ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 8, 2018

சில நேரங்களில் நாம் “எப்படித்தான் சிந்தனையில்லாது இப்படிச் செய்தேனோ… தெரியவில்லை…! என்று நம்மையே நொந்து மிகவும் வேதனைப்படுகின்றோம்… அதன் காரணம் என்ன…? அதிலிருந்து எப்படி மீள்வது…?


தொழில் செய்யும் ஒரு இடத்தில் மேஸ்திரியாக ஒருவர் இருக்கின்றார். அவரிடம் நூறு பேர் வேலை செய்கின்றனர். அந்த மேஸ்திரி மிகவும் பரிவு கொண்டவர். வேலைகளைப் பற்றி எல்லாருக்கும் பக்குவமாகச் சொல்லிக் கொடுப்பார்.

சொல்லிக் கொடுத்தாலும் கூட ஒருவன் சந்தர்ப்பம் அவன் குடும்பத்திலே ஏதோ ஒரு வெறுப்பின் தன்மை ஏற்பட்டு விடுகின்றது. அதனால் அவனின் சிந்தனை குறைந்து விடுகின்றது.

அவன் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் மணம் உடல் முழுவதற்கும் அந்த வேதனையான உணர்வு வந்து விடுகின்றது. அதே வேதனையுடன் இங்கே தொழில் செய்யக்கூடிய இடத்திற்கு வரும் போது  
1.அதே வேதனையான உணர்வைச் சுவாசித்துக் கொண்டிருப்பதால்
2.எந்த வேலையையும் கவனமில்லாதபடி செய்யத் தொடங்குவார்
3.கணக்குப் பிள்ளையாக (ACCOUNTANT) இருந்தால் கணக்குத் தப்புத் தப்பாக எழுதுவார்.
4.ஒரு எலக்ட்ரீசனாக இருந்தால் தெரியாமல் மின்சார வயரை இணைப்பை மாற்றிக் கொடுத்து விடுவார். அங்கே எல்லாம் ஃபீஸ் (FUSE) போய்விடும்.

அவருடைய சிந்தனை வேதனையுடன் இருந்தது என்றால் தன் கையால் ஸ்குரூ டிரைவரை (SCREW DRIVER) எர்த் (EARTH) ஆகாத இடத்தில் பிடிப்பதற்குப் பதில் இரும்புக் கம்பியைப் பிடித்து முறுக்க ஆரம்பித்து விடுவார்.

அப்புறம் “படார்…!” என்று அடித்து இவரைத் தூக்கி எறிந்துவிடும்
1.நாம் தெரியாமல் தொட்டு விட்டோம்…! என்று அப்புறம் தான் உணர்கின்றார்.
2.அதாவது ஜீவன் இருந்தால் தெரிந்து கொள்கின்றார்.
3.அப்படி இல்லாதபடி மின்சாரம் இவரை இழுத்துப் பிடித்துக் கொண்டது என்றால் மொத்தமாகப் போய்விடுகின்றார்.

இயற்கையின் சந்தர்ப்பவசத்தால் நாம் எடுத்து கொண்ட வேதனையான உணர்வுகள் இத்தனை பெரிய விளைவுகளுக்குக் காரணமாகின்றது.

மற்றவர்களைப் பற்றிய குற்றமாக இருந்தால் எல்லோருமே அதை ஓரளவுக்கு மறந்து விடுவார்கள். ஆனால் அவரவர் வீட்டுக்குள் என்று வரும் பொழுது மட்டும்… “தன் பையன் சொன்னபடி கேட்கவில்லை…!” என்றால் சுத்தமாகவே இருள் சூழ்ந்த நிலைகள் ஆக்கிவிடும்.

1.பையன் “கொஞ்சம் தவறு செய்து விட்டான்…” என்றால்
2.இப்படிச் செய்கின்றானே… அவன் எதிர் காலம் என்னவாகும்…?
3.நான் சம்பாரித்து வைத்து என்ன பண்ணுவது…? தொழில் செய்து என்ன செய்வது…? என்று
4.முதலில் இதைத் தனக்குள் இழுத்து வைத்துக் கொள்வார்கள்.

இதே எண்ணத்துடன் தொழிலோ மற்ற வேலைகளோ செய்யப் போகும் போது அங்கே இந்த இருள் சூழ்ந்த நிலைகளையே உருவாக்கும்.

ஏனென்றால் நாம் சுவாசிக்கும் அந்த வேதனை உணர்வுகள் நம் உடலிலே மணமாக மாறும் பொழுது அதையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கச் செய்து நம் எண்ணங்களைச் சீராக இயக்காதபடி கணக்கைத் தவறாகச் செய்யச் சொல்லும்.
1.சரியானதே நம் கண்களுக்குப் புலப்படாது...!
2.அப்புறம் கணக்கு தப்பாகவே வந்து கொண்டிருக்கும்.
3.அதைச் சரி செய்யத் திரும்பத் திரும்ப பார்க்கும் பொழுது… நம் மனது நோகும்.
4.அது நொந்து வேதனையாகும் பொழுது நம் உடலில் நோயாக மாறும்.

இதைப் போன்ற சிந்தனையற்ற செயல்களிலிருந்து நாம் அனைவருமே விடுபட வேண்டும். அதற்குத்தான் கோவில்களில் எல்லாம் விளக்கை வைத்துக் காட்டுகின்றார்கள்.

பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. இதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இவ்வாறு நாம் எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.
1.இப்படிச் செய்தால் நம்மை மறைக்கும் அந்த இருளான உணர்வுகளை அகற்ற முடியும்.
2.எதிர்பாராது நடக்கும் எத்தகைய தீமைகளிலிருந்தும் விடுபட முடியும்.

அதுமட்டுமல்ல…! பொருளறிந்து செயல்படும் திறன் என் பையன் பெறவேண்டும். அவன் சிந்தித்துச் செயல்பட வேண்டும். அவன் தெளிவானவனாக வர வேண்டும் என்று இந்த உணர்வைத் தன் பையனுக்குப் பாய்ச்சினால் அவனை எண்ணி நமக்கு வேதனை வராது.
1.நாம் பாய்ச்சும் உணர்வுகள் அவனுக்குள் ஊடுருவி
2.அவனையும் சிந்திக்கும்படி செய்யும்.
3.அவனை நல் வழிப்படுத்த அது உதவும்.

இதை எல்லாம் நாம் வாழ்க்கையில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.