ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 17, 2018

ஒவ்வொரு கணவனும் மனைவியும் வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரம் போன்று இணை பிரியாது ஒளியாக வாழ வேண்டும்


அருந்ததியும்  வசிஷ்டரும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த உடலில் இருக்கப்படும் போது இரு மனமும் ஒன்றாகி ஒரு மனதுடன் உணர்வின் ஒளியாகி என்றும் நிலையான சரீரத்தைப் பெற்றுள்ளார்கள்.

நாம் தியானம் இருப்பது போன்றே தான் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளியை அவர்கள் இருவருமே பெற்று ஒருவருக்கொருவர் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வை வளர்த்து அதன் வழிகளிலே இரு சரீரமும் ஒரு சரீரமாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
1.அருந்ததி வசிஷ்டர் என்ற இந்த இரு நட்சத்திரங்கள்
2.ஒன்றின் பிணைப்புடன் ஒன்று சுழன்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

கணவன் மனைவி என்ற இரு சரீரங்களாக இருந்தாலும் இந்த உணர்வை ஒத்த அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளை நாம் எண்ணி ஏங்கும்போது இரு உடலும் ஒரே உணர்வாகக் கலந்து என்றும் நிலையான நிலைகளைப் பெறும்.

கணவனும் மனைவியும் இருவரும் சேரும் பொழுது குழந்தை எப்படிப் பிறக்கின்றதோ அதைப்போல
1.இரு மனமும் ஒன்றாகும் போது ஒரு சரீரமாகி
2.விண்ணிலிருந்து வரக்கூடிய சக்தியை சிவ சக்தியாகக் கவர்ந்து
3.தீய வினைகளை நீக்கி விஷத்தை ஒடுக்கி ஒளியின் சரீரமாக அந்த உருவின் தன்மையை கருவாக உருப் பெற செய்து
4.மெய் வழியில் என்றுமே ஒளி சுடராகத் திகழ்ந்திருக்கும்.

இந்த மனித வாழ்க்கையில் எவ்வளவு மகிழ்ந்து இருந்தோமோ அந்த மகிழ்ச்சி என்றும் அழியாத நிலைகளில் என்றும் பதினாறு என்ற நிலைகள் கொண்டு
1.இனி ஒரு சரீரம் எடுக்காது
2.ஒளி சரீரத்தையே நிலையான சரீரமாக பெற்றுச் செல்லும் நிலை வருகின்றது.

இந்த மனித உடலில் இருக்கும் போதே கணவன் மனைவி இருவரும் இந்தத் தியானத்தின் மூலமாக அந்த இணை பிரியாத நிலைகளைக் கொண்டு வர வேண்டும்.

கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும். மனைவிக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.

ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் நூறு முறையாவது இது போன்று கணவனும் மனைவியும் எண்ணினால் அந்த உணர்வுகள் ஓங்கி வளர இது ஏதுவாகும்.

1.எந்த உண்மைகளைக் காண வேண்டும் என்றாலும்
2.எந்த வழிகளில் நன்மை பெற வேண்டும் என்றாலும்
3.எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்றாலும்
4.கணவன் மனைவி இருவரும் ஒருமித்த நிலைகள் கொண்டு  எண்ணிச் செயல்படுத்திடல் வேண்டும்.

எங்கள் (கணவன் மனைவி) பார்வை அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். எங்களைப் பார்போருக்கு நல்ல மனம் வர வேண்டும்... நல்ல எண்ணங்கள் வர வேண்டும்... என்று எண்ணி வலு ஏற்றிக் கொண்டால்
1.நமக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எத்தகைய நிலைகள் இருந்தாலும்
2.அந்த உணர்வுகள் நமக்குள் புகுந்து நம்மைச் சோர்வடையச் செய்யாத வண்ணம் தடுக்கும்.

இப்படி அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்த்து நமக்குள் அந்த மெய் ஒளியை வளர்க்கும் நிலை வரப்படும் பொழுது நம்மைப் பார்போர் நம் மீது கொண்ட வெறுப்பு சிறுகச் சிறுகத் தணிந்து நம்முடன் அணுகும் நிலையும்... அவர்களை அறியாத இருள்களை நீக்கும் நிலையும் பெறும்....!

ஆகவே உங்களை நீங்கள் நம்ப வேண்டும். ஏனென்றால் நீங்கள் எண்ணிய உணர்வுகளை
1.இந்த உடலிலே உயிர் தான் அணைக்கின்றது... இயக்குகின்றது... வளர்க்கின்றது...!
2.வளர்ந்த நிலையைத் தன்னுடன் அணைத்துக் கொள்கின்றது.
3.உடலை விட்டுச் சென்ற பின் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மைக்கொப்ப அடுத்த உடலாக மாற்றுகின்றது.

ஆகையினால் இந்த உண்மையை அறிந்த நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலைக் கோவிலாக மதித்துப் பழகுங்கள்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர்ந்து அறியாது சேர்ந்த இருளைப் போக்கி மெய் வழி செல்ல வேண்டும்... மெய் ஒளியை அடைய வேண்டும் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றேன்.