ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 20, 2018

பூவராகன்


இந்த உலகம் எவ்வளவோ சாக்கடையான நிலைகள் கொண்ட காற்று மண்டலமாக இருக்கின்றது.
1.மனித வாழ்க்கையில் அதை நுகர்ந்து நுகர்ந்து
2.உடலுக்குள் அந்தச் சாக்கடையான சத்தையே நாம் நுகரும் தன்மை அடைந்துள்ளோம்.

ஏனென்றால் விருப்பு வெறுப்பு கோபம் ஆத்திரம் குரோதம் வேதனை என்று பிறர் மேல் குறை கூறும் உணர்வுகளைத் தான் நாம் அதிகமாக வளர்த்திருக்கின்றோமே தவிர குறைகளை நீக்கும் உணர்வுகளை நமக்குள் வளர்க்கவே இல்லை.

பன்றி சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து அதனின் உணர்வின் துணை கொண்டு பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வருகின்றது.

நாற்றத்தை எண்ணாது நாற்றத்தை நீக்கும் உணர்வின் எண்ணங்களாக விளைந்து நல்லதை நுகரும் நிலையாகப் பெற்ற பின் தான் மனிதனாக உருப் பெறுகின்றது பன்றி.

இதை உணர்த்துவதற்காக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைச் (ஞானகுரு) சாக்கடைக்கு அருகிலே அமரச் செய்தார்.
1.இந்தச் சாக்கடையில் இருக்கும் நாற்றத்தை நீ நுகராதே.
2.நஞ்சை நீக்கிய அருள் ஞானி உணர்வை இங்கிருந்து நீ பெறு...! என்றார்.
3.அருள் ஞானியின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
4.சாக்கடையை நுகர்ந்தாலும் அது அறியத்தான் உதவும்.
5.சாக்கடையின் நாற்றம் உனக்குள் விளையும் சக்தியாக விளையாது.

அதாவது அருள் ஞானிகளின் உணர்வுகள் உனக்குள் வரும் போது இந்தச் வாழ்க்கையில் இருக்கும் சாக்கடையான உணர்வினை நீக்கி மெய்ப் பொருள் கண்டுணரும் சக்தியை நீ பெறுவாய். அதைப் பெறச் செய்வதற்கே நான் உன்னை இங்கே அழைத்தேன் என்றார் குருநாதர்.

சாக்கடைக்கு அருகில் வந்ததும் நீ எதை நுகர்கின்றாய்..? கண்ணால் பார்த்ததும் அந்தச் சாக்கடையை நுகர்ந்து ஐய்யய்ய... ஐய்யய்ய...! என்று  எண்ணுகின்றாய். அடுத்து அதை நினைக்கும் போதெல்லாம் உனக்குள் சாக்கடையிம் மணமே வருகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அந்த மணத்தை நீக்கிட வேண்டும் என்று எண்ணும் போது அதனுடைய உணர்வு உனக்குள் அந்தச் சாக்கடையை நீக்கும் எண்ணமாக வருகின்றது.

ஆகவே நாற்றத்தைப் பிளந்த அந்த வராகனைப் போன்று வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் கண்டுணர்ந்தாலும்
1.அவர்கள் குறைகள் நீங்க வேண்டும் என்று
2.குறைகளை நீக்கிடும் உணர்வாக நாம் வளர்க்க வேண்டும்.

தெளிந்துணர்ந்து செயல்படும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் வளர்க்கும் போது உடலுக்குள் இது விளைந்து நம் சொல்லின் உணர்வுகளை அவர்களுக்குள் செலுத்தப்படும்போது அங்கே குறைகளை நீக்கிடும் சக்திகளாகத் தோன்றுகின்றது.

ஆகவே யாரைக் கண்டாலும் எவரைக் கண்டாலும் அங்கு குறைகள் எதுவாக இருந்தாலும் என்ன செய்ய வேண்டும்...?

மகரிஷிகளில் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டு
1.நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்
3.மெய்ப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று
4.இதை எண்ணுவோம் என்றால் நமக்குள் அறிவித்த (குறையான) அந்த உணர்வுகள் மெய்ப் பொருள் காணும் நிலையாக வரும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் கண்டாலும் அதை அறிவிக்க மட்டும் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கடுத்து நாம் பயன்படுத்தக்கூடாது.

ஏனென்றால் அறிவிக்கச் செய்யும் நிலையை நாம் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி... “இப்படிச் செய்தான் இப்படிச் செய்தான்...!” என்று எண்ணும் போது நமக்குள் எதைத் தவறென்று காட்டியதோ அதே தவறின் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்து நம்மையும் தவறு செய்பவனாக வளர்த்துவிடும்.

மனித வாழ்க்கையில் குறை இல்லாது யாரும் நடந்ததில்லை. மனிதனுடைய சந்தர்ப்பம் குறையான உணர்வுகள் வரும் போது அந்த குறையின் உணர்வாக இயக்கப்படும் போது அதில் இருந்து நாம் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும்...?

டி.வி,யோ மற்றதோ மூடி மறைத்திருப்பதை நாம் அந்த சுவிட்சைப்  போடும் போது அது இயக்கி அங்கே அந்தப் படங்களைத் தெளிவாக நம்மைத் தெரிந்துணரச் செய்கிறது.

அதைப் போல தான் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணத்தை நாம் செலுத்தப்படும் போது
1.அது நமக்குள் மெய்ப் பொருளைக் கண்டுணரும் நிலைகளாக இயக்கி
2.ரிமோட் கண்ட்ரோலாக நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.
3.நம்முடைய சொல்லைக் கேட்போருக்கும் அவர்களுக்குள் இருக்கக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்க இது உதவும்.
4.மற்ற தீமைகள் வராதபடி நமக்குள் நல்ல உணர்வைத் தெரிந்து கொள்ளும் நிலையாக வருகின்றது.

நமக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் அந்த நிலையையும் தீமைகள் நமக்குள் புகாத நிலையையும் பெற வேண்டும் என்பதற்கே குருநாதர் எமக்குச் சாக்கடை அருகே அமரச் செய்து கொடுத்த அந்த உபதேசத்தை உங்களுக்கும் கொடுக்கின்றோம்.