ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 1, 2018

முன்னோர்களின் சமாதியைத் தூய்மைப்படுத்தி அவர்களைக் கும்பிடுகின்றோம்…! ஆனால் அவர்களை நாம் மோட்ச நிலை அடையச் செய்கின்றோமா…?


நம்முடைய முன்னோர்களைப் புதைத்த இடத்தை சமாதியைச் சுத்தப்படுத்தி விட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவுகளைப் படைத்துக் கும்பிட்டுவிட்டு அவர்களை நாம் பூமிக்குத் தான் இழுக்கின்றோம்.

உடலை விட்டுப் போகும் பொழுது அவர்களின் உயிரான்மா சாதாரணமாக எல்லோர் மேலேயும் பற்றாக இருந்து என்றால் யாருடைய ஈர்ப்பும் அதிகமாக இல்லாதபடி மொத்தமாகக் கலந்துவிடும். ஆனால்
1.அவர்களின் சமாதிகளை எல்லாம் சுத்தப்படுத்தி
2.அவர்கள் நினைவுகளை அதிகமாகக் கொண்டு வரும் போது
3.இதிலே யாருடைய எண்ணம் அதிகமாக இழுக்கின்றதோ அவர் இழுத்தவுடனே அவரின் உடலுக்குள் அந்த ஆன்மா போகும்.

அப்படி இல்லை என்றால் உடலை விட்டுப் பிரியும் அந்த ஆன்மா எந்தப் பக்தியின் நிலை கொண்டு எந்த மந்திரத்தைச் சொல்லி உடலுக்குள் விளைய வைத்ததோ
1.இவர்கள் சொன்ன மந்திரத்தை இன்னொருவர் பதிவு செய்து
2.அவர் அதே மந்திரத்தை பல முறைகள் சொன்னவுடனே
3.உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா அவர்கள் ஈர்ப்பிற்குப் போய்
4.அவர்கள் சொன்னபடி எல்லாம் கேட்கும்.

உதாரணமாக நம்முடைய சகஜ வாழ்க்கையில் ஒரு மனிதன் ஏய்… இங்கே வா...!” என்று நம்மை மிரட்டிக் கூப்பிடுகின்றான். அவன் “மோசமான ஆள்…” என்று தெரிகிறது. ஆனால் கூப்பிட்ட பிற்பாடு போகவில்லை… என்றால் ஏதாவது செய்து விடுவான் என்பதால் உடனே போகிறோம்.

அதே சமயத்தில் ஒரு நல்ல மனிதன் நம்மிடம் “கொஞ்சம் இங்கே வந்து விட்டுப் போங்கள்…!” என்பார். பரவாயில்லை... போ..! உனக்கு வேலை இல்லை என்போம்.

அவர் மீண்டும் தம்பி... கொஞ்சம் ஒரு ஐந்து நிமிடம் தான் இருக்க வேண்டும் என்று கெஞ்சினால் “எனக்கு நேரமாகிப் போய்விட்டது... இப்பொழுது என்னால் வர முடியாது...!” என்போம்.

ஒரு முரடான ஆள் நம்மிடம் “டேய் இங்கே வா...! இங்கே நில்...!” என்று அதட்டினால் அந்த உணர்வைப் பதியச் செய்த பிற்பாடு நம் நல்ல உணர்வுகள் எல்லாம் ஒடுங்கி அவர்கள் சொல்வதற்கெல்லாம் கட்டுப்படுகின்றோம். இதே போன்று தான்
1.உணர்வின் அழுத்தங்கள் கொண்டு மந்திர ஒலியால் சில கடினமான ஆவிகளுடைய உணர்வை எடுத்துக் கொண்டு
2.மந்திர ஒலிகளை எழுப்பி உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மாக்களை இழுத்து
3.அவர்களுக்கு வேண்டிய வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

இப்போது எப்படி ரேடியோ டி.வி. இயங்குகிறதோ அந்தந்த அலை வரிசைகளில் ஒலி பரப்பாகிக் கொண்டிருப்பதைத் திருப்பி வைத்தவுடன் அப்படியே நாம் பார்த்துக் கேட்டு மகிழ்கின்றோமோ அதே போல மனிதர்கள் நாம் நுகர்ந்து சுவாசிக்கும் பொழுது அந்த உயிரான்மாக்கள் உடலுக்குள் வந்துவிடும்.

உடலுக்குள் வந்தாலும் ஏற்கனவே அந்த உடலிலே விளைய வைத்த அதே நஞ்சினை இங்கேயும் விளைய வைக்கின்றது. இதை மாற்ற அன்றைய நிலைகளில் உண்மையில் சொன்ன முறைகள் எல்லாம் காலத்தால் மறைந்தே போய்விட்டது.

மூதாதையர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நம்மை உருவாக்கி வளர்ப்பதற்காக வேண்டி எத்தனையோ வேதனைகள் பட்டார்கள் பகைமைகளை வளர்த்துக் கொண்டார்கள். பின் நோயால் இறக்கின்றார்கள்.

அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்குள் அறியாது சேர்ந்த
1.அந்த நஞ்சான உணர்வுகள் அனைத்தும் கருக வேண்டும்
2.அவர்கள் மெய் ஒளி அங்கே காண வேண்டும் என்று
3.சப்தரிஷி மண்டலத்திற்கு நாம் உந்தித் தள்ள வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் குலங்களின் தெய்வங்களான முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை அந்த மெய் ஞானிகளின் அருள் வட்டத்தில் இணையச் செய்து பிறவா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால் அவர்கள் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை. இன்னொரு உடலுக்குள் வந்து நோயாகவோ பேயாகவோ இயக்குவதில்லை.
1.ஒவ்வொரு ஆத்மாவும் சுத்தமாகின்றது
2.ஒவ்வொரு உயிராத்மாவும் புனிதம் பெறுகின்றது
3.இந்தப் பரமாத்மாவும் தூய்மை அடைகின்றது.
4.இது தான் அன்றைய ஞானிகள் காட்டிய முறை.