ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 12, 2018

மெய் ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டிய முறை (ஒட்டுச் செடி போல்)


இன்று ஒட்டுச் செடிகளை வைத்து விவசாயத்தில் தேவையான மகசூலைப் பெறவும் விதம்விதமான உணவுப் பொருள்களையும் உருவாக்கியுள்ளனர்.

அதே போன்று உயிரினங்களிலும் ஒரு கருவுக்குள் மற்ற உயிரினங்களின் ஜீன்களை எடுத்துப் புதுப் புது உயிரினங்களையும் உருவாக்கியுள்ளார்கள்.

அதே போல் குளோனிங் (CLONING) முறையிலும் ஒரே மாதிரி “மனிதர்களையே உருவாக்க முடியும்...! என்றும் கண்டுபிடித்துள்ளார்கள்.

அதைப் போல நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் ஒட்டுச் செடி போல் ஒட்ட வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒட்ட வைத்துக் கொள்வது என்றால் நமக்குள் உள்ள எல்லா குணங்களுக்குள்ளும் ஒட்ட வைக்க வேண்டும்.

நல்லது...கெட்டது... பிடித்தது...பிடிக்காதது... வேண்டியது...வேண்டாதது...! என்று எதையும் பார்க்காமல்
1.எல்லா எண்ணங்களுக்குள்ளும்
2.எல்லா உணர்வுகளுக்குள்ளும்
3.ஞானிகளின் உணர்வை ஒட்ட வைக்க வேண்டும்.

அதாவது ஞானிகளின் உணர்வை நமக்குள் (நமக்குள் என்றால் எல்லாம் சேர்த்துத்தான் “நாம்...!) கலக்கும் பருவத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு அணுக்களிலும் இவ்வாறு ஞானிகளின் உணர்வை இணைத்து விட்டால் ஞானிகளின் உணர்வுகள் கலந்து
1.புதுப் புதுக் கருக்களாகி
2.திரும்பத் திரும்ப எண்ணினால் முட்டையாகி
3.அந்த மெய் ஞானிகளையே எண்ணிக் கொண்டிருந்தால் அடை காத்தது போல் ஆகிவிடும்.

ஞானிகள் அவர்கள் உடலில் விளைய வைத்தது போல் நமக்குள்ளும் விளைந்து அதனின் பெருக்கம் அதிகமாகி நம் செயல்கள் ஞானிகளின் செயலாக மாறும்.

என்னிடம் அடிக்கடி ஈஸ்வரபட்டர் “நீ… கட்சி மாற வேண்டும்டா...!” என்பார்.

கட்சி மாற வேண்டும் என்றால் நம்மையறியாது தவறு செய்தாலும் (தெரிந்தோ அல்லது தெரியாமலோ...!) உடனடியாக அந்த மெய் ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும்.

அந்த ஞானிகளின் கட்சியாக மாற வேண்டும் என்பார். அதை ஒட்டிய செயலாக நாம் செயல்பட வேண்டும் என்பார்.

உதாரணமாக – நான் தவறு செய்துவிட்டேன். அந்தத் தவறு தேவையில்லை. அதனால் நான் ஞானிகள் சொன்னபடி நல்லதாக மாற்றிக் கொள்கிறேன் என்று அடுத்த கணமே தன் மனதை தன் எண்ணத்தை தன் உணர்வை தன் செயலை அப்படியே ஞானிகளுடன் ஒட்டிக் கொள்வது.

1.தவறு செய்ததில் அதிகம் நினைவைச் செலுத்தாதபடி
2.தவறு நடந்ததை வைத்து அல்லது தவறு செய்ததை வைத்து ஞானிகள் அருள் உணர்வுகளுடன் மிகவும் அதிகமாக ஒட்டிக் கொள்வது.

அப்படியே அவர்கள் செயலாகவே நான் இருக்க வேண்டும் என்று
1.எந்த அளவுக்கு அழுத்தமாகப் புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்த முடியுமோ செலுத்தி
2.அதன் மூலமாக அதிக அளவில் மெய் ஞானிகளின் உணர்வுகளை உறிஞ்சித் தனக்குள் சேர்த்துக் கொள்வது.

இப்படித்தான் செய்து கொண்டுள்ளேன். இது என்னுடைய அனுபவம்