ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 4, 2018

எந்தச் சக்தியும் தன்னை அழித்திடாது “சுதந்திரப் பறவைகளாக விண்ணிலே ஒளியாக மின்னிக் கொண்டிருப்பவர்கள்…!”


நாம் சிறு குழந்தைகளாக இருப்பினும் அல்லது பெரியோர்களாக இருப்பினும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது
1,நாம் யார்…?
2.நாம் எதற்காக வாழ்கின்றோம்..?
3.ஏன் வாழ்கின்றோம்…? என்ற நிலையைத் தெரிந்து கொள்வதே மிகவும் நலம்.

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் மனிதனாகப் பிறந்த பின் இந்த  மனித வாழ்க்கையில் தன்னை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற நோக்குடன் பெற்ற அந்த உணர்வின் துணையால் உயர்ந்தவர்களே மெய் ஞானிகள்.

அவ்வாறு தன்னை அறிந்து… தனக்குள் இயக்கும் உணர்வை அறிந்து… இந்த உலகை அறிந்து… உண்மையின் உணர்வை அறிந்து… தன்னைத் தான் அறிந்து “தன் உயிரான்மாவை ஒளியாக மாற்றி விண் சென்ற மகரிஷிகள் பலர்…!”

1.அவர்கள் இந்தப் புவியின் ஈர்ப்பைக் கடந்து
2.இந்த உடலான சிறைக்குள் இருந்து தன்னை மீட்டிக் கொண்டு
3.”என்றும் சுதந்திரப் பறவையாக…!”
4.எந்தச் சக்தியும் தன்னை அழித்திடாது ஒளியின் சுடராக விண்ணிலே மின்னிக் கொண்டு
5.சுதந்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள் அந்தச் சப்தரிஷிகள்

சூரியக் குடும்பத்தில் பல பல கோள்கள் பல நிலைகள் கொண்டிருப்பினும் அது எல்லமே சூரியனுடன் ஒன்றாக இணைந்து இயங்கி ஒளியின் சரீரமாக ஓர் பிரபஞ்சமாகச் சீராக இயங்குகின்றது.

அதை போன்று தான் உலக மக்கள் நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் வரும் தீமைகள் எவையாக இருந்தாலும் அதை எல்லாம் மறந்து மனிதனாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் நட்பாக இணைந்து சகோதர உணர்வுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற தத்துவத்தைத் தான் அந்த மாமகரிஷிகள் நமக்கு உணர்த்திச் சென்றனர்.

அவர்கள் காட்டிய நெறிகளை நாமும் பின்பற்றிச் சென்றால் அவர்கள் எவ்வாறு தங்கள் உணர்வுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கச் செய்து இந்த உடலிலே மகிழ்ந்து வாழ்ந்தார்களோ உடலுக்குப் பின் ஒளியாக மாறி சுதந்திரமாக விண்ணுலகம் சென்றார்களோ அந்த நிலையை நாமும் அடையலாம்.