ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 30, 2024

ஜீவாதாரம் – பிழைக்கும் வழிக்குத் தேவையான சொத்து

ஜீவாதாரம் – பிழைக்கும் வழிக்குத் தேவையான சொத்து

 

ஜீவன் பிறந்து அந்த ஜீவன் வளர்வதற்கு இந்த ஜீவனுக்கு ஆகாரம் தேவை. எல்லா ஜீவராசிகளுக்குமே ஆகாரம் தேவை. மற்ற ஜீவராசிகள் எண்ணமெல்லாம் தன் ஆகாரத்தை எந்த நிலையில் பெறுவது…? என்ற ஒரே குறிதான்.

ஜீவன் எடுத்து முடியும் வரை அதன் எண்ணமெல்லாம் அதன் ஆகாரத்தை எடுத்துப் புசித்து… உண்டு வாழ்ந்து மடிவதுவே.

ஆறறிவு படைத்த ஜீவன் உள்ள மனிதனுக்கு அவ்வாகாரத்தை அடைவதற்குத் தன் அடுத்த அறிவைப் பயன்படுத்துகின்றான். அடுத்த அறிவு என்பது ஜீவராசிகளுக்கு உள்ள அறிவை விட மனித அறிவு உயர்ந்தது.

ஐந்தறிவு ஆறறிவு என்கின்றார்கள். எண்ணப்படி அல்ல. அவ்வறிவு ஆவி உலகத்தின் பாடத்தில் பகர்ந்துள்ளேன்… மற்ற மிருக ஜீவராசிகள் எப்படிப் பிறக்கின்றன…? என்று.

எறும்புக்கும் ஐந்து அறிவு தானா…? யானைக்கும் ஐந்து அறிவு தானா…? இவர்கள் சொல்வது போல் ஜந்துகளுக்கு ஐந்து அறிவு அல்ல… மனிதனுக்கு ஆறு அறிவும் அல்ல.
1.அவனவன் செய்த பாவம் புண்ணியங்களில் எடுத்திட்ட பிறப்பிற்கு இவன் மனிதனாகின்றான்
2.அது செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மிருகமாகின்றது மற்ற ஜீவராசியாகிறது.

மனித உடலில் உள்ள எல்லோருமே அவர்களுக்கு அளித்த ஆறு அறிவைப் பயன்படுத்துகிறார்களா…? ஆறு அறிவு தான் எல்லா மனிதர்களுக்கும் அளித்துள்ளானா அந்த இறைவன்…?

ஆறு அறிவு அல்லப்பா அவ்வறிவு. ஆறுமுகா என்று சொல்கின்றோம் ஆறுமுகனுக்கு ஆறுமுகங்கள் இருந்தனவா…? எண்ணி வந்தானா இம்மனிதன்…?

ஆறுமுகா என்பதன் பொருளே…
1.ஆறு வகைக் குணங்கள் படைத்த மனித மனத்திற்கு ஒத்துத் தான்…
2.கடவுளுக்குப் பெயர் வைத்து விட்டான் ஆறுமுகன் என்று.

இறைவன் சக்தியில் மனிதனுக்கு அளித்துள்ள குணங்கள் ஆறு. நற்குணங்கள் ஆறு. அவன் உடலில் உள்ள பல கோடிக் குணங்களைப் பகர்ந்திட்டால் அவன் எண்ணி வைத்த மனிதர்களின் ஆறு குணங்கள் என்னப்பா…?

ஆறு அறிவு படைத்த மனிதன் என்பதெல்லாம் மனிதனில் இருந்து மாறுபடும் ஜீவராசிகளுக்கு மனிதனின் நிலை மாறுபடுகின்றதல்லவா…! மற்ற ஜீவனுக்கும் மனிதனுக்கும் உள்ள நிலையைப் பிரித்துக் காட்டிடப் பகர்ந்திட்டேன் இவையெல்லாம்.

மனிதன் ஜீவிப்பதற்கு அவனுடைய “ஜீவாதாரம்” மிக முக்கியம். மனிதன் நிலையும் மிருகத்தின் நிலையும் மாறுபடுகின்றது என்றேன். மனிதனின் நிலையில் இருந்து அவன் வாழ்வதற்கு ஜீவனுள்ள ஜீவாதாரத்திற்குப் பொருள் முக்கியம்.

இன்றுள்ள மனிதர்களுக்குப் பொருள் முக்கியம். ஆனால் ஆதியில் மனிதன் அன்னம் புசித்திடவில்லை. தன் இனத்தைத் தன்னைத்தானே அடித்து உண்டிட்டான்.

இராமாவதாரத்திற்கு முன்பு மனிதர்கள் எல்லாம் மிருக நிலையில் இருந்தவர்கள் தான். ஒன்றை ஒன்று அடித்துத் தன் பசியைப் போக்கிக் கொண்டவர்கள்.

பிறகு ஒரு நிலையில்… மிருகத்தின் தன் இனத்தைத் தவிர மற்ற இனத்தை அடித்துப் புசித்தார்கள். அதற்கு அடுத்த நிலையில் வந்தவர்கள் தன்னிச்சையில் வளர்ந்த காய்கறி இலைகளைப் பறித்துப் புசித்தார்கள்.

அந்நிலையில் ஒரு உலகம் சுழன்று கொண்டிருந்தது. அவ்வுலக நிலை மாறி… அந்நிலையில் இருந்து மீண்டவர்கள் இராமாவதாரத்தில் வந்து தேவர்கள் என்ற பெயருடன் புதிய உலகம் கண்டார்கள்.

இராமாவதாரத்தின் சுழற்சியில் வந்த கடைசிக் கலி இது. இக்கலியின் தன்மை மாறி கல்கி சுழலப் போகின்றது.

