ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 5, 2018

நம் “ஆத்ம ஜோதியைப் பற்றி” ஈஸ்வரபட்டர் சொன்னது…!


ஒவ்வொரு மனிதனும் “தன்னுள் ஆண்டவன் இருக்கின்றான்…!” என்ற எண்ணமுடன் வாழ்ந்திட்டால் இன்றைய கலியில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் இருக்காதப்பா…!

ஆண்டவனின் சக்தியைக் கல்லிலும் மண்ணிலும் தான் பார்த்து வணங்குகின்றார்கள். இவர்கள் வேண்டுவது எல்லாம் அக்கல்லின் ரூபத்தில் இவர்களுக்கு வந்து அருள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் இன்றும் உள்ளது.

நம் ஆத்மாவில் உள்ள அருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமப்பா…! நம் உயிராத்மாவின் மூலமாக நாம் ஜெபம் இருக்கும் பொழுது எல்லா நிலையையும் அறிந்து கொள்ளலாம்.
1.நாம் யார்…?
2.நம் உயிராத்மாவின் நிலை என்ன…?
3.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தி என்ன…? என்ற எல்லா உண்மைகளையுமே அறிந்து கொள்ளலாம்.

நாம் பாவம் செய்தோம். நமக்கு இனி இந்த ஜென்மத்தில் என்ன பேறு கிடைக்கப் போகிறது என்று எண்ணிடலாகாதப்பா..!

தவறை எண்ணி வருந்தும் பொழுதே நம் உயிராத்மா நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றதப்பா…! நம் உயிராத்மாவின் நிலையேதான் ஆண்டவன் என்ற ஒரே எண்ணம் மக்களுக்கு வந்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமப்பா…!

அழியும் யுகத்தில்… அழியாச் செல்வம்… ஒரே செல்வம்… “இந்த உயிராத்மா தானப்பா…!”

கலியின் கடைசியில் கல்கி ஆரம்பமான நிலையில் இந்தக் கடைசி சந்தர்ப்பத்தை ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக் கொண்டு நம் ஆத்ம ஜோதியை அவ்வாண்டவனிடம் கலக்கவிட்டு ஆண்டவனுடன் ஆண்டவனாக சூட்சம உலகிற்கு அழைத்துச் செல்லத்தான் இதை உரைக்கின்றேனப்பா…!

1.இந்த உயிராத்மா என்னும் ஆண்டவனின் சக்தியைப் புரிந்து கொண்டு
2.ஆத்ம ஜோதியாகக் கலந்திட வேண்டும் என்பது தான்
3.ஈஸ்வரபட்டனாகிய நான் அளித்திடும் பொக்கிஷம்…!