ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 27, 2018

தீமைகளைச் சுட்டுப் பொசுக்கும் சக்தியை நம் கண்ணுக்கு முன்னாடியே காட்டுகின்றார்கள் ஞானிகள்...!


ஓர் நண்பன் தனக்குத் தீங்கு செய்து விட்டால் அதை எண்ணி ஆழமாகப் பதிவு செய்து கொள்கிறோம். பாவி எனக்குத் தீங்கு செய்தானே…! அவன் உருப்படுவானா…? என்று கோபத்தின் எல்லை கடந்து வேதனையின் உணர்ச்சி பொங்க நாம் பேசுவோம்.

இவ்வாறு அந்தத் தீங்கு செய்பவனை எண்ணி அது உடலுக்குள் விளைந்து “அவன் தீங்கு செய்தான்...!” என்று நமக்குள் பதிவு செய்தாலும் யாரை எண்ணுகின்றோமோ அவனுக்குள்ளும் இந்தப் பதிவு உண்டு.

சாபம் இடும் இந்த உணர்வின் அலைகள் அங்கே சென்று அவனுக்குள் புரை ஓடி அவன் நற்குணங்களை எல்லாம் அழித்துவிடும். எப்போது எல்லாம் சாபம் இடுகின்றோமோ
1.பாவி எனக்குத் தொல்லை கொடுக்கிறானே...!” என்ற எண்ணத்தை எண்ணினால்
2.அவன் செயலாக்கங்களுக்கே தடையாகும்.

நண்பர்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் நன்றாகப் பழகினாலும் மிகவும் தெரிந்தவர்களாக இருந்தாலும் சந்தர்ப்பத்தால் வேதனைப்படும் நிலைகள் ஆகிவிட்டால்
1.சில நேரங்களில் புரை ஓடும்...
2.சாப்பாடு விழுங்கும் போதே விழுங்க முடியாது...!
3.எச்சில் விழுங்கும் போது கூடப் புரை ஓடும்...!
4.இவையெல்லாம் வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும் போது நம் உறுப்பின் இயக்கங்கள் “தனி...!”

நண்பனாக இருக்கப்படும் போது நட்பின் தன்மை கொண்டு எனக்கு நன்மை செய்தான் என்றால் விக்கல் வருகின்றது. அப்போது தனக்குள் நீரின் தன்மை ஊற்றி அது தணித்து கொள்ளும் போது “மகிழ்ச்சி” என்ற நிலைகளே உருவாகின்றது.

இதெல்லாம் இயற்கையின் உணர்வின் இயக்கங்கள் மற்றோருவருடன் ஒன்றி இயக்கப்படும் இந்த நிலைகளே உருவாகும்.

நமது வாழ்க்கையில் பிறருடன் பழகிய நேரங்களில் தீமையின் உணர்வுகளை நமக்குள் பதியச் செய்யும் போது யாருடைய குணங்களைப் பதிவு செய்தோமோ அது நமக்குள் விளையத் தொடங்கி விடுகின்றது.

அந்தப் பற்றின் தன்மை வரப்படும் போது நமக்குள் தீங்கே விளைகின்றது.
1.பாசத்தாலோ பண்பாலோ அன்பாலேயோ பிறர்படும் துயரங்களைக் கேட்டு உணர்ந்தால்
2.அந்த உணர்வின் தன்மை நமக்குள் புகுந்து அந்த உணர்வின் வித்தாக விளைந்து
3.எந்த உடலில் இருந்து எது வெளிப்படுகின்றதோ அந்த அலைகளைக் கவர்ந்து
4.நமக்குள் நோயாகவே உருவாக்குகின்றது.

அதற்காக நாம் நல்லது செய்யாமல் இருக்க முடியுமா...? பிறருடைய கஷ்டங்களைக் கேட்காமல் இருக்க முடியுமா...?

சூரியன் சுழலும் போது அந்த வேக உணர்வின் தன்மை கொண்டு தன் உணர்வின் ஒளியால் பிரபஞ்சத்திலிருந்து வரும் மற்ற விஷங்களைத் தனக்குள் வருவதற்கு முன்னாடியே மோதி அதனின் நஞ்சைப் பிரித்து விடுகின்றது. பிரபஞ்சத்தையே ஒளியாக்குகின்றது.

இதேபோல மனிதன் தன் உணர்வின் செயலால் தீமை வரும் போது தன் உணர்வின் அலையால் தீங்குகளை அங்கே பிரித்து விட்டுத் தனக்குள் ஒளியின் சுடராக மாறுகின்றான்.
1.சூரியனுடைய செயலைப் போன்றே
2.மனிதன் உயிரின் தன்மை சூரியனாகின்றது.

கோளாகி நட்சத்திரமாகிப் பின் சூரியனாக ஆனது போல இந்த உயிரின் தன்மையும் பல கோடிச் சரீரங்களில் இருந்து எடுத்துக் கொண்ட உணர்வின் துணையால் மனிதனாக வளர்ந்து வந்தபின் ஒளியின் சரீரமாக மாறி அதனின் செயலாக்கங்களாக இன்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் இருந்து தீமைகளை வெகு தூரத்திலேயே சுட்டுப் பொசுக்குகின்றான்.

மனிதனாக வாழும் பொழுது வாழ்க்கையில் வந்த தீமையை அகற்றிடும் உணர்வுகளைத் தனக்குள் பெற்ற நிலை தான் அந்தத் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும். அந்த மகரிஷிகள் அனைவருமே தீமையை வென்றவர்கள்.

இத்தகைய நிலையை உணர்த்துவதற்குத்தான் மாரியம்மன் கோயிலில் தீமைகளைச் சுட்டுப் பொசுக்கும் நிலைகளாக அக்னி குண்டமாக நெருப்பைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

எவ்வாறு…?

இங்கே வாழ்க்கையில் நாம் தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அது மாறி (மாரி) நமக்குள் வந்து தீமை செய்வது போல
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற்று
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் மாறி (மாரி)
3.அந்தத் தீமைகளைப் பொசுக்கும் சக்தியாக நமக்குள் வர வேண்டும்.

அதற்குத்தான் அங்கே மாரியம்மனுக்கு நெருப்பை வைத்துக் காட்டுவார்கள். சிலையை உற்றுப் பார்த்தால்... பார்க்கலாம் நீங்கள்...! நெருப்பைக் கிரீடமாக வைத்துக் காட்டியிருப்பார்கள்.