ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 22, 2018

உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய பயமான நிலைகள் இருந்தாலும் அதிலிருந்து விடுபடும் உபாயத்தைக் காட்டுகின்றோம்...!


பாம்போ மற்ற உயிரினங்களோ ஒரு தரம் ஒன்று எதிர்த்துத் தாக்கி விட்டால் அதைக் கண்டு அஞ்சும்.

ஒரு நாய் குரைத்துக் கொண்டு கடிக்க வருகிறதென்றால் ஒரு கல்லை எடுத்து அதை நீங்கள் எறிந்தீர்கள் என்றால் அடுத்த முறை உங்களைக் கண்டாலே அது குரைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்து விடும்.

ஆனால் அதே சமயத்தில் அந்த நாய் வரும் போது எதிர்த்துத் தாக்குமோ…? என்ற எண்ணத்தில் நீங்கள் ஐய்யய்யோ... ஐய்யய்யோ...! என்று ஓடினால் விரட்டி கொண்டு வரும். நம் உணர்வுக்குத்தக்க நுகர்ந்த பின் அது தாக்கும் நிலைகள் வருகின்றது.

கல்லைக் கொண்டு அடித்தால் இந்த உணர்வு வலியான பின் “நம்மைத் தாக்குபவன்” என்ற உணர்வு கொண்டு அஞ்சி ஓடுகிறது.

இதைப்போன்ற இயற்கையின் நியதிகளை நாம் தெரிந்து கொண்டால் மெய் ஞானிகள் காட்டிய வழியில் வலுவான உணர்வை எடுக்கப்படும் போது தீமையான உணர்வு நமக்குள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.

தீமைகள் வரும் சமயம் பயமானால்... “ஈஸ்வரா...!” புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அங்கே புருவ மத்தியில் சேர்த்து அடைத்துப் பழக வேண்டும்.

1.அப்படிச் சேர்த்து விட்டால்
2.உயிரில் பட்டு அந்தப் பய உணர்வு நமக்குள் உள் செல்லாதபடி
3.மன உறுதி கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும்…? என்று
4.சிந்தித்துச் செயல்படும் சக்தி வலுவாக வரும்.

உதாரணமாக காட்டுக்குள் செல்லும்போது வழியில் நரி இருக்கிறது என்று நாம் அதைக் கண்டு பயந்து ஓடினால் துரத்தும். அப்படித் துரத்தும் சமயம் நாம் வேகமாக ஓடி வரும் பொழுது ஒரு மரத்தின் அருகில் வந்து “சடார்...!” என்று விலகி விட்டால் போதும்.

குருநாதர் சொன்ன முறைப்படி நான் (ஞானகுரு) காட்டுக்குள் செல்லும் பொழுது இதே போல ஒரு சமயம் யானை என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது. மற்றொரு சமயம் புலி என்னை துரத்திக் கொண்டு வருகிறது. இதெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள்.

புலி வேகமாக வந்த பின் “நேராக... மரத்தை நோக்கி ஓடு...” என்றார் குருநாதர். நேராக ஓடிய பின் “டப்...” என்று திரும்பிக் கொள்...! என்றார். அவர் சொன்ன மாதிரி நான் செய்ததும் வந்த வேகத்தில் மரத்தில் முட்டிக் கொண்டது புலி.

அதே மாதிரி இன்னொரு சமயம் யானை எம்மைக் குறி வைத்துத் துரத்துகிறது. நேராக மரத்தை நோக்கி நேராக ஓடி “டபக்..” என்று விலகி நான் அடுத்த மரத்தின் பக்கம் ஓடியவுடனே யானை வந்த வேகத்தில் பிரேக் (BRAKE) போட முடியாதபடி மரத்தில் போய் முட்டுகிறது.

இதே போல பல நிலைகள். இவையெல்லாம் மனிதனால் செய்யக் கூடிய நிலைகள்.

மரத்திலே இரண்டு முறை முட்டிய உடனே யானை சோர்ந்து போகிறது. விரட்டிப் பார்க்கிறது... இரண்டு அடி பட்ட உடனே தன்னாலே விலகி விடுகிறது. இந்த உணர்வின் இயக்கங்கள் மனிதனானவன் தன்னைக் கொன்று விடுவான்...! என்று எண்ணுகிறது.

தனி ஒரு யானையாக இருந்தால் மனிதனை விரட்டுகிறது. யானை கூட்டமாக இருந்தால் மனிதனை விரட்டாது. ஆனால் அது பயமில்லை. பயத்தால் தாக்குவது தான் யானை.

அதிலிருந்து வந்தவர்கள் தான் நாம். ஆகையினால் “மனிதன் அனைத்தும் அறிந்தவன்...!” என்று உணர்வின் அலையால் மற்ற உயிரினங்கள் அறிந்து கொள்ளும் சக்தி வருகின்றது.

1.ஒரு உயிரினம் மற்றதை எப்படித் துரத்துகிறது...?
2.நாம் எப்படி அஞ்சி ஓடுகின்றோம்...?
3.நுகர்ந்து விட்டால் அந்தப் பயமான அதிர்ச்சியான உணர்வுகள் நம் உடலுக்குள் என்ன செய்கிறது...?
4.இதிலிருந்து தப்பும் மார்க்கம் என்ன...? என்று
அதையெல்லாம் அனுபவத்தில் அறிந்து கொள்வதற்காகத்தான் நமது குருநாதர் காடு மேடு மலைகளிலெல்லாம் அலையச் செய்து இயற்கையின் உணர்வுகளை அறிந்துணரும்படி செய்தார்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா...?

1.இவையெல்லாம் அறிவால் அறிந்து...
2.உணர்வால் பதிவாக்கி...
3.அந்த உணர்வின் தன்மையை மீண்டும் எண்ணும்போது அந்த உணர்ச்சிள் கிளர்ந்து
4.நம்மைப் பாதுகாக்கும் உணர்ச்சிகள் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்க நம்மைச் செயல்படுத்தும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்...!