ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 25, 2017

முருகனின் தத்துவம் - 11

1. நீ..., “முருகனாகு
போகர் உருவாக்கிய காலங்களில் முருகன் சிலைக்கு மேல் பானையை வைத்து சிலை மீது சொட்டு நீர் விழுகும்படி வைத்தார்.

மலையின் வெக்கையினால் வரும் வெப்பத்தால் அந்தச் சிலையிலிருந்து மணங்கள் வெளிப்படும். அந்த மணத்தை நுகர்வதற்காக அவ்வாறு வைத்தார்.

எந்த போகமாமகரிஷி காட்டினாரோ அந்தச் சக்தி அந்தச் சிலைக்குள் உண்டு. 27 நட்சத்திரங்களின் நிலையும் நவபாஷாணத்தின் நிலையும் சிலைக்குள் உண்டு.

நமக்குள்ளும் அவை உண்டு. நமக்குள் நாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் உணர்வின் செயல் நட்சத்திரம். ஒரு அணுவிற்குள் நட்சத்திரத்தின் கதிரியக்கத்திற்குத் தக்கவாறுதான் அது இயக்கிக் காட்டும்.

அதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை நமது உடலுக்குள் சென்றபின் அணுவாக விளைந்து அணுவின் துடிப்பாக விளைந்தபின் அது நமது உயிராத்மாவாகச் சேருகின்றது.

நாம் கோவிலுக்குச் சென்றால், அதே உணர்வின் தன்மை கொண்டு, அதே எண்ணத்தால் இங்கு பூஜிக்க வரும் பொழுது அறிந்துணர்ந்து செயல்படும் நிலைகள் பெறவேண்டும் என்று ஏங்கி வணங்க வேண்டும்.

நாம் ஆலயத்துக்குள் செல்லும் பொழுது அங்கே தீப ஆராதனை காட்டும் பொழுதுதான் இருளுக்குள் மறைந்த பொருள் தெரிகின்றது. 

பொருளறிந்து செயல்படும் ஆற்றல் மிக்க நிலைகள் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.

பழனி மலைக்குச் சென்றால் அந்த போகமாமகரிஷி காட்டிய அறுகுணமான நிலைகள் பெறவேண்டும். எங்கள் பேச்சும், மூச்சும், பிறரின் துன்பத்தைப் போக்கும் நிலையாக அமைய வேண்டும் என்று எண்ணி ஏங்கி வணங்க வேண்டும்.

ஆகவே அந்தச் சிலையின் மூலமாக “நீ முருகனாகு.., என்று நம் அனைவரையும் எண்ண வைத்தார் போகமா மகரிஷி.
2. முருகன் சிலையிலிருந்து வெளி வரும் மணத்தைச் சுவாசித்தால் அதை நமக்குள் சேர்த்தால் கொடிய நோயையும் போக்க முடியும்
நம் வாழ்க்கையில், நம்மையறியாது நாம் ஒன்றைப் பார்க்கின்றோம். அதில் தவறை அறிந்தபின் தான் விலகிச் செல்கின்றோம். ஆனால் அந்த உணர்வுகள் நமக்குள் பட்டு அசுத்தமாகச் சேர்ந்துவிடுகின்றது.

அப்படி உருவான விஷத்தின் நிலைகளை நீக்குவதற்குத்தான் போகர் பழனி மலையில் அந்தச் சிலையில் நீரை ஊற்றி நாம் எந்த ஏக்கத்துடன் வந்தோமோ அதிலிருந்து வரக்கூடிய ஆவியைச் சுவாசிப்பதற்கு வைத்தார்.

சிலையிலிருந்து வெளி வரும் ஆவியைச் சுவாசிக்கச் செய்து அசுத்தமாகச் சேர்ந்திருக்கும் நிலையை மாற்றி நமக்குள் நல்லதைச் செய்விக்கும் நிலையை ஏற்படுத்தினார்.

போகமா மகரிஷி ஒவ்வொரு சக்தியையும் தனக்குள் மோகித்து அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து அதே நிலைகள் கொண்டு எல்லோரும் பெறவேண்டும் என்ற நிலையில் முருகனின் சிலையை உருவாக்கினார்.

நமது சூரிய குடும்பம் எப்படி ஒரு பிரபஞ்ச நிலைகள் கொண்டு செயலாக்குகின்றதோ அத்தகைய உணர்வின் ஆற்றலை மனித உடலாக (முருகன் சிலையாக) அமைத்தார்.

அந்த உடலுக்குள் விஷத்தின் தன்மை கொண்ட நவபாஷாணத்தை வைத்தார். விஷத்தை நல்லதாக்கும் நிலையாக சிலையாக உருவாக்கி அதிலிருந்து வெப்பத்தால் வெளிப்படும் அலைகள் வந்து பார்ப்போர் நிலையிலும் ஏங்குவோர் உள்ளத்திலும் அது சென்று “துன்பத்தை நீக்கிடச் செய்தார்.

எத்தகைய கொடிய நோய்கள் வருவதையும் நீக்கி மனதை மகிழச் செய்து “அந்த மகிழ்வான உணர்வுடன்.., உயிராத்மாவை ஒளியாக மாற்றிடும் ஆற்றலை.., அங்கே பதியச் செய்தார் போகமாமகரிஷி.
3. முருகனை மலை மீது வைத்ததன் (பழனி மலையின்) தத்துவம்
மலைக் குன்றின் மீது முருகனை வைத்து நாம் கீழிருந்து படிமீது ஏறிச் செல்லும் பொழுது களைப்பு, சோர்வு, வேதனை இவைகளை எண்ணாது மெய்ஞானிகளின் அருள் ஒளி பெறவேண்டுமென்று விண்ணை நோக்கிப் பார்க்கப்படும் பொழுது நம் புலனறிவு உடலுக்குள் துன்பத்தை ஊட்டிய உணர்வின் தன்மையை வலுவான நிலைகள் கொண்டு படி மீது ஏற உதவுகின்றது.

உடலில் உள்ள நோய்களை எண்ணாது நாம் விண்ணை நோக்கி எண்ணும் பொழுது அந்த மெய்ஞானிகளின் அருள் ஒளிகள் நமக்குள் சேர்கின்றது.

அப்பொழுது நமக்குள் பலவீனமான நிலைகள் குறைந்து எண்ணத்திற்கு வலுக் கூடி உணர்வின் தன்மை கொண்டு மெய் ஒளியைப் பெறும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

இது மெய்ஞானிகள் காட்டிய அருள் வழியில்.., “சாதாரண மக்களும் தனக்குள் மெய் ஒளியைப் பெற வழிகாட்டிய தன்மைதான் பழனி மலை.

1. குன்று மீது தெய்வ நிலையை உயர்த்தி
2. உயர்வான எண்ணத்தில் நாம் மேல் நோக்கிப் பார்த்து
3. மெய் உணர்வைச் சுவாசித்து
4. மெய்ஞானியாக நம்மை ஆக்குவதற்குத்தான் பழனி மலை.