ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 11, 2017

விநாயகர் தத்துவம் - 13

1. யானைத் தலையை ஏன் போட்டுக் காண்பித்தார்கள் ஞானிகள்
பல கோடிச் சரீரங்களில் வலுவான நிலைகளை நுகர்ந்து யானையாக உருவாக்குகின்றது உயிர்.

யானையாக இருக்கும்போது உடல் வலுவால் எது வந்தாலும் அதிலிருந்து தப்பிக்கும் எண்ண வலுவைப் பெறுகின்றது.

இவ்வாறு தப்பிக்கும் எண்ண வலுவை பெறும்பொழுது அந்த உணவின் தன்மை உடலில் விளைகின்றது. இவ்வாறு உடலில் சேர்த்துக்கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடலைப் பெறுகின்றது.

உயிர் தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடலைத் தந்தது என்பதை நாமெல்லாம் புரிந்து கொள்ள கோவில்களில் விநாயகரைச் சிலையாக வைத்துக் காட்டினார்கள்.

உடல் வலு பெற்றது யானை.  ஆனால், மனிதனோ தன் எண்ண வலுகொண்டு பத்தாயிரம் டன் வலு கொண்டதையும் வானவீதியில் தூக்குகின்றான். உந்திச் செலுத்தும்படிச் செய்கின்றான்.

உடல் வலு பெற்றது மிருகம். எண்ண வலு பெற்றவன் மனிதன். இதைக் காட்டுவதற்காகத்தான் விநாயகனுக்கு யானைத் தலையை வைத்துக் காட்டியுள்ளார்கள்.
2. நேற்றைய செயல் இன்றைய சரீரம் - இன்றைய செயல் நாளைய சரீரம்
ஆனால், மனிதனாக வாழும் இந்த வாழ்க்கையில் வேதனை கோபம் ஆத்திரம், சலிப்பு சோர்வு போன்ற உணர்வுகளை நுகரும் போது உடல் நலிவடைகின்றது.

அப்பொழுது நம் உடலை உருவாக்கிய உயிரான ஈசனுக்குத் துரோகம் செய்கின்றோம். மனிதனாக உருவாக்கிய ஈசனை மதிக்கவில்லை என்று அர்த்தம்.

நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் நம் உடலில் எல்லா அணுக்களிலும் படர்கின்றது. நஞ்சை நீக்கும் நம் உறுப்புகளுக்குள் மீண்டும் நஞ்சின் தன்மை அதிகரிக்கின்றது.

இப்படித் தீயவினைகள் நமக்குள் சேர்ந்தால் கணங்களுக்கு அதிபதியாகி மீண்டும் மிருக நிலைகளுக்கே நம் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.

அதை மாற்ற வேண்டுமல்லவா..,?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி உயிர் வழியாகச் சுவாசித்து உடல் முழுவதும் பரவச் செய்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் குழம்பு வைக்கும் பொழுது பல பொருள்களைப் போட்டு வேகவைக்கின்றோம். முதலில் பலவிதமான மணங்கள் வெளிவரும். பின் அனைத்தும் சேர்ந்தவுடன் ஒரு சுவையின் தன்மை அதற்குள் பல ருசியின் தன்மை வரும்.

இதைப் போலத்தான் உணர்வின் எண்ணங்கள் பதிவாகி அந்த உணர்வின் தன்மை உயிரான்மாவாக மாறுகின்றது.

அப்படி மாறிய நிலைகள்தான் இந்த உயிரிலே வினையாகச் சேர்த்து வினைக்கு நாயகனாக.., “இன்றைய செயல் நாளைய சரீரமாக..,” உருவாக்குகின்றது.

பல மணங்களை நுகர்ந்து நுகர்ந்து பார்த்த இந்த நிலைகள்தான் அது வினைகளாகி வினைக்கு நாயகனாக அந்த மணங்களின் தன்மை இயக்கமாகி நமது உயிர் அதைச் சரீரமாக மாற்றிக் கொள்கின்றது.

நேற்று நாம் மிருகமாக இருந்தாலும் அதில் சேர்த்துக் கொண்ட மணங்கள் வினைக்கு நாயகனாகி இன்று மனிதனாக இருக்கின்றோம்.

ஆகவே, நாம் இன்றைய செயலாக துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து அந்த மணத்தை வினைக்கு நாயகனாக விநாயகனாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

மனிதனானபின் எதையும் உருவாக்கி இருளை நீக்கி ஒளி என்ற உருவை உருவாக்குபவன் மனிதன். ஆகவே நம் பயணத்தின் பாதையை.., “அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துவோம்.

உயிரோடு ஒன்றி நாளைய சரீரமாகப் பெற்று அகஸ்தியன் சென்ற எல்லையை நாமும் அடைவோம்.