ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 24, 2018

நம்மை எதிரிகளாகக் கருதுபவர்களிடமிருந்து விடுபட்டுத் தொழிலைச் சீராகச் செய்வது எப்படி…?


நாம் புதிதாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அந்தத் தொழில் சம்பந்தமான நுட்பங்களை அறிந்தவருடன் சேர்ந்து நாம் செய்யலாம் என்று விரும்புகின்றோம்.

அதே சமயத்தில் நமக்குப் பிடிக்காத நிலையில் ஒருவன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றான். எதிரி என்ற நிலைகள் கொண்டு அவன் செயல்படுகின்றான்.

அப்படி எதிரியின் தன்மையாக வரும் போது நாம் யாருடன் சேர்ந்து தொழிலைச் சீராக நடத்த வேண்டும் என்று விரும்பினோமோ அந்த நண்பரைத் “தகாதவன்” என்று இவன் எண்ணுகின்றான்.

அந்த நண்பனிடத்தில் தொழிலின் விஷயத்தைப் பற்றிச் சொல்லி கொண்டு இருக்கும் போதே இவன் தகாதவன் என்று சொல்லி தவறான செயல்களை எடுத்து நம்மிடம் திரும்பத் திரும்பச் சொல்கின்றான்.

1.இப்படிச் சொன்னவுடன் தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றும்
2.தொழில் செய்து வருமானத்தைப் பெருக்கலாம் என்று எண்ணியிருந்தாலும்
3.அவன் சொன்ன தவறான உணர்வு நம்முடன் அசுர சக்தியாக இது முதலிலே இணைந்து விடுகின்றது.

உதாரணமாக இன்று விஞ்ஞானிகள் இயல்பாக விளையக் கூடிய செடிகளில் மற்ற உணர்வின் அணு செல்களை இணைத்த பின் அது இணைந்த நிலைகளுக்கொப்ப அதனதன் இயக்கமாகப் புதுப் புது செடிகளாக உருவாக்கிக் காட்டுகின்றார்கள்.

அதைப் போன்று தான்
1.மனிதனின் வாழ்க்கையில் நம்முடைய எண்ணமும்
2.மற்றோர் சொல்லும் உணர்வும் நம் உயிருடன் கவர்ந்து
3.இரண்டையும் அலசிப் பார்க்கப்படும் போது இங்கே “குழப்பமாகின்றது….!”

நாம் தொழிலின் நிமித்தம் ஆர்வமாக இருக்கின்றோம். ஆனால் அதே சமயத்தில் மற்றவர்கள் அதில் இன்னென்ன சிக்கல் வருகின்றது,.. உன்னை இவன் ஏமாற்றி விடுவான் என்ற உணர்வின் தன்மையைக் கூட்டி விட்டால் இந்த உணர்வு கலந்தபின் இங்கே வலு இழக்கும் நிலைகளாக அசுர சக்தி வளர்ந்து விடுகின்றது.

நம்முடைய முன்னேற்றம் இங்கே தடைபடுகின்றது.

தீமைகள் அகற்றி விளைந்திடும் உணர்வு கொண்டு நாம் மனிதனாக வந்தாலும் இப்படித் தான் நமது வாழ்க்கையில் இந்த அசுர சக்திகள் புகுந்து விடுகின்றது.

புகுந்த பின் அத்தகைய உணர்வுகள் நமக்குள் இருந்து கொண்டு மனிதனை வாழ விடாது
1.இருளைப் போக்கும் உணர்வுகளைப் பெற்று மனிதனாக வளர்ந்து வந்த நிலையில்
2.மீண்டும் இருள் சூழும் நிலைக்கே வருகின்றது.

இதைத் தடுக்க வேண்டுமா இல்லையா…?

நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்த இருளைப் போக்கிய மெய் ஞானிகளை எண்ணி அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஆற்றல்மிக்க உணர்வின் சக்தியை நாம் கவர்ந்து நம் உடலுக்குள் சேர்ப்போம் என்றால் நமக்குள் அறியாது புகுந்த அசுர உணர்வுகளை அது மாய்க்கும்.

நம் சிந்தனைகளைச் சீராக்கி நாம் செய்யக் கூடிய காரியங்களைத் தடையில்லாது மன பலத்துடன் செயலாக்கச் செய்து வரும் இடையூறுகளிலிருந்து விடுபட்டு வாழ்க்கையை மகிழ்ந்து வாழச் செய்யும்.