ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 27, 2017

பிறர் உயர்ந்த உணர்வுகள் கொண்டு வளர வேண்டும் என்று எண்ணினால் நாம் நிச்சயம் வளர்கின்றோம்

ஆரம்ப நிலைகளில், சில இடங்களில் அருள் உணர்வுகளை வளர்ப்பதற்கு முயற்சி எடுத்தேன். ஆனால், அங்கே அதை ஏற்றுக் கொள்ளும் பண்பு இல்லாது போய்விட்டது.

அவர்கள் ஆசை ஒரு பக்கம் இழுக்கின்றது. “பேராசை..,” ஒரு பக்கம் இழுக்கின்றது.

“தனது நிலைகள் (தான்) வளர வேண்டும்” என்று எண்ணுகின்றது. “பிறரை வளர்க்க வேண்டும்..,” என்ற எண்ணம் இல்லாது போகின்றது.

பிறர் வளர வேண்டும் என்று எண்ணினால் நாம் நிச்சயம் வளர்கின்றோம். இதுதான் உண்மை.

“நீங்கள் வளர வேண்டும்..,” என்று எண்ணினாலே முதலில் நான் வளர்கின்றேன். “இவருக்கு என்ன வேலை..,?” என்று அந்த உணர்வை அங்கே குறைத்தால் நானும் குறைந்து விடுகின்றேன்.

அங்கேயும் குறை உணர்வே விளைந்து இரண்டு பேரும் போர் முறைக்குத் தான் வரும். அப்பொழுது தீமையின் இயக்கத்திலிருந்து மீளும் நிலை இல்லாது போய்விடுகின்றது.

அப்பொழுது என்ன ஆகின்றது?

“இப்படி இருந்தோம்.., அப்படி இருந்தோம்..,” என்று இதைத்தான் பேசிக் கொண்டிருக்க முடியும். இந்த உணர்வின் தன்மை நமக்குள் “வளர்ச்சியற்ற நிலை” அடைந்துவிடுகின்றது. பிறகு “இந்த உடலுக்குள்.., சேர்த்தது என்ன?”

எதனின் வெறுப்பின் உணர்வை வளர்த்ததோ இதனின் வலுப் பெற்றால் புவியின் ஈர்ப்புக்கே நிச்சயம் வருகின்றது. ஆகவே, புவியின் ஈர்ப்புக்கு வருவதிலிருந்து நாம் தடுத்தல் வேண்டும்.

ஏனென்றால், இந்த பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றும் ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. நீங்கள் பெற வேண்டும் என்ற இச்செயல், யாம் உபதேசித்ததைக் கீதையிலே சொன்ன மாதிரி, “நீ எதை நினைக்கின்றாயோ.., அதுவாகின்றாய்”.

நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்; உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்; மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் விளைய வேண்டும்; என்ற உயர்ந்த உணர்வின் நோக்கம் கொண்டு உங்களுக்குள் உபதேசிக்கின்றேன்.

இதைக் கேட்டுணர்ந்த நீங்கள் இதைப் பின்பற்றினால்,  “பிறர் வளரவேண்டும்..,” என்ற உணர்வு உங்களுக்குள் வாழும் சக்தியாக வளர்ந்து,  உங்களுக்குள் தீமையை விளைவிக்கும் நிலைகள் அது “ஒடுங்கும்’.

தீமைகள் அவ்வாறு ஒடுங்கி மெய் உணர்வைக் காணும் நிலைகளில் உங்கள் பேச்சும் மூச்சும் வெளிப்பட்டு இன்று விஞ்ஞான உலகால் ஏற்பபடுத்தப்பட்ட நஞ்சினை வென்று இந்த பூமியின் தன்மையில், நஞ்சினை அகற்றி அனைவரும்ஏகாந்தமாக.., மகிழ்ந்து வாழ முடியும்”.

இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச்சரீரம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்திட முடியும்.