ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 4, 2024

நம் தியானமே “ஈசனின் நினைவுடன் இருந்திட்டால்” மற்றத் தீய சக்திகள் நம்மை எப்படித் தாக்கும்…?

நம் தியானமே “ஈசனின் நினைவுடன் இருந்திட்டால்” மற்றத் தீய சக்திகள் நம்மை எப்படித் தாக்கும்…?


பாம்பின் விஷத்தையும் போக்கிடலாம்.. மற்றத் தீய சக்திகளையும் நம்முள் அண்டவிடாமல் போக்கிடலாம்! ஆனால்
1.நம்முள்ளே நாம் ஏற்றிக் கொண்ட இவ்வெண்ணத்தின் சுமையை
2.ஒருநிலைப்படுத்தி ஜெபம் பெறுவதுதான் நம் சக்திக்கும் மேம்பட்ட சக்தி.
 
இவ்வுலகச் சூழ்ச்சியிலிருந்தும் மற்றவர்களின் நிலையின் தாக்குதலில் இருந்தும் இன்றுள்ள இவ்விஷமான இவ்வுலக நிலையில் இருந்து மீண்டு செயல் கொள்ளுவது மிகவும் கடினம்.
 
1.ஆத்மீக நெறியின் வழிமுறைக்கு நம் வழி அமைந்த பிறகு
2.நாமேதான் நமக்குகந்த நெறி முறையை அமைத்துக் கொண்டு செயல்படல் வேண்டும்
3.அச்செயல் வழியில்தான் நம் சக்தி நிலையே கூடி வழி வந்திடும்.
 
இந்நிலையின் தொடர் நிலை வந்த பிறகு பிறரின் எண்ண நிலையை நம்முடன் மோதவிட்டு ஆத்மீக நெறி முறையில் செல்லுவதும் அழகல்ல. போற்றலும் தூற்றலும் ஒருநிலை போன்ற சம நெறியின் வழியாக்கிடல் வேண்டும்.
 
இவ்வண்ணத் தொடரின் வழி பெற்ற பிறகு ஞானத்தின் சக்தி நிலை கூடும் நிலையில் நம் உடலில் உள்ள முன்பு வாழ்ந்த வாழ்க்கையில் உள்ள தீய சக்திகளும் செயலற்றதாய் நற்சக்திகளின் நிலை வளர்ந்து விடும்.
 
ஆனால் வாழ்க்கையுடன் உள்ள நிலையில் ஏற்படும் சிக்கலை நம் எண்ணத்தில் ஏற்றி அந்நிலை கொண்ட கவலையை வளரவிடும் பொழுது நம் உடலில் உள்ள தீய சக்திகளுக்கு நாம் உரம் இட்ட நிலை போல் வளர்ந்திடும்.
 
1.நற்சக்தியின் நிலை கூடுவதற்குப் பல காலம் ஜெபம் பெற்று ஞானத் தொடரை வழி பெற்ற பிறகு
2.ஒரு சில நொடியில் இவ்வெண்ண மோதலினால் விரையப் படுத்திடலாகாது.
 
பக்திமானாய் சக்திமானாய் ஆண்டவனின் சக்தியாய் ஒளிர ஒரு நாளில் இரண்டு நாளில் அந்த ஞானத் தொடரும் சக்தித் தொடரும் வந்திடாது.
 
உயிரணுவாய் உயராத்மாவாய் பிறப்பெடுத்து நாம் நம் உடலுடன் சேமிக்கும் அமில சக்தி அனைத்துமே நற்சக்தியாய்க் கலந்து ஒளி பெறும் நிலையில்தான் நம் நிலையும் உயர்ந்திடும்.
 
இவ்வாத்மீக நெறிக்கு வழி பெற்றிட
1.தீய சக்திக்கு நாம் அடிபணியாமல் நம்மள் தீய சக்தியை விட்டகற்றினாலன்றி
2.நூறாண்டு காலம் அல்ல 100 கோடி ஆண்டானாலும் நம் ஆத்மாவை ஆண்டவனின் சக்தியின் சக்தியாய் ஒளிரச் செய்வது கடினமே.
 
சொத்தும் சுகமும் அல்ல சக்தியின் செல்வம். இவ் அல்ப ஆசைகளுக்கு நம் எண்ண சக்தியில் துறக்கும் நிலை பெற வேண்டும். துறவியாய் ஆண்டிக் கோலம் பூண்டு செல்வது துறவறம் அல்ல.
 
ஒன்றை எண்ணிய நிலையில்
1.அடைந்தே தீருவோம் என்ற பேராசையின் பிடியில் சிக்கிடாமல்
2.வாழ்க்கைக்குகந்த அன்புச் செல்வங்களைத் தன் நிறைவு பெற ஆசையுடன் செயல் கொள்ளுங்கள்.
 
உண்ணும் எவ்வுணவையும் அமுதாய் உண்டிடும் பக்குவ நிலையில் வாழ்ந்திடுங்கள். உண்ணும் உணவே ஒவ்வோர் உடலையும் எண்ண நிலைக்கொப்பை அமில சக்தியின் சேமிப்பையும் நம் உடல் பெறுகின்றது.
 
எண்ணத்தையே அமுதமாக்கி உண்டிடுங்கள்.
 
எவ்வுணவை உண்டாலும் அமிர்தமாய் நம் உடலில் செயல் கொள்ளும் வழிமுறையும் செயல் நிலையும் நாமாய் வழி வகுத்துத்தான் நம் ஆத்மா செயல் கொண்டிடும்.
 
நாம் வாழ்ந்திடும் இனி வரப் போகும் ஒவ்வொரு நொடியையுமே இவ்வழித் தொடரின் ஜெப சக்தியை வளரவிட்டே
1.நம்முள் நம் ஆத்மாவாய் அவ் ஈஸ்வரனே குடி கொண்டுள்ளான் என்பதனை உணர்ந்து
2.நாம் எடுத்திடும் நாம் விட்டிடும் சுவாசமே அவ் ஈஸ்வரனின் ஜெபத்துடனே
3.ஓம் ஈஸ்வரா என்ற நிலையிலேயே எந் நிலையில் எச் செயலில் இருந்திட்டாலும்
4.நம் எண்ண ஜெபம் முழுவதுமே அவ் ஈசனின் நினைவுடன் இருந்திட்டால் மற்றத் தீய சக்தியின் நிலை நம்மை எப்படித் தாக்கும்…?
5.நம்மை அத்தீய சக்தியிலிருந்து காக்கத்தான் அவ் ஈசனே ஜெபம் கொண்டு நம்முள் உள்ளானே‌.
6.நம் ஆத்மாவே ஈசன் தான்
7.ஈசனின் சக்தி இல்லாமல் எச் சக்தியும் இல்லை.
8.ஈசனே குடி கொண்டுள்ள நம் ஆலய ஆத்மா கொண்ட நம் உடலை
9.ஈசனின் சக்தியாய் வாழ்ந்திடும் நெறிமுறையின் வழித்தொடர் கொண்டே வாழ்ந்திடுங்கள்.