ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 2, 2018

நெருப்பை ஒத்த மனிதர்கள்…! - அதாவது நெருப்பை ஒத்த உணர்வினை வளர்த்துக் கொண்டவர்கள்தான் மாமகரிஷிகள்…!

கடந்த காலங்களில் அரசர்கள் மாற்று அரசர்களிடமிருந்து தப்பிப்பதற்காகவும் அடுத்த நாட்டைக் கைப்பற்றவும் தங்கள் குழந்தைகளை மிகவும் வலிமை கொண்டவர்களாக உருவாக்கினார்கள்.

ஏனென்றால் தன் குழந்தை அவன் வளர்ந்து அரசனாகும் பொழுது சூழ்ச்சியால் விஷத்தைக் கொடுத்து எதிரிகள் அவனைக் கொன்று விடுவார்கள் என்ற நிலையில் அவனைக் காப்பதற்காக அவ்வாறு வளர்த்தார்கள்.

அந்தக் குழந்தை தாயின் கருவில் இருக்கப்படும் பொழுதே
1.விஷத்தைச் சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுக ஒரு தலை முடியில் தொட்டு
2.அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் தாய்க்குக் கொடுத்து
3.அந்தக் குழந்தைக்கு இந்த விஷத்தை ஏற்றிவிடுவார்கள்
4.குழந்தை பிறந்த பின்னும் தாய்ப் பால் ஊட்டும் பொழுது சிறுகச் சிறுக இந்த விஷத்தை உடலுக்குள் ஏற்றிவிடுவார்கள்.

 அப்படி ஏற்றிவிட்டால் மற்றவர்கள் எந்த விஷத்தின் தன்மை கொடுத்தாலும் அவர்களை மாய்த்திட முடியாது. அதே சமயத்தில் இந்த விஷத்தை உணவாக உட்கொண்ட பின் அந்தக் குழந்தையின் உணர்வுகள் அனைத்தும் வீரியம் கொண்டதாக மாறிவிடுகின்றது.

அதனால் தான் கடந்த கால அரசர்கள் அவர்களுடைய வலுக்கள் மிக அதிகம். அவர்கள் தூக்கிக்ச் சண்டை போட்ட கத்திகளை இன்று நாம் நான்கு பேர் கொண்டு சுமக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் அதை வைத்துத்தான் எதிரிகள் போட்டிருக்கும் பாதுகாப்புக் கவசங்களையும் தெறிக்கச் செய்து சண்டையிட்டிருக்கின்றார்கள்.

அந்த விஷத்தின் தன்மை கொண்டு அரசர்கள் வந்தது போல பண்டைய கால மெய் ஞானிகளும் மகரிஷிகளும் அவர்கள் விண்ணின் ஆற்றலை வளர்த்துக் கொண்டவர்கள்.

அத்தகைய விண்ணின் ஆற்றலைப் பெற்றுத்தான் மெய் ஞானிகள் தங்கள் மனித உடலிலிருந்து தீய உணர்வுகளை மாற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.
1.விண் சென்ற அந்த மெய் ஞானிகளிடமிருந்து வெளிப்படும் பேராற்றல்மிக்க சக்திகளை
2.சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அந்த உணர்வின் அலைகளாக மாற்றி
3.நமக்கு முன் சுழலச் செய்து கொண்டு இருக்கின்றது.

உதாரணமாக நெருப்பின் அருகிலே சென்றால் அந்த நெருப்பின் தணல்கள் தன் அருகிலே வராதபடி நம்மை ஒதுக்கிவிடும். அதைப் போல
1.நெருப்பை ஒத்த மனிதர்கள்…!
2.அதாவது நெருப்பை ஒத்த உணர்வினை வளர்த்துக் கொண்டவர்கள் அந்த மெய் ஞானிகள்.

ஏனென்றால் இன்னொரு உடலின் ஈர்ப்புக்குள் செல்லாதபடி உயிரின் ஈர்ப்புடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இன்றும் அவர்கள் நிலையாக இருந்து கொண்டுள்ளார்கள் அந்த மாமகரிஷிகள்.

ஆகவே அவர்கள் உடல் பெறும் உணர்வுகளை அறுத்துச் சென்றவர்கள். ஆனால் அவர்களின் பேராற்றலை நாம் பருக வேண்டும் என்றால் அதற்குண்டான சக்தி நமக்குத் தேவை.

அந்தச் சக்தியை தற்காலத்தில் விண் சென்ற நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் வளர்த்துக் கொண்டார். அந்த ஆற்றலைப் பெறும் தகுதியை எனக்கும் (ஞானகுரு) ஏற்படுத்தினார். என்னாலும் அந்த ஆற்றலைப் பெற்று வளர்க்க முடிந்தது.

குருநாதர் காட்டிய வழியில் அந்த மாமகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளைப் பெறக் கூடிய தகுதியை உங்களுக்கும் ஏற்படுத்துகின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.