ்வூரில் உள்ளவரின் மனநிலையைப் பொறுத்துத்தான் அந்த ஊரில் உள்ள மண்வாடையும் வருகின்றது. அம்மண் வாடையின் ஈர்ப்புத் தன்மையை ஈர்த்துத் தான் அவ்விடத்தில் உள்ள மழையும் காற்றும் வருகின்றது.

அக்காலத்தில் பெரியவர்கள் மழைக்கும் நல்லோருக்கும் தொடர்புபடுத்திச் சொன்னதெல்லாம் இந்த வழியில் தான்… புரிகிறதா…?

மண்வாடையின் தன்மையினால் தான் அங்குள்ள பயிர்களும் வளர்கின்றன பாலகர்களும் வளர்கின்றார்கள். பாலகர்கள் வளர்வது என்பது உருவ அமைப்பைச் சொல்கின்றேன்.

ஒரு ஊரில் பிறக்கும் பிறவி எல்லாம் அந்த ஊரின் தன்மையில் தான் பிறந்திருக்கும்.
1.மன வாடையிலிருந்து மண் வாடை வந்து
2.பெரும் மழையில் செழித்திடும் காய்கனிகளில் இருந்தும் வளரும் பயிரிலிருந்தும்
3.உண்டு வளரும் பாலகர்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்திடுவார்கள்.

இப்பொழுது இக்கலியின் செயற்கை யுகமும் வாழும் வாழ்க்கைக்காக இடம் பெயரும் நிலையும் இந்நிலையில் வளர்ந்த பயிர்களை மறு இடத்திற்குக் கொண்டு செல்லும் நிலையும் வந்ததனால் “மாறுபட்டு இருக்கின்றது உலகமே இக்கலியில்…”

இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் மச்சாவதாரம் என்ற காலத்தில் எல்லாம் ஒரு நிலையில் உள்ளவர்களின் தன்மை எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து… ஒன்றுக்கு ஒன்று ஒத்த அமைப்புகள் இருந்தாலும் “இக்கலியில் தானப்பா… பெரும் செயற்கை யுகம் வந்தது…”

இடத்திற்கு இடம் தேசத்திற்குத் தேசம் மாறுபட்ட உருவ ஒற்றுமைகளைப் பார்த்திருக்கின்றாய். இந்நிலை எல்லாம் மண்ணிலும் மழையிலும் உள்ள ஈர்ப்புத் தன்மையினால் வந்ததப்பா.

ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தை எல்லாம் ஒன்றைப் பார்த்து ஒன்றைப் போல ஒன்று இருப்பது எல்லாம் இவ் ஈர்ப்புத்தன்மையினால்… அத்தாயின் அந்த வீட்டின் சுவாச நிலையினால் தான்.

இந்த ஜென்மத்தில் பிறந்த உடல் அடுத்த ஜென்மத்தில் வருவதில்லை. இந்த ஜென்மத்தில் இங்குள்ள மனநிலை மண் நிலை மழை நிலைகளைப் பொறுத்து அத்தாயின் சுவாச நிலை வருகின்றது உடல் அமைப்பு.

1.அவ்வுடலின் ஆவி மட்டும்தான்… முன் ஜென்ம ஆவி.
2.இவ் உடலை விட்டு ஆவி பிரிந்து சென்றால் இந்த ஜென்மத்தில் இருந்த உடல் இந்த ஜென்மத்திலேயே அழிகின்றது.

மறு ஜென்மம் எடுக்கும் பொழுது எந்த இடத்தில் பிறக்கின்றோமோ அங்குள்ள சூழ்நிலையை மனநிலை மண் நிலை மழை நிலையைப் பொறுத்துத் தான் “அவ்வுடல் வருகின்றது…” புரிந்ததா பாட நிலை…?

வீட்டில் பூச்சி வருவதெல்லாம் எந்நிலையில்…? அணுவின் அணுக்கள் எல்லாம் வருவது எந்நிநிலையில்…? விட்டில் பூச்சி வருவதெல்லாம் ஊன்றிப் பார்த்தால் தெரிந்துவிடும்.

சோர்வுடன் இந்த மண்ணில் உள்ள அணுக்கள் எல்லாம் காற்றுடன் கலந்து வரும் ஈரப்பசையில் இருந்து… அக்காற்று அம்மண்ணில் மோதும் பொழுது அந்த அணுக்கள் எந்த ஆகாரத்தை எடுத்துச் சுவாசிக்கும் நிலையில் உள்ளதோ… அந்தக் காற்று அதன் மேல் படும் பொழுது அதற்கு உயிர் தன்மை வருகின்றது.
1.அக்காற்றின் அழுத்தம் அந்நிலையில் உள்ளவரை தான் அதன் உயிரும் சுற்றுகின்றது
2.அதன் சுவாச நிலைக்கு அதன் ஈர்ப்புத் தன்மை குறைந்து விட்டால் மடிகின்றது.

ஈசல் வருவதும் இதைப் போலவே…! எறும்புப் புற்றுகள் தோன்றுவதும் இதைப் போலவே. சில நொடிகளில் தோன்றி மறைவதைப் பார்த்திருப்பாய்… சில நாட்களில் வந்து மறைவதைப் பார்த்திருப்பாய்.

அதனுடைய ஆகாரம் கிடைக்கும் வரை தான் அதன் ஜீவன் எல்லாம்.
1.சுவாச நிலையில் தான் அதனுடைய ஆகாரங்கள் கலந்திருக்கும்…
2.சுவாச நிலை மாறுபட்டால் மடிகின்றது.
3.சுவாச நிலை சுவாச நிலை என்கின்றேன்… இவ்வுலகமே சுவாச நிலைதானப்பா.
4.செயற்கை நிலைக்கு நான் எதிரியப்பா
5.கலியுகத்தில் வந்ததெல்லாம் இச்செயற்கை வினையினால் தான்.

இன்றைய பாடங்கள் புரிந்ததா…?