ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 2, 2017

விபத்தில் அடிபட்டவர்களை உற்றுப் பார்த்தால் வரும் தீமைகளை அறிந்திருக்கின்றோமா...

இன்று எங்கேயோ ஆக்சிடென்ட் ஆகிறது. பல இடங்களில் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம். சிலர் அந்தச் சிதைந்த சரீரத்தை உற்றுப் பார்த்தபின்.., “அஞ்சி விடுவார்கள்”.

அவ்வாறு அஞ்சி எண்ணுபவர்களுடைய உணர்வுகள் “பயமாகி விட்டது..,” என்று அவர் பார்த்த உணர்வுகள் அவருக்குள் பதிவாகின்றது.

பதிவானாலும் “ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்” என்று பயந்த உணர்வினைத் தன் உடலுக்குள் அணுக்களாக்கிய பின் இந்த உணர்வின் தன்மை வெளிப்படுத்தும் பொழுது கேட்டுணர்ந்தோர் உணர்வுகளிலும் இது பதிவாகின்றது.

பின் அந்த உணர்வைப் பதிவாக்கிவிட்டால் எங்கே சிதைந்த உடல் இருக்கின்றதோ அங்கே அந்த உணர்வுகள் பரவியிருப்பதை இவர்களும் நுகர நேருகின்றது.

அப்பொழுது அதனால் இவர்களை அறியாமலே அந்த வேதனையும் “அச்சுறுத்தும் உணர்வுகளும்” வந்துவிடுகின்றது. வளர்ச்சியில் அவர்கள் எந்தச் செயலும் மன உறுதியுடன் செயல்படுத்த முடியாத பலவீனம் ஏற்படுகின்றது.

பயத்தால் சிந்தனை குறைதலும் எதைக் கேட்டாலும் நடுக்கமும் கடைசியில் கடுமையான நடுக்க வாதமாகவும் மாறுகின்றது.

அதே சமயத்தில் சிதைந்த உறுப்புகளை உற்றுப் பார்த்து ஆழமாகப் பதிவாக்கி இருந்தால் அந்த உறுப்பு எப்படிச் சிதைந்திருந்ததோ அதே நிலையை அதே உறுப்பில் இவர்களுக்கும் சிதையும் அணுக்களாக மாறி உடல் நலிவடையத் தொடங்கும்.

ஏனென்றால், வாழ்க்கையில் நம்மை அறியாமலே நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ இதை நம் உயிர் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. பார்த்தது வேடிக்கை தான். ஆனால், நாம் இதைச் சுத்தப்படுத்துகின்றோமோ? தீமைகளை நீக்குகின்றோமோ? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபட வேண்டும். இதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகளும் வரவேண்டும்.

அச்சுறுத்தும் உணர்வுகளிலிருந்து விடுபடும் அந்த உணர்வின் சக்தியைப் பெறுவதற்கு ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதி பெறவேண்டும்.

அந்தத் தகுதி பெறும் தன்மைக்கே இப்பொழுது உங்களுக்குள் உபதேசிப்பது. அப்படி உபதேசித்த உணர்வுகளின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் எப்படிப் பெறவேண்டும்?

உயிரணுவின் தோற்றமும் பிரபஞ்சத்தின் தோற்றமும் உயிரணுவின் வளர்ச்சியும் வளர்ச்சி அடைந்த மனிதரில் துருவ மகரிஷி எவ்வாறு உருவானாரோ அந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவாக்குகின்றோம்.

இதைப் பதிவாக்கிய நினைவு கொண்டு உங்களுக்குள் உருவாக்கி விட்டால் இந்த உணர்வின் துணை கொண்டு காலையில் நான்கிலிருந்து அந்தச் சக்திகளைப் பெற ஏங்கித் தியானியுங்கள்.

காலையில் நான்கிலிருந்து ஆறு வரையிலும் துருவ நட்சத்திரத்திலிருந்து சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் பேரருள் பேரொளி உணர்வலைகள் வெளிவருகின்றது.

அதை நம் பூமி வட துருவப்பகுதியின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன் அழைத்து வருகின்றது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அதன் தொடர் கொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்து சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் பேரருள் பேரொளி உணர்வைக் கவர்ந்து நம் உடலுக்குள் சேர்ப்பிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்ற இந்த உணர்வுகளை உட்புகுத்துதல் வேண்டும்.

அவ்வாறு செய்தால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் வெள்ளியும் ஆவியாகி தங்கம் பரிசுத்தமாவது போல் நமக்குள் இருக்கும் தீமை செய்யும் நிலைகளை ஆவியாக மாற்றி நம்மைத் தூய்மைப்படுத்தும்.

நம் ஆன்மாவும் தூய்மை அடையும். பிறிதொரு தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் வராது “பாதுகாப்புக் கவசமாக..,” அமையும்.