ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 18, 2018

அகத்தில் இருக்கும் ஆற்றலைப் புறத்திலே செலுத்தும் விஞ்ஞான அறிவும்… புறத்தில் இருக்கும் ஆற்றல்களை அகத்திற்குள் வளர்க்கும் மெய் ஞான அறிவும்…!


ஆரம்பத்தில் விமானத்தைப் புதிதாக உருவாக்கி அதைக் கண்டுபிடித்தவன் அதை வைத்து வானிலே பறக்க முயற்சி செய்த போது அவன் தற்கொலை செய்வதற்காகத்தான் இதை எல்லாம் செய்கிறான் என்று மற்றவர்கள் சொன்னார்கள்.

அவன் கண்டுபிடித்த நிலைகளை எண்ணிப் பார்த்து அவனின் அறிவின் தன்மையை அவர்கள் அப்பொழுது எண்ணவில்லை. அவனுடைய யுக்திகளையும் அறிய முற்படவில்லை.

ஆகவே ஒரு மனிதன் ஒரு உயரிய தன்மைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?
1.அவன் சொல்லும் உயர்ந்த தன்மைக்குள் இருக்கும் உட்பொருள் என்ன…? என்று அறிந்து
2.அந்த உயர்வின் சிந்தனைக்கு நாமும் சென்று வந்தால்
3.அந்தச் சிந்தனைக்கொப்ப நம் சொல்லின் தன்மை அமையும்.

ஆனால் அப்படி எண்ணாதபடி குறையான உணர்வை நமக்குள் எடுத்து விட்டால் அந்தக் குறையின் உணர்வின் தன்மை நமக்குள் இயக்கப்பட்டு அந்த உணர்வின் செயலையே நம் சொல்லுக்குள்ளும் செயலுக்குள்ளும் கலந்து நம் சிந்தனையையே பிரித்துக் காட்டும்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு நாம் ஒரு கம்ப்யூட்டரைச் செயல்படுத்துகிறோம் என்றால் ஒரே நிமிடத்தில் நூறு பாஷைகளில் மொழி பெயர்ப்பு செய்கிறது.

அதனுடைய காந்தப்புலன் இயக்க ஓட்டத்தில் அழுத்தத்தை அது செயல்படுத்தும் போது எந்தெந்தப் பாஷை இருக்கின்றதோ அந்த ஒலிக்குத் தக்கவாறு எழுத்துகளை முதலில் உருவமைத்துக் கொள்கின்றது.

அப்போது ஒரே வரிசையில் செல்லப்படும் போது இதனின் அழுத்தத்திற்குத் தக்கவாறு அதை மொழி பெயர்ப்புச் செய்வதும் அதற்கடுத்து
1.அதே எழுத்திற்கு இதனுடைய நிலைகள் இன்னது தான் என்று ஒலி அலைகளைப் பதிவு செய்வதும்
2.ஒரு நிமிடத்திற்குள் அங்கே போய்ப் பாய்வதற்கு முன் மொழி பெயர்ப்பு செய்து நம் கண்ணுக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துகின்றது.

ஆனால் அதை ஒரு மனிதன் மொழி பெயர்ப்பு செய்து அதனின் அர்த்தத்தைக் காண வேண்டும் என்றால் ஒவ்வொன்றாக எடுத்து அத்தனை மொழிக்கும் தனித் தனியாகப் பல தடவைகள் செய்ய வேண்டும்.

ஆனால் பதிவு செய்யும் உணர்வைக் கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்காக அது பதிவு செய்து கொள்கின்றது. ஆணையிட்ட பின் அதன் வரிசையிலே இதனுடைய நிலைகளைத் தெளிவாக்கிக் கொண்டு ஒரு நிமிடத்தில் நாம் அந்தப் பாஷைகளைப் புரிந்து மொழி பெயர்ப்பு செய்து காட்டுகின்றது.

அதே போல வான மண்டலத்தில் சுழலும் கோள்களைப் பற்றியும் நட்சத்திரங்களைப் பற்றியும் மற்ற சூரியக் குடும்பங்களையும் இன்று காணுகின்றார்கள். புதிது புதிதாக விண் கற்கள் வருவதையும் பூமிக்கு அருகில் வருகிறது என்றும் பல இயந்திரங்களையும் கருவிகளையும் வைத்துப் பார்த்துச் சொல்கிறார்கள்.

விஞ்ஞான அறிவின் தன்மை கொண்டு ஒலி/ஒளி அலைகள் அங்கே வரப்படும் போது
1.எத்தனை டிகிரியில் இதனுடைய அலைகள் வருகின்றது...?
2.இதனின் வேக அழுத்தம் எவ்வாறு இருக்கின்றது...?
3.கோள்களின் சுழற்சியின் வேகம் எவ்வாறு இருக்கிறது...?
4.இது நடு மையத்தில் ஊடுருவி நம் சூரியனின் ஈர்ப்பிற்கு வரும் போது இடைமறித்து எந்தக் கோள்களின் பக்கம் சாய்கின்றது…? என்று
5.அதன் நிலைகளைத் தெளிவாகக் கண்டுணர்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் எத்தகைய புறப் பொருளின் உதவிகள் இல்லாமலே அன்றைய மெய் ஞானிகள் வான இயல் சாஸ்திரத்தைக் கண்டார்கள். அதையெல்லாம் மற்றவர்களுக்கும் உணர்த்தவும் செய்தார்கள். அப்படி மெய் ஞான அறிவால் காணக் கூடியதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் இப்போது உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

யாம் பதிவு செய்யும் உணர்வுகள் கொண்டு அந்த மெய் ஞானிகளின் உணர்வுடன் நீங்கள் ஒன்றினால் அதே உணர்வு உங்களுக்குள் பெருகி
1.விஞ்ஞானிகள் கருவியின் நிலைகள் கொண்டு பார்த்துச் சொல்வதை
2.நீங்கள் கருவியின் துணை இல்லாதபடி உங்கள் நினைவின் ஆற்றலைக் கொண்டு செல்லும் போது
3.அந்த விண்ணின் அதிர்வலைகளை நீங்களும் நுகர்ந்துணர்ந்து அதன்  உணர்வலைகளைக் குவித்து உங்களாலும் சொல்ல முடியும்.

விண்ணிலிருந்து வரும் கற்கள் (ASTEROIDS) நம் பூமியில் விழுந்து விடுமோ…! இன்று விஞ்ஞானிகள் பயத்தால் வெளிப்படுத்தினாலும்
1.அந்த மெய் ஞானி உணர்வுகளைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் எண்ண அலைகளை அங்கே பாய்ச்சி
2.அத்தகைய பாறை திசை திரும்ப வேண்டும்…! என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு ஒரு ஆயிரம் பேர் சொல்வார்கள் என்றால்
3.நாம் பாய்ச்சும் ஒலி அலைகள் “அங்கே  குறுக்காட்டி…!” (இடைமறித்து) அதைத் திசை மாற்றவும் உதவும்
4.நம் பூமியில் விழுகாது செய்ய முடியும்.

யாம் (ஞானகுரு) சொல்வது உங்களுக்கு எளிதாகத் தெரியும். ஆனால் உங்களுக்குள் அத்தகைய ஆற்றல் உண்டு. அந்த மெய் ஞானிகள் பெற்ற பேராற்றல்களை உங்களாலும் பெற முடியும்… அவர்களைப் போல அனைத்தையும் காண முடியும்…! என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.