ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 16, 2018

வெறுமனே ஆற்று வெள்ளத்தில் குளித்தால் அது ஆடிப் பெருக்கு அல்ல...!


நாம் ஒரு தொழில் செய்யப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதை ஆரம்பிக்கும் பொழுதே
1.தொழில் நஷ்டமாகி விடுமோ...!
2.சரியான லாபம் வராமல் போய்விடுமோ...! என்ற பயத்தை ஊட்டிச் செயல்படுத்துவோம் என்றால்
3.தொழிலைச் சீராகச் செய்யும் அறிவு இழக்கப்படுகின்றது.

ஆகவே அந்தக் குறையான எண்ணத்தை எடுத்துக் கொண்டு அதையே அதிகமாக வளர்த்தால்
1.குறையின் உணர்வுகள் அதிகரித்து
2.எந்தச் செயலை எடுத்தாலும் அது முன்னாடி வந்து நம்மைப் பலவீனப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

அதற்குப் பதிலாக அந்தக் குறைகளை எல்லாம் நீக்கும் உணர்வின் எண்ணம் கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்டு அதை அறிய முற்படும் போது
1.குறையை அகற்றிப் பிழைகளை நீக்கிச் செயல்படும் உணர்வுகள் இணைந்து
2.உங்கள் தொழிலைச் சீராக்கச் செய்யும். சரியான பலனும் கொடுக்கும்.

அதைப் போன்று குடும்பத்தில் குறைகள் வந்தாலும் அந்தக் குறைகள் எதிலே எப்படி வந்தது என்று அதை அறியும் தன்மைக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தியைத் தனக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்ற இதை நம்முள் பெருக்கி இருள் சூழ்ந்த நிலைகளைப் பிளந்து குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும்.

உதாரணமாகக் காற்று அதிகமாக வரும் போது தூசிகளை எல்லாம் எப்படி அடித்துச் செல்கின்றதோ அதைப் போன்று எத்தகைய தீமைகள் நம்மைச் சூழ்ந்து வந்தாலும் அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து நம்மை அறியாது வந்த தீமைகளை நீக்கிடல் வேண்டும்.

இந்த உணர்வினை நமக்குள் பெருக்குதல் வேண்டும். இது தான் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்பது.

ஆனால் ஆற்றிலே வெள்ளம் போகிறது. பதினெட்டாம் பெருக்கு என்று அதிலே போய்க் குளித்துவிட்டுப் பின் உணவாக உட்கொண்டால் அது ஐதீகம் தான்...!

ஆடிப் பெருக்கு என்று ஆற்றிலே குளித்து விட்டு ஆலயத்திற்குள் செல்லும் போது நாம் எதைப் பெருக்குகிறோம்...?
1.அங்கே ஞானிகள் காட்டிய வழியில் செய்ல்படுகின்றோமா...?
2.ஒருவருக்கொருவர் உயர்ந்த எண்ணங்களையும் உயர்ந்த பண்புகளையும் அங்கே பெருக்குகின்றோமா...?

ஆலயத்திற்குள் உள்ளே செல்லும் பொழுதே நமக்கு முன் வருவோரைத் தள்ளி விட்டு நாம் முந்திச் செல்ல வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம். மற்றவரைத் தள்ளி விட்டு... “நாம் பெற வேண்டும்...! என்ற நிலையைத்தான் ஆலயங்களில் பெருக்குகிறோம்.

ஆனால் ஆற்றிலே நீர் வெள்ளமாகப் பெருகிச் செல்லும் போது அதற்குள் வரும் அழுக்குகளை எல்லாம் கரைத்துச் செல்கின்றது. குளித்தவுடன் அங்கே நிற்பதில்லை.

அதைப் போன்று தான் அந்த மெய் ஞானிகளின் உணர்வை ஒவ்வொருவரும் நமக்குள் செலுத்தி வாழ்க்கையில் வந்த தீமைகளைக் கரைத்து அருள் மகரிஷியின் உணர்வை நமக்குள் பெருக்காகப் பெருக்கிடல் வேண்டும்.

அந்த அருள் உணர்வுகள் நமக்குள் பெருகினால்தான் நம்முடைய பண்புகள் பெருகும். பண்புகள் பெருகினால் வாழ்க்கை உயரும்.
1.தெய்வீக அன்பை வளர்த்து
2.தெய்வீகப் பண்புகளை வளர்த்து
3.தெய்வீக சக்திகளைப் பெருக்குவதற்கே ஆடி பதினெட்டாம் பெருக்கு.