ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 3, 2018

குழந்தைகள் தாய் தந்தையருக்குக் கொடுக்க வேண்டிய பேரானந்தப் பெரு மகிழ்ச்சி..!


தாய் தந்தையர் எத்தனையோ சிரமத்திற்கு மத்தியில் உங்களைப் பள்ளியில் சேர்த்து நல் ஒழுக்கத்தைக் கற்பிக்கும் நிலையையும் எதிர்காலத்தைச் சிந்தித்து செயல்படும் கல்வி அறிவினையும் புகட்டும் நிலையாக அனுப்பி உள்ளார்கள்.

உங்கள் அன்னை தந்தை உங்களுக்கு உடையும் உணவும் கொடுத்துக் கல்விக்கு வேண்டிய வசதியும் செய்து கொடுக்கின்றார்கள்.

ஆகவே பள்ளியிலே படிக்கும் குழந்தைகளாக இருப்போர் நீங்கள் அனைவரும் உங்கள் அன்னை தந்தை கொடுக்கும் வாக்கினை மதித்து நடந்து அவர்களை மகிழச் செய்யும் நிலையாக வளர்ந்து காட்ட வேண்டும்.

1.அந்தத் தாய் தந்தையரை நினைவில் கொண்டு அவர்களை மகிழச் செய்தால்
2.உங்கள் ஊர் மக்களை மகிழ்ந்திடும் நிலையாக உருவாக்குவீர்கள்.
3.உங்கள் ஊர் மகிழ்ந்திடும் நிலைகள் பெற்றால்
4.இந்த உலக மக்களும் மகிழ்ந்திடும் நிலையாக உங்கள் செயல்கள் அமையும்.

தாய் தந்தையரை மகிழ்ந்திடச் செய்ய வேண்டும் என்றால் குழந்தைகளாக இருக்கும் உங்களுக்குள் பகைமை உணர்வை ஊட்டும் தீமையான உணர்வுகள் அனைத்தையும் நீங்கள் அடக்கிட வேண்டும்.

1.தீமைகளை அடக்க வேண்டும் என்றால் உங்கள் தாயின் பேரன்பை நீங்கள் பெற வேண்டும்.
2.தாயின் பேரன்பைப் பெற்றால் மகரிஷிகளின் அரும் பெரும் சக்திகளை நீங்கள் எளிதில் பெற முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய உணர்வுகளை அடக்கி மெய் ஞானிகள் காட்டிய அருள் நெறிகளைக் கடைப்பிடித்து
1.உங்கள் அன்னை தந்தையரைப் பேரானந்த நிலை பெறச் செய்யும் நிலையையும்
2.உங்கள் அன்னை தந்தையரைப் பேரின்ப நிலைகள் பெறச் செய்யும் நிலையையும்
3.பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நீங்கள் செயல்படுத்துதல் வேண்டும்.

உங்கள் அன்னை தந்தை பேரானந்தம் கொண்டு மகிழ்ந்திட்டால் அவர்கள் விடும் நல்ல மூச்சலைகளும் இந்த பூமியில் படர்கின்றது.

நமது தாய் தந்தையருக்கு எவ்வளவு அன்புடன் சேவை செய்கின்றோமோ அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகின்றனரோ
1.அந்த மகிழ்ச்சி அடையும் உணர்வுகளும் நாம் மகிழ்ந்திடச் செய்த உணர்வுகளும் இதே சூரிய பகவானால் கவரப்பட்டு
2.நமது பூமித் தாய்க்கு மகிழ்ந்திடும் உணர்வாகப் பரப்புகின்றது.
3.குழந்தைகளாகிய நீங்கள் அவ்வாறு செய்வீர்கள். இந்த உலகைக் காத்திடும் மெய் ஞானிகளாக வளர்வீர்கள்.
4.நிச்சயம் நீங்கள் செயல்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

ஆகவே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊரையும் உலகையும் காத்திடும் அரும் பெரும் சக்தியாக நீங்கள் வளர வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.