ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 13, 2017

கணவன் மனைவி நாங்கள் “இனி என்றுமே பிரிய மாட்டோம்” என்ற நிலையில் இரு உயிரும் ஒன்றி வாழுங்கள்

இன்று சிலர் தன் கணவரை இழந்துவிட்டோம் என்று எண்ணலாம். கணவரை எவரும் இழக்கவில்லை.

அவருடைய உணர்வுகள் உங்கள் உடலுக்குள் உண்டு. “அந்த நினைவு கொண்டால்.., அவருடைய நினைவு கொண்டு “என்றுமே” வாழலாம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற கணவரின் ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கலாம். அவர் உடலில் பெற்ற நஞ்சினை அங்கே கரைத்து உணர்வின் தன்மை ஒளியாக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணி எடுக்க வேண்டும்.

உங்கள் கணவர் எத்தகைய நோய்வாய்ப்பட்டு உடலை விட்டுப் பிரிந்திருந்தாலும் உணர்வை நீங்கள் நுகர்ந்தாலும் நோயின் உணர்வுகள் உங்களுக்குள் அணுக்களாக வளராதபடி அருள் ஞானத்தின் உணர்வை வளர்த்திட முடியும்.

உங்கள் கணவர் உங்களுடன் இருக்கின்றார் என்ற நினைவு கொள்ளுங்கள்.

துருவ  நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெறவேண்டும். எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும். எங்கள் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்திடும் நிலைகள் பெறவேண்டும்.

இனி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இதனின் உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுடன் வாழ்கின்றார் என்ற உண்மையை வைத்து அவர் இட்ட மாங்கல்யத்தை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அவர்.., “என்னுடன் தான்” இருக்கின்றார்.
என்றும்.., “அவருடன் தான்” நான் வாழ்வேன்.
இனி.., நான் “பிரிய மாட்டேன்”.
எங்கள் இரு உயிரும் ஒன்றிவிடும்.
என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறுவோம்.
“அருள் ஒளியின் சுடரை” நாங்கள் உருவாக்குவோம்.
இதை நீங்கள் உங்களுக்குள் வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளை எண்ணும் பொழுது.., எங்கள் பார்வையில் எங்கள் குடும்பங்களில் எங்கள் குழந்தைகளும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி சக்தி பெற வேண்டும்.

எங்கள் குழந்தைகளும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று ஒன்றி வாழும் நிலைகள் பெற்று அவர்கள் வாழ்க்கையில் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

மனிதனான நாம் அனைவரும் இந்த வழியில் சென்றால் அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் அவர்களுடன் ஐக்கியமாகலாம்.

“இருண்ட” உலகில்
தாக்குதலில் “ஒளி” என்ற உணர்வாகி
கோளாகி நட்சத்திரமாகி “சூரியனாகி”
அதற்குள் ஒரு “பிரபஞ்சமாகி”
பிரபஞ்சத்திற்குள் “உயிரணுக்களாகி”
உணர்வின் தன்மை நுகர்ந்து
“அறிவு” என்ற இயக்கத்தில் உருவாகி
“உயிர்” என்ற நிலைகள் கொண்டு
“மனிதன்” என்ற நிலைகள் உருவாகி
“அனைத்தையும் அறிந்திடும்” அறிவு பெற்று
இருளை அகற்றி “மெய்ப்பொருள்” காணும் சக்தியாக
கணவனும் மனைவியும் பெறவேண்டும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியை அனைவரும் பெற்று  இருளை அகற்றி நஞ்சினை வென்று பேரின்பப் பெருவாழ்வு பெறும் சக்தி பெற்று “மகா.., மகான்களாக” நீங்கள் திகழ வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் நீங்கள் பற்றும் பாசத்தையும் வளர்த்து அனைவருக்கும் தெளிந்த மனதை ஊட்டி மகிழ்ந்த உணர்வை ஊட்டி உங்கள் ஊரிலும் தொழில் செய்யுமிடங்களிலும் அருள் உணர்வைப் பரப்பி “அருள் மகரிஷிகளாக” உருவாகுங்கள்.

வாழ்க்கையில் அறியாது தாக்கும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் மெய்ஞானத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அகண்ட அண்டத்திற்கே ஓளி கொடுக்கும் சக்தி வாய்ந்த உயிராத்மாக்கள் (கணவன் மனைவி ஒன்றிய நிலைகளில்) சப்தரிஷி மண்டலத்தில் உண்டு.

அத்தகைய நிலை நீங்கள் எல்லோருமே பெற முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.