ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 14, 2018

மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம்…! ஆனால் வாழ்க்கையில் நாம் எதைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றோம்…?


ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து செயலாக்கும் போது தான் ஒரு குடும்பமாக இயங்க முடியும். அதில் மகிழ்ச்சி தரும் நிலையும் வரும்.

ஒன்றிணைந்து வாழ்ந்தாலும் சந்தர்ப்பவசத்தால் கோபம் வெறுப்பு போன்ற குணங்கள் இயக்கப்பட்டு அந்தச் சக்திகள் நம் உடலிலே பிரம்மமாகச் சிருஷ்டிக்கப்பட்டு விடுகின்றது.

அதனால் மனைவி மீது கணவனுக்கு வெறுப்பும் கணவன் மீது மனைவிக்கு வெறுப்பும் வரும் போது
1.அந்தக் குணம் இருவர் உடலிலும் சிருஷ்டிக்கப்படும் பொழுது அது பிரம்மம் தான்.
2.அதனின் சக்தியாக இயக்குவது பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
3.அந்த உணர்வின் ஞானமாக வெறுக்கும் உணர்வு வளர்ந்து வெறுப்பின் வித்தை உடலுக்குள் பெருக்குகின்றது

ஆனாலும் குடும்பம் ஒன்று சேர்த்து வாழ்ந்து அதிலே மனம் பெருகி அமைதி பெறுகி செல்வம் பெருகி ஞானம் பெருகி இவை எல்லாம் பெருகி வளரப்படும் போது வீட்டிற்குள் மகிழ்ச்சி பெருகுகின்றது. அந்த மகிழ்ச்சியினால் பொருள் காணும் நிலைகள் உருவாகின்றது.

அப்படி மகிழ்ச்சியின் நிலைகள் பெறப்படும் போது நல்ல பொருளின் தன்மைகளைக் கவர்ந்து அதைப்பெற வேண்டும் என்றும் அதன் வழிகளில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்றும் அதை எடுக்கின்றார்கள்.

1.சந்தோஷமாக இருக்கும் போது நீங்கள் ஒரு பொருளைப் பாருங்கள். அது தெளிவாகத் தெரியும்.
2.ஆனால் வெறுப்பின் தன்மை நமக்குள் வந்த பின் பொருளைக் காண்பதும் கஷ்டம்…! அந்தப் பொருளைப் பாதுகாக்கிறதும் கஷ்டம் தான்….!

மகிழ்ச்சியாக இருக்கும் போது ஒரு பொருளை எடுத்து நாம் பார்த்தாலும் அதைப் பந்தோபஸ்தாக வைப்போம். ஆனால் வெறுப்புடன் இருக்கும் பொழுது எந்தப் பொருளைக் கொடுத்தாலும் உடனே தூக்கி எறிவோம். எந்த வெறுப்பை நாம் எடுத்தோமோ அதனால் தீமையைப் பெருக்கும் நிலை வருகின்றது.

சநதர்ப்பத்தால் குடும்ப வாழ்க்கையில் மிகவும் வெறுப்பாகி விட்டால்… எதைக் கண்டாலும்
1.இது எதற்கு...? இந்த வீடு எதற்கு…? காடு எதற்கு...?
2.பொருள் எதற்கு...? துணி எதற்கு...? என்ற நிலைகள் இது பெருகிவிடும்.
3.இத்தகைய தீமையின் தன்மை பெருகி விட்டால் மனித உடலுக்குள் தீமைகள் பெருகி
4.தீமையின் உணர்வுகளைச் சேர்த்து அதற்குத் தகுந்த ஓர் உருவாக உடலின் அமைப்பாகப் பிரம்ம ரிஷி சிருஷ்டித்து விடுவான்.

யார்..?

நம் உயிரே பிரம்ம ரிஷியாக நின்று நமக்குள் அது சிருஷ்டிக்கும் பிரம்மாவாக நாம் எண்ணியதை எல்லாம் சிருஷ்டித்து உருவாக்கி விடுவான்.

1.நீங்கள் எதை எண்ணி எடுத்தாலும் அந்த ரிஷி தான் (உயிர்)
2.அதனின் உணர்வின் வேகமாக உங்களை இயக்குகின்றான்.
3.அதனால் தான் பிரம்ம ரிஷி என்பது.

ஆகவே உயர்ந்த குணங்கள் பெருக வேண்டும்… குடும்பம் உயர வேண்டும்… குடும்பத்திற்குகந்த செல்வம் உயர வேண்டும்…! என்றால் நாம் எதனைப் பெருக்க வேண்டும்...?

ஒவ்வொரு நாளும் காலையில் எழும் போதும் சரி இரவு படுக்கச் செல்லும் போதும் சரி “ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி நினைவை விண்ணிலே செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று குறைந்தது ஒரு பத்து நிமிடமாவது அந்த அருள் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று சிறிது நேரம் தியானியுங்கள்.

பின் உங்கள் வாழ்க்கையில் தீமைகளைச் சந்திக்கும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வாருங்கள்.

சிறிது நாள் செய்து பழகிக் கொண்டால் மகரிஷிகளின் அருள் சக்தியை உயிர் அணுக்களாக உருவாக்கி உங்கள் உடலுக்குள் அதைப் பெருக்கத் தொடங்கும்.
1.அருள் சக்தி உங்களுக்குள் பெருகப் பெருக அதனின் ஞானமாக இயக்கி
2.உங்களை அருள் வாழ்க்கை வாழச் செய்யும்.