ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 16, 2018

ஞானத்தின் வளர்ச்சியைக் கொண்டவனால் எதைப் பெருக்க முடிந்தது...? ஞானத்தை அறியாதவர்கள் (சூனியமாக) எதைப் பெருக்கினார்கள்...?


ரைட் சகோதரர்கள் (WRIGHT BROTHERS) இரண்டு பேரும் சேர்த்து அன்று ஒரு விமானத்தைச் செய்யத் தொடங்கினார்கள். பறவைகள் பறப்பதை ஊன்றிப் பார்த்து “அதைப் போல எப்படியும் பறக்க வேண்டும்...! என்று முயற்சி செய்தார்கள்.

பறவைகள் அதன் இறக்கைகள் வீசும் நிலைகள் கொண்டு அதற்குள் ஏற்படும் காற்றின் இயக்கத்தைக் கண்டுணர்ந்த பின்
1.“ரேடர் (RUDDER) அதனுடைய வேகமான நிலைகள் சுழற்சியாகி
2.மறுபடியும் தனக்குள்ளேயே சுழலச் செய்து
3.அந்த உணர்வின் ஈர்ப்பலையால் உந்தச் செய்வதும்
4.அது ஈர்க்கும் நிலைகள் கொண்டு மிதக்கும் நிலைகளையும் கண்டுபிடித்தான்...! (இரண்டு ரெக்கைகளை வைத்து.)

அதன் மூலம் இடைமறித்து வரும் காற்றின் நிலைகளை ஊடுருவிச் செல்வதும் அதனின் சுழலும் வேகத்தில் தனக்குள் அந்தக் காற்றை ஈர்க்கும்படிச் செய்து “தானாகவே மிதக்கச் செய்ய முடியும் என்று விமானமாக அன்று கண்டுபிடித்தான்.

அதைக் கண்டுபிடித்து அவன் பறப்பதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தான். ஆனால் மற்ற அனைவரும் என்ன செய்தார்கள்…?
1.தற்கொலை செய்வதற்கு தயார் ஆகிவிட்டார்கள்...
2.இந்த இரண்டு பேரும் மரணமடைவதற்கு எதுவோ அதற்காக வழிவகுத்துக் கொண்டு உள்ளார்கள் என்று
3.அந்நாட்டு மக்கள் அந்த இருவருடைய நிலைகளை எண்ணிப் பரிதாபப்படுகின்றார்கள்.

ஆனால் தன் எண்ணத்தால் வெற்றிகரமாகப் பறந்தும் காட்டினான். அத்தகையை வலுவான சிந்தனை கொண்டு அதைச் செயல்படுத்திக் காட்டினான்.

அவன் கண்டுபிடிப்பைப் பின் தொடர்ந்தவர்கள் அவர்களைப் போன்ற சிந்தனையைக் கொண்டு இன்று புவி ஈர்ப்பைக் கடந்து செல்லும் இராக்கெட்டுகளைக் கண்டுபிடித்தார்கள்.

மேலே சென்று மீண்டும் புவி ஈர்ப்பிற்குள் வரும் போது உராயும் தன்மை கொண்டு அது சூடாகாமல் தணிந்து பூமிக்குள் இறங்கும் நிலையையும் கண்டுபிடித்தான் அதன் வரிசையில் வரக்கூடியவன்.

1.ரைட் சகோதரர்கள் விஞ்ஞானத்தின் அறிவை அங்கே பெருக்கினார்கள்... “விமானத்தைக் கண்டுபிடித்தார்கள்...!
2.ஆனால் அதன் அருகிலே இருந்தவர்கள் அவர்களுடைய செயலைப் பார்த்து
3.பாவம்.. சாகப் போகிறார்கள்...! என்ற நிலையில் வேதனையத் தான் பெருக்கிக் கொண்டார்கள்.

இதைப் போன்று தான் முதலில் டி,வி.யைக் கண்டுபிடிக்கும் பொழுது புவி ஈர்ப்பின் நிலைகள் கொண்டு மனிதன் தன் எண்ணத்தால் எதைக் கவர்கின்றான் என்று அவன் உணர்ந்தான்.

அதை வைத்துத் தன் உணர்விற்குள் அவன் சிந்தனையை உயர்த்தினான்... பெருக்கினான்...! அந்தப் பெருக்கத்தின் தன்மை கொண்டு
1.ஒரு காந்தப்புலன் கவரும் நிலையும்
2.கவர்ந்திட்ட உணர்வின் தன்மை எதிலே உறைகின்றதோ
3.அது நிழல் படமாகத் தெரிகின்றது...! என்றும் அறிந்துணர்கின்றான்.

