ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 21, 2017

ஞானிகள் தெய்வங்களை அழகாக வடித்ததன் நோக்கம்

கருவுற்றிருக்கும் தாய்மார்கள் ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள்களுக்குள் மந்திரவாதிகளோ அல்லது அதைப் போன்ற மற்றவர்கள் தந்திரங்கள் செய்வதை உற்றுப் பார்த்தால் அவர்கள் உணர்வை நுகர நேர்ந்தால் கருவிலிக்கும் குழந்தைக்குள் அது இணைந்துவிடுகின்றது.

ஆகவே, அதனின் வளர்ச்சி குன்றிவிடுகின்றது. சிந்திக்கும் தன்மையை இழந்துவிடுகின்றது.

இப்படிப் பிறிதொரு பக்கம் தீமைகள் நடப்பதை கருவுற்றிருக்கும் தாய் நுகரும்போது இதே போன்ற தீமைகள் ஏற்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள வேண்டும் அல்லவா..!

ஒரு குடும்பத்திலே தாய் கருவுற்றிருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டாலே அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அடுத்து அந்தக் கருவில் வளரும் குழந்தை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி அந்தச் சிசு பெறவேண்டும். உலகைக் காத்திடும் அருள்ஞானம் அந்தக் குழந்தை பெற வேண்டும் என்ற இந்த உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

நமது சாஸ்திரங்களில் சரஸ்வதி என்ற படத்தைப் போட்டுக் காட்டி அதை “ஞானத்தின் தொடர்” என்று சொல்வார்கள்.

கருவுற்ற தாயை அந்தப் படத்தை உற்றுப் பார்க்கும்படிச் செய்து அது எவ்வாறு ஞானத்தின் தொடரில் வளர்ந்து வந்ததோ அதைப் போல “ஞானத்தைப் பெறும் சக்தியாக.., என் கருவில் வளரும் சிசு பெறவேண்டும்” என்று எண்ணிச் சுவாசித்தல் வேண்டும்.

அதே போன்று இலட்சுமி படத்தை உற்றுப் பார்த்து அனைவரையும் மகிழச் செய்யும் அந்த உணர்வின் சக்தி என் கருவில் வளரும் குழந்தை பெறவேண்டும் என்று இப்படி அந்தத் தாய் எண்ணுதல் வேண்டும்.

சரஸ்வதியைப் போன்ற ஞானத்தின் சக்தியும் இலட்சுமியைப் போன்ற மகிழ்ந்து வாழச் செய்யும் சக்தியும் கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்தத் தாய் கிடைக்கப் பெறச் செய்தல் வேண்டும்.

குடும்பத்திலுள்ளோர் அனைவருமே அந்தத் தெய்வீக உணர்வுகளை உற்று நோக்கி அந்தச் சக்திகள் அனைத்தும் கருவிலிருக்கும் சிசு பெறவேண்டும் என்று எண்ணினால் அதே உணர்வுகள் கருவிலே வளரும்,

அந்தப் படம் எவ்வளவு அழகாக இருக்கின்றதோ அதே போல உணர்வுகள் இங்கே குழந்தைக்கும் வரும். அப்படிப் பிறந்தால் தன்னைக் காக்கும். தன் குடும்பத்தைக் காக்கும். இந்த ஊரையும் காக்கும், இந்த உலகையும் காக்கும்.

ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட அருள் ஞானம் பெற்றவர்களாக உருவாகிட வேண்டும் என்பதற்குத்தான் நம்முடைய முன்னோர்கள் இங்கே இவ்வளவு ஆலயங்களையும் சாஸ்திரங்களையும் வடித்தார்கள்.

இன்று நாம் அதையெல்லாம் சிறிதளவாவது எண்ணுகின்றோமா..,? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே, நம் நாட்டிலே தோன்றிய அந்த அருள் ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த சாஸ்திரங்கள் படி நாம் இந்த வாழ்க்கையில் வாழ்ந்தால் பேரானந்தப் பெருநிலை என்ற நிலை எய்த முடியும்.

இதுதான் குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகள்.

(ஆனால், கருவுற்ற தாய்மார்கள் இன்று எதை உற்று நோக்க நேர்கின்றது..,? உலகில் எவ்வளவு அவலங்கள் நடக்கின்றதோ, கொடுமைகள் நடக்கின்றதோ அதை டி.வி. மூலமாகவும் பத்திரிக்கை மூலமாகவும் இன்னும் எத்தனையோ வழிகளில் நமக்கு முன் வந்து கொண்டிருக்கும் நிலைகளை எல்லாம் உற்று நோக்கும் பொழுது அது கருவிற்குள் இணைந்து “அதனால் பிறக்கும் குழந்தைகள்” தன்னையும் காப்பதில்லை. அதே சமயத்தில் மற்றவர்களையும் வாழச் செய்யும் நிலையற்று கொன்று குவிக்கும் நிலையாகத்தான் சென்று கொண்டுள்ளது)