ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2018

எண்ணிலடங்காத மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொன்றாகக் கொடுக்கின்றோம்


மாமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறுவதற்கு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் வாக்காக (ஞான வித்து) உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

மெய் ஒளியினுடைய தன்மைகளை நீங்கள் பெற வேண்டும். மெய் ஞானிகள் கண்ட அந்த அருள் வழிகளிலே செல்ல வேண்டும் என்ற அந்த நினைவின் வலுக் கொண்டு யாம் (ஞானகுரு) சொல்லும் தியானத்தையும் ஆத்ம சுத்தி என்ற அருள் வாக்கினையும் நீங்கள் சரியான முறையில் கடைப்பிடித்தால்
1.அருள் ஞானியின் ஆற்றல் மிக்க அருள் சக்திகள் உங்கள் உடலுக்குள் ஊடுருவி
2.உங்கள் உடலிலில் இருக்க கூடிய துன்பங்களை அது நீக்கி
3.உங்கள் உணர்வுகள் அனைத்திலும் மகிழ்ச்சி ஊட்டவும்
4.உங்கள் சொல்லில் இனிமையும்
5.உங்கள் செயல் அனைத்தையும் நல்லதாக ஆக்கக்கூடிய நிலைகளும் ஏற்படுகின்றது.

அப்படி ஏற்படுத்துவதற்குத் தான் இதை அடிக்கடி உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றோம். எல்லாவற்றையும் நீங்கள் தெரிந்து கொண்ட பின் அதன் வழிகளிலே எடுப்பதென்றால் மிகச் சிரமம்.

ஒரு மாமரத்தின் வித்தைப் பூமியிலே விதைத்த பின் அது எத்தகைய சத்தின் தன்மையைத் தனக்குள் கொணர்ந்து அதனின் வளர்ச்சியில் அதே  மாமரத்தின் வித்தை எண்ணிலடங்காத நிலைகளில் அது வளரச் செய்கின்றதோ அதைப்போல
1.மகரிஷிகளின் அருள் வித்தான ஞான வித்தை உங்களுக்குள் பதியச் செய்யும் பொழுது
2.பதியச் செய்ததை மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வந்து அதைப் பெறவேண்டும் என்று நீங்கள் ஏங்கித் தியானித்தால்
3.யாம் (ஞானகுரு) போதித்த உணர்வின் அந்த மெய் ஞானிகளின் ஞான சத்தின் தன்மையை உங்களுக்குள் கவரும் சக்தியாக அது உருவாகின்றது.

அவ்வாறு அந்தச் சக்தியை நீங்கள் பெற்று உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எத்தகைய துன்பங்களையும் போக்கவும் அதேசமயம் மெய் ஞானிகள் சென்ற அருள் வழி கொண்டு உங்கள் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் வல்லமை உங்களுக்கே கிடைக்கின்றது.

அதைக் கிடைக்கச் செய்வதற்கு தான் அடிக்கடி சொல்வது.
1.நான் ஏதோ பின்னிப் பின்னிப் பேசுகிறேன் என்று எண்ண வேண்டாம்.
2.இந்தப் பின்னலுக்குள் பல நிலைகள் உண்டு
3.பல நூலின் தன்மை பின்னி வரும் போதுதான் அந்த பின்னலின் நிலைகள் கொண்டு
4.பலதரப்பட்ட ஆடைகளாகவும் அதை அழகுபடுத்தும் நிலையாகவும் வருகின்றது.

அதைப் போன்ற நிலையில் அந்த மெய் உணர்வின் சக்தி உங்களுக்குள் வரப்படும் போது
1.தெளிந்த சிந்தனைக்குரிய தியானத்தின் நிலைகள் வளர்ந்து
2.அதன் மூலம் பல ஆற்றல் மிக்க நிலைகளைக் குவித்து
3.உங்களுக்குள்ளேயே அருள் ஞான வழிகளை அது காண்பிக்கும்.
4.அந்த அருள் வழிகளிலே நீங்கள் சீராகச் செல்லவும் இது உதவும்.

குருநாதர் எவ்வழியில் எமக்குக் காட்டினாரோ அதன்படியே தான் உங்களை அறியாமலேயே மெய் ஞானத்தின் அருள் வழியில் நீங்கள் செல்லவும் விஞ்ஞான நிலையிலிருந்து வரக்கூடிய இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளவும் மெய் வழியின் தன்மையை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ளவும் மகரிஷிகள் பெற்ற அந்த ஆற்றல் மிக்க சக்தியை உங்களைப் பெறச் செய்யவும் இதைச் செய்து கொண்டிருக்கின்றோம்.