நீங்கள் வீட்டை அடைத்துக் கொண்டு பாருங்கள். அல்லது வீட்டில் ஜன்னலை அடைத்து விடுங்கள். அதன் வழியாகச் சிறிதளவு ஒளி வீட்டுக்குள் பட்டால் போதும்.
1.வெளியிலே யாராவது ரோட்டிலே நடந்து சென்றால்
2.அந்த ஒளி அலைகள் – “அவர்களின் நிழல்
3.நம் வீட்டிலே தலை கீழாக நடந்து போவதைப் பார்க்கலாம்.

அதாவது அடைத்திருக்கும் வீட்டிற்குள் வெளிச்சம் புகும் இடத்தின் அருகிலே செல்லப்படும் போது தலை கீழாக நடந்து போகிற மாதிரித் தெரியும். (இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்)

கேமராக்களின் மூலம் நேர்முகமாக எடுத்த படங்களைத் தலை கீழாகப் போட்டால் தான் நேராகத் தெரியும். ஆரம்ப காலச் சினிமாப் படங்கள் எல்லாம் அப்படித்தான்.

விஞ்ஞான அறிவால் “எதிர் மறையின் இயக்கங்கள் எவ்வாறு இயக்குகின்றது என்று அவன் அந்த அறிவைப் பெருக்கினான். பெருக்கிக் கொண்ட பின் அது எவ்வாறு ஒலி/ஒளியாக உணர்வலைகளை எவ்வாறு கவருகின்றது என்று டி.வி.யைக் கண்டுபிடித்த பின் அவன் பேரானந்தப் பெரு மகிழ்ச்சியைப் பெருக்கினான்.

அவன் டி.வி.யை உருவாக்கி மற்றவர்களிடம் அதைச் செய்து காண்பிக்கப்படும் போது பெண்களெல்லாம் சேர்த்து கோழி முட்டையால் அவனை அடித்துக் கொல்வதற்காக ஆரம்பித்தார்கள். அவன் போலீஸ் ஸ்டேஷனில போய்ச் சரணடைந்தான்.

புதிதாகக் கண்டுபிடித்தவன் விஞ்ஞான அறிவு கொண்டு சந்தோஷத்தைப் பெருக்கினான். ஆனால் இவர்கள் அவனைத் தாக்கும் உணர்வைப் பெருக்கினார்கள்.

காரணம்... நாங்கள் வீட்டிலே குளிப்போம். பெண்களை நிர்வாணமாகப் பார்ப்பதற்காக வேண்டி இந்த மாதிரிச் செய்திருக்கின்றான் என்பது அவர்கள் குறுகிய எண்ணம்.
1.எதனின் இணைப்பின் நிலைகள் கொண்டு எது இயங்குகிறது என்ற நிலையை அவர்கள் அறியாது
2.அந்தத் தீமையின் நிலையைப் பெருக்கிக் கொண்டார்கள் அவர்கள்,

ஏனென்றால் அவர்கள் கண்களால் அவன் கண்டுபிடிப்பைப் பார்க்கப்படும் போது அந்தக் குறையான உணர்வுகளை அவர்கள் உயிர் பிரம்மமாக்கி அதனின் குழந்தையாகச் சிருஷ்டித்து அதனின் செயலாக்கமாக அவனைத் தாக்கும்படிச் செய்கின்றது.

ஆனால் அவனோ உயர்ந்த நிலைகள் கொண்டு விஞ்ஞான அறிவைக் காணும் நிலைகளில் அவனுக்குள் அதைப் பெருக்கினான். அவனைப் போன்ற எண்ணம் கொண்டவர்கள் இன்று எத்தனை மடங்கு பெருக்கி உள்ளார்கள்...!

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் மற்றவர்கள் செயல்களை எல்லாம் உற்றுப் பார்த்தாலும் பார்த்த நிலையில் நாம் நமக்குள் எதைப் பெருக்குகிறோம் என்று சிந்திக்க வேண்டும்.

1.நமக்குள் வேதனையையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் கொதிப்பையும் பெருக்க வேண்டியதில்லை.
2.மாறாக மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கிக் கொண்டு வர வேண்டும்.
3.இந்த மனித வாழ்க்கையில் நாம் முழுமை அடைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

தன்னை அறிந்தவன் இந்த மண்ணை அறிந்தவன் விண்ணை அறிந்தவன் அவர்கள் எல்லாம் இன்றும் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே இந்த வாழ்க்கையில் வந்த இருளை அகற்றி ஒளியின் சுடராகப் பெருக்கி உயிராத்மாவை ஒளியாக மாற்றி அந்த எல்லையை அடைதல் வேண்டும். அது தான் கடைசி எல்லை...!