ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 25, 2018

பாடல்கள் மூலம் சித்தர்கள் உணர்த்திய விஷத்தை நீக்கும் சூட்சமங்கள்


பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்களை அது காரணமாகக் காட்டி அதனின் ஆக்கமும் உணர்வின் செயல்களும் எவ்வாறு ஆகிறதென்று எளிய மக்களுக்கும் காட்டுவதற்காகச் சித்தர்கள் தங்கள் பாடல்கள் மூலம் உண்மைகளை உணர்த்தியுள்ளார்கள்.

பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வரும் போது தனது வளர்ச்சியில் அந்த உயிரினங்கள் அசுத்தங்களை எப்படி நீக்கியது…? அதன் வழியில் எவ்வாறு பெற்றது…? என்ற பொருள் பட அவர்கள் கவிப் புலமைகளை ஒரு சொல்லிற்குள் பல விளக்க உரைகளை அறியும் வண்ணம் கொடுத்தார்கள்.

இயற்கையில் ஒவ்வொறு உணர்வின் இயக்கங்களும் எது எதனுடன் சேருகின்றது…? அது எப்படி மாறுகின்றது…? என்று உணர்ந்தறிந்தே அந்த சித்தர்கள் செயல்பட்டார்கள்.

அவர்கள் பாடிய பாடல்களைப் படிக்கும் நிலையில் ஞானத்தின் வழித் தொடரிலே செல்லும் போது அவர்கள் வெளிப்படுத்திய உண்மையின் உணர்வுகளை அறியும் அறிவு வரும்.

1.சித்தர்கள் கூறிய நியாயத்தை ஏற்றுக் கொள்ளும் போது
2.அந்த உட்பிரிவின் மூலத்தை அறியும் தன்மை வருகிறது.
3.அவர்கள் வழிகளில் அதைச் செயல்படுத்த எண்ணினால் படிப்பவர்களுக்கு அது உதவும்.

இல்லையென்றால் சித்தர்களின் புலமையை நாங்கள் அறிந்து கொண்டோம் என்று அவரவர் உடலின் இச்சைக்கு மாற்றினால் தப்பான வழியைக் காட்டும். ஒரு தரம் தப்பைக் காட்டி விட்டால் பின் அந்தத் தப்பின் வழியே தான் செல்லும்.

குழம்பு வைக்கின்றோம் என்றால் ஒரு சிலருக்கு உப்பின் தன்மை அதிகமாக இருந்தால் சுவையாக இருக்கிறது என்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு உப்பின் தன்மை அதிகரித்தால் வெறுப்பின் தன்மை வருகிறது.

இதைப்போல தான் அவரவர் உடலிலே எடுத்துக் கொண்ட உணர்வின் சேர்க்கைக்கொப்ப உணர்வின் இயக்கங்களும் அறிதலும் தனக்குள் சுவைத்தலும் சுவையின் உணர்வு கொண்டு மகிழ்தலும் என்று இவ்வாறெல்லாம் உணர்வுகள் உணர்ச்சியாக மாறி உணர்ச்சிகள் மணங்களாக மாறி மணத்தின் ஞானமாகி இயற்கையில் இது விளைகின்றது.

சித்தர்களும் - தான் அறிதல் என்ற நிலைகளுக்குச் செல்லும் போது தான் கற்றுணர்ந்த நிலைகளைப் கவிப் புலமைகளாகப் பாடுவதும் அவர்கள் கற்றுணர்ந்த உணர்வுகளைப் பிறருக்கு விளக்க உரையாகவும் மனிதன் வாழ்க்கையில் எவ்வாறு மீள வேண்டும் என்ற நிலைக்கே பாடல்கள் அமைந்திருக்கும்.

அந்தப் பாடலின் அர்த்தத்தை எல்லோரும் காணுவது கடினம். ஒரு சிலருக்கே அது புரியும். புரிந்தவர்கள் அவர்கள் மனத்தின் அளவுகோல் எப்படியோ அதைத் தன் அருகிலே வருவோருக்கு உபதேசிப்பதும் விளக்கத்தைக் கொடுப்பதும் இதைப் போன்ற நிலைகள் அமைகின்றது.

உயிரினங்கள் அனைத்தும் தான் உணவாக உட்கொள்ளும் உணவில் உள்ள நஞ்சினைத் தன் உணர்விற்குள் இணைத்து வலு கொண்ட உணர்வைத் தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது.

ஆனால் அதனின் கழிவாக வெளிப்படுத்தும் மலங்கள் அனைத்தும் நல்லவைகளாக மாறுகின்றது. அது ஒவ்வொரு சரீரத்திற்குத் தக்கவாறு அது மாறுபாடு பெறுகின்றது.

இதைப்போல சிறுகச் சிறுக சிறுகச் சிறுக நஞ்சினை மாற்றிடும் நிலைகள் வரப்படும் போது அதனின் மலத்திலும் மணம் மாற்றம் இருக்கும். ஆடு மாடுகள் வெளிப்படுத்தும் மலத்தில் நாற்றம் இல்லை. நறுமணம் இருக்கின்றது.

குதிரையை எடுத்துக் கொண்டால் மனிதனை ஒத்த நிலைகள் கொண்டு மலத்தில் நாற்றம் இருக்கும். ஆனால் குதிரையின் எண்ணத்தில் வலு இருக்கும். அதனின் வேகத் தன்மையும் சிந்திக்கும் திறனும் அதிகம் இருக்கும். ஏனென்றால்
1.அது நஞ்சின் தன்மையைக் கழித்து விட்டு
2.நல்ல உணர்வு கொண்டு அதனின் துணையால் உடல் வலுவானது.
3.மனிதனுக்கு எண்ண வேகம் எதுவோ அதைப் போல
4.குதிரைகளும் எண்ணத்தின் வேகம் கொண்டது
5.தன் எண்ணத்தின் வேகத் துடிப்பின் தன்மை கொண்டு இயக்குகின்றது.

அதே சமயத்தில் மனிதனுக்கு வரக்கூடிய நோயெல்லாம் குதிரைக்கு வரும். குதிரைக்கும் சளி பிடிக்கும். ஏனென்றால் அது நஞ்சினை மாற்றி வெளியேற்றுகின்றது. ஆனால் கழுதையின் மலம் நாறாது. ஏனென்றால் அது நஞ்சான உணர்வுகளைத் தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது.

கழுதைப் பாலைக் குடித்தால் கடும் நோய்களை நீக்கும். ஆனால் அதிகமாகக் குடித்தால் பத்தியம் தவறினால் மனிதனை வீழ்த்திடும் நிலை வந்து விடுகின்றது. அந்தக் கழுதைப் பாலை வைத்துக் குளித்தால் மனித உடலில் உள்ள அசுத்தமான சக்திகளை அது நீக்குகின்றது.

இப்படி ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு உடல்கள் எடுத்தாலும் அந்தந்த உணர்விற்கொப்ப
1.அதனுடைய மலத்தில் காணலாம். மனதில் காணலாம்.
2.உணர்வின் இயக்கத்தில் காணலாம்.
3.இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உணர்த்துகின்றோம்.