ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 2, 2017

விநாயகர் தத்துவம் - 6

1. விநாயகருக்குப் பக்கத்தில் அரச மரமும் வேப்ப மரமும் வைத்ததன் உட்பொருள்
குளக்கரையில் வட மேற்காக விநாயகரை வைத்துள்ளார்கள். நாம் வட கிழக்காக வணங்கும்படி செய்தார்கள் ஞானிகள்.

காலையில் எழுந்தவுடன் உடல் அழுக்கைப் போக்குகின்றோம். துணி அழுக்கைப் போக்குகின்றோம். கரையேறி வந்த பின் விநாயகரைப் பார்த்தவுடன் யானைத் தலை போட்டிருக்கின்றது.

மிருகங்களின் உடலில் இருக்கும்போது வலுகொண்ட எண்ணத்தை உருவாக்கி எண்ண வலு பெற்ற மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்று அறிகின்றோம்.

மற்ற உடல்களில் இருக்கும்போது புல்லைத் தின்றோம், தழைத் தாம்புகளைத் தின்றோம். கனிகளைத் தின்றோம்.

மனிதனான பின் வேகவைத்துச் சமைத்துச் சாப்பிடுகின்றோம் என்று அருகம்புல், தழைத் தாம்பு, கனி, கொழுக்கட்டை இவைகளைப் பார்த்து நாம் தெரிந்து கொள்கின்றோம்.

எதையும் வேக வைத்தால் மறுபடி முளைக்காது. பச்சைப் பருப்பை விழுங்கிவிட்டால் மலத்தில் அது வெளிப்பட்டு செடியாக முளைத்துவிடும். மலத்தின் விஷத்தை உரமாக எடுத்து வெகுவேகமாக முளைக்கும்.

பறவை இனங்கள் பழத்தைச் சாப்பிடும். பழத்தின் சத்து அதற்குச் சாப்பாடு ஆகிவிடும். பழத்தின் வித்து மலத்தில் வெளிப்பட்டு வேகமாக முளைத்துவிடும்.

இதே மாதிரி காக்கைகளோ, குருவிகளோ அரச மரத்தின் பழத்தைச் சாப்பிடும். அரசம் பழத்தின் வித்துக்களை வீட்டுகளின் மேல் போட்டுவிடும்.

அந்த வித்து காற்றிலிருந்து நீர் சத்தை எடுத்து வளர்ந்துவிடும். நீர் இருக்கும் பக்கம் தன் விழுதுகளைப் பாய்ச்சி தண்ணீர் இருக்குமிடத்தில் ஆழமாகப் போகும். இது அரசு.

துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் நாலா பக்கமும் தன் உணர்வலைகளைப் பாய்ச்சி விஷத்தை மாற்றி ஒளியின் சரீரமாகப் பெற்றது. அதனால்தான் விநாயகர் பக்கம் அரசமரத்தை வைத்துள்ளார்கள்..

அதே சமயத்தில் அருகில் வேப்பமரத்தை வைத்துள்ளார்கள். வேதனைப்படுபவர்கள், கஷ்டப்படுபவர்கள், இவர்களை நாம் சந்திக்கும்போது நமது வாழ்க்கையும் கசக்க ஆரம்பித்து விடுகின்றது.

அதே வேதனையோடு நாம் ஒருவரிடம் சொல்லப்படும்போது அவர்கள் வாழ்க்கையும் கசக்க ஆரம்பித்துவிடுகின்றது. இந்த உண்மையை உணர்த்துவதற்குத் தான் வேம்பை அங்கே வைத்தார்கள்.

அப்படி வளர்ந்த கசப்பான நிலைகளிலிருந்து நாம் மீளவேண்டும் என்ற உணர்வினை ஊட்டுவதற்குத்தான் அரச மரத்தை வைத்துள்ளார்கள்.

அந்த சூட்சம நிலைகளில் விண் சென்ற அருள் ஞானியை துருவ மகரிஷியை நினைவு கூர்ந்து நமக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்யவும் நம் நினவாற்றலை சக்தி வாய்ந்தாக மாற்றும்படி செய்தார்கள்.

அந்த அருள் உணர்வுகளை நமக்குள் எண்ணும் பொழுது பிரணவம் அதை ஜீவன் பெறச் செய்யவும் மெய் உணர்வுகளை நமக்குள் வினைக்கு நாயகனாக ஆக்கிடவும் மெய்ஞானிகள் அன்று இதைச் செய்தார்கள்.
2.வேகாநிலை பெறுவதைத்தான் கொழுக்கட்டையை வைத்துக் காட்டினார்கள்
நாம் குளித்துவிட்டுக் கரையேறி வருகின்றோம். நம் உயிIர் எத்தனையோ சரீரங்கள் கடந்து நம்மை மனிதனாக உருவாக்கி இருக்கின்றது.

ஒவ்வொரு சரீரத்திலும் இலைகளையும், கனிகளையும் சாப்பிட்டு வந்திருக்கின்றோம் என்று நாம் நம்மை அறிவதற்கு இவைகளை விநாயகருக்கு முன் வைக்கின்றார்கள்.

இதை யாராவது புரிந்து கொள்கின்றோமோ? இல்லை.

ஏழைகளுக்கு எதுவுமில்லை…, அதனால் அருகம்புல்லைக் கொடுத்தல் ஆசிர்வாதம் கொடுக்கின்றார்.., என்று தவறான நிலைகளைத்தான் காட்டுகின்றார்கள்.

நாம் இலைகளையும் காய் கனிகளையும் சாப்பிட்டுத்தான் இன்று மனிதனாகப் பிறந்திருக்கிறோம். ஆனால், இன்று கொழுக்கட்டையை வேக வைக்கும்போது அதிலுள்ள பருப்பு முளைக்காது.

அனைத்தையும் வேக வைத்தவன் துருவ நட்சத்திரம். நாம் புல்லைத் தின்றோம். தழைத்தாம்புகளைத் தின்றோம். சுவை மிக்க நிலைகளில், கொழுக்கட்டையைப் படைத்துச் சாப்பிடும் இந்த மனித உடலைப் பெற்றோம்.

இந்தப் பிள்ளை யார்? நீ சிந்தித்து பார். உயிரால் வளர்க்கப்பட்டது, இந்த மனித உடல்,  நீ சிந்தித்துப் பார், என்று சொல்கின்றார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்த்தான் தீமைகள் அனைத்தையும் வேக வைத்துவிடும். அதை அடக்கி நன்மை பயக்கும் சக்தியாக ஒளியின் சுடராக மாற்றிவிடும்.

அவ்வாறு சுவைபடுத்தும் நிலைக்குத்தான் கொழுக்கட்டையை வைத்துக் காட்டினார்கள்.