இராமாவதாரத்தில் இருந்து தான் இந்த ஜீவாதாரத்திற்கு பொருள் தேடி தன் வழியில் அப்பொருளைத் தேடிப் பக்குவம் செய்து புசித்திட்டான். இராமாவதாரத்தில் இருந்த நிலை பெரும் நிலையப்பா.

காலப் போக்கில் கிருஷ்ணாவதாரத்தில் வந்ததப்பா பெரும் கஷ்டங்கள் எல்லாம். ஆதியில் மனிதன் மனிதனையே அடித்துப் புசித்திட்டான். இராமாவதாரத்தில் இருந்த உலகத்தில் தப்பி வந்தவன் தான் கிருஷ்ணாவதாரத்தில் உதித்திட்டான்.

அந்நிலையில் ஜென்மங்கள் மாறி கிருஷ்ணாவதாரத்தில் வந்தவர்கள் அனைவரும் ஒருவனை ஒருவன் வஞ்சனையாலும் பெரும் சூழ்ச்சினாலும் சிக்க வைத்துத் தன் பொருளைச் சம்பாதித்து மகிழ்ந்தான்.

அடுத்த அவதாரத்தில் வந்தவர்கள் எல்லோரும் தன் நிலையை உயர்த்திட… உயர்த்திட என்பது அவர்கள் வழியில் பொருளைச் சேர்த்து வைத்திடப் பெரும் புதையல்… பொக்கிஷம் என்றதெல்லாம் கிருஷ்ணாவதாரத்திற்கு மறு அவதாரத்தில் வந்தவர்கள் எல்லோரும் “புதைத்து வைக்கும் நிலையை” உண்டு பண்ணினார்கள்.

அந்நிலையில் இருந்து வந்த இக்கலி மனிதர்கள் தான் செயற்கை யுகத்தைக் கலந்து விட்டார்கள் காலப்போக்கில் செயற்கையின் தன்மைக்குப் பொருளைத் தேட… “மிக முக்கியமான ஜீவாதாரத்தின் வழியையே” மாற்றி விட்டார்கள்.

ஜீவன் தோன்றி வளர்வதற்கு அப்பொருள் முக்கியம் அப்பா.
1.தன் ஜீவனை வளர்த்திடத் “தன் வாழ்க்கைக்கு வேண்டியதை” எண்ணுவதில்லை இம்மனிதர்கள்.
2.பெரும் செயற்கையின் காலத்தில் தள்ளுகின்றார்கள் இம்மனிதர்கள்.
3.இச்செயற்கை ஆசையின் உந்தலினால் தான் ஜீவாதாரத்தின் தன்மையை மாற்றித் “தான் மகிழ” என்ற நிலையையும் எடுக்கின்றார்கள்.

ஜீவாதாரத்தை மறந்து மதம் மதம் என்று செயற்கையுடன் கலக்கி விட்டார்கள். தான் பிழைக்கும் வழிக்கு என்கின்றார்கள்… தான் பிழைக்கும் வழிக்குப் பெரும் சொத்தைச் சேர்க்கின்றார்கள்.

பிழைக்கும் வழிக்குச் சொத்து எதற்கப்பா…? சொத்து என்று சேர்ப்பது என்னப்பா…? அவர்கள் வழியில் “பணம் காசு தான் சொத்து” என்கிறார்கள். பெரும் சொத்து அதுவல்லப்பா.

தான் பிறந்து வளரும் நிலையில்
1.தன் ஜீவாதாரத்தில் “போதும்…” என்ற நிலையில் பெற்ற பயனை எடுத்து
2.பெற்ற மக்களுக்கும் நல் போதனையில் நல்லறிவு புகட்டி தர்ம நியாயம் அளித்து
3.தான் பெற்ற மக்களை நல் உணர்வுடன் வளர்ப்பவனும்
4.தான் என்றால் யார்…? என்று புரிந்து நடப்பவனும் அடைந்த சொத்து தானப்பா பெரும் சொத்து.

இக்கலியில் அந்நிலையில் வாழ்வது பெரும் அரிது… அரிதப்பா அரிது. இக்கலியிலிருந்து தப்புவது அரிது. கலியில் உள்ள மனநிலை எல்லாம் மற்றவனைப் பார்த்துத் தான் தன் நிலையில் வாழ்கின்றான்.

இது புரிந்ததா…?

1.அவன் அந்நிலையில் வாழ்கின்றானே - தன் நிலை அப்படி இல்லையே…!
2.தானும் அவனைப் (மற்றவனை) போல் வாழ்ந்திட முடியாவிட்டால்
3.அவனைப் பார்த்துத் துவேஷ எண்ணமும் தன் நிலையில் பெரும் சோர்வும் அடைகின்றான்.

இந்நிலையில் உள்ளவனின் நிலைதானப்பா இக்கலியில் உள்ளவர்கள் நிலையெல்லாம். பெரும் பேராசைக்காரனப்பா இக்கலியின் மனிதன். இவன் விட்ட சுவாசத்தினால் இக்காற்று மண்டலமே கரியாகிவிட்டதப்பா. இந்நிலையில் வளரும் பயிர்களை உண்டவன் அவன் எப்படியப்பா இருப்பான்…?

காலம் எப்படிச் சுழலுகின்றதோ நற்காற்றுடன்… அந்நிலையில் வரும் தன்மை வேறப்பா…! இவன் விட்டிடும் நஞ்சு… காற்றுடன் சுற்றிடும் உலகம் வேறு எப்படிப்பா இருந்திடும்…?

ஜீவாதாரத்தை மாற்றி விட்டான் ஜீவனுக்கே பெயர் வைத்திட்டான் ஆறறிவு ஐந்தறிவு என்று…! பாடநிலை புரிந்ததா…?