ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2018

அணு குண்டைக் கண்டுபிடித்த விஞ்ஞானி கடைசியில் என்ன ஆகின்றான்…?


இன்று நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கப் பொறிகளே கடல் அலைகளில் பாய்ந்து மணல் போன்று மாறுகிறது.

விஞ்ஞானிகள் அந்த மணலை எடுத்து அதிலிருந்து கதிரியக்கங்களைப் பிரித்து எடுத்துச் சக்தி வாய்ந்ததாக மாற்றிக் கொள்கிறார்கள்.

அந்த அணுவைப் பிளந்து அணுவின் வீரிய சக்தியைக் கவர்ந்து அதே சமயம் உப்புச் சத்து கொண்ட அந்தக் கடலின் – கண நீரால் ஹைட்ரஜனை வைத்து அதை எடுத்து அடக்குகின்றான்.

அவ்வாறு அடக்கி வைத்திருக்கும் அணு குண்டைத் தனக்கு வேண்டும் போது அதை இயக்கச் செய்து அதீத வீரிய உணர்வை இயக்கச் செய்கின்றனர் விஞ்ஞானிகள்.

அதே அணுக் கதிரியக்கத்தினை உந்து விசையாக வைத்து இதனுடைய வேகத் துரிதத்தைக் காட்டி பூமியின் ஈர்ப்பைக் கடந்து செயல்படுத்தும்படிச் செய்கின்றார்கள்.

இது மனிதனின் ஆறாவது அறிவால் உருவான நிலை. உடலின் இச்சைக்காக இதை உருவாக்குகின்றான். இத்தகைய விஞ்ஞானத்தின் நிலைகள் பெற்றாலும் அந்த விஞ்ஞானியும் அஞ்ஞான வாழ்க்கை தான் வாழ்கின்றான்.

இவன் செய்த ஒரு அணு குண்டின் தன்மை கொண்டு ஒரு பக்கம் வெடிக்கச் செய்தால் ஆயிரக்கணக்கான பேர் மடிகின்றனர்…. துடிக்கின்றனர்….!

அணு குண்டு செய்தவன் அதைக் கண்டு தன் செயலால் இத்தனை பேரையும் கொல்ல முடிகின்றது என்று மகிழ்ச்சி பெறுகின்றான்.

ஆனால் அத்தனை பேரின் வேதனையான உணர்வின் தன்மை இவனுக்குள் சேர்க்கப்படும் பொழுது சிதையுண்டு இவன் எதைக் கண்டு இரசித்தானோ இந்த உணர்வுகள் அவன் உடலில் விளைந்து அவன் உடலையே சிதையச் செய்துவிடுகின்றது.

மற்றவர்கள் எப்படி நரக வேதனைப்பட்டார்களோ அந்த உணர்வுகள் அவன் உயிருக்குள் பட்டு இந்த உயிர் உடலை விட்டுச் சென்றபின்
1.அவனுடைய வேகங்கள் குறையப்பட்டு
2.நரக வேதனைப்பட்டு ஊர்ந்து செல்லும் உயிரினமாக
3.துன்புற்று வாழும் உடலைத்தான் அவன் பெறுகின்றான்.
4.துன்பத்திலிருந்து மீளும் நிலை வராது.

நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகவே நீ ஆகின்றாய் என்று தான் கீதை சொல்கிறது.

ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று அதன் உணர்வை இரசித்து தன் வல்லமையைக் காட்டினாலும் மற்றவர்களைக் கொல்லும் போது அந்த வேதனை உணர்வுகள் இவனுக்குள் புகுந்து இந்த விஞ்ஞானி மடிகின்றான்.

அவன் மடிந்தாலும் அவன் உணர்வு கொண்டு இவனிடம் எவன் பயிற்சி பெற்றானோ அவனுக்கும் இதைக் கற்றுக் கொடுத்திருப்பான்.

அவன் இவனை எண்ணி அந்த விஞ்ஞானி… “எனக்குக் கற்றுக் கொடுத்து விட்டுப் போய்விட்டான்…!” என்று எண்ணினால் அவனுக்குள் சென்று இவன் உடலுக்குள் நோயாக மாறி அவனையும் வீழ்த்திவிடும். இப்படி
1.ஒன்றின் துணை கொண்டு ஒன்றின் நிலைகள் இயங்கும்
2.இந்த இயற்கையின் நிலையில் இருக்கப்படும் பொழுது
3.கடவுள் என்ற தன்மையில் தனித்த எவரும் இல்லை.
4.நாம் எண்ணும் எண்ணமே உள் நின்று இயக்குகின்றது.
5.“ஒன்று…” என்ற நிலை எங்குமே இல்லை.

பலவும் ஒன்றாகச் சேர்த்து உணர்வின் கலவை கொண்டு உணர்வின் இயக்கமாக ஒன்றியே நமக்குள் இருக்கப்படும் போது அதுவே உள் நின்று கடவுளாக இருக்கின்றது. ஏனென்றால்
1.கடவுள் ஒருவன் என்று நாம் எண்ணுகின்றோம்.
2.இது பிழை கொண்டது .

அணுக் கதிரியக்கத்தைப் பாய்ச்சி பலருடைய நிலைகள் மடியச் செய்து தான் பலரினுடைய உணர்வை நுகர்ந்தானென்றால் அந்த வேதனை உணர்வை இவனுக்குள் இரசித்து நுகரப்படும் பொழுது இவன் செய்கையால் இவனுக்குள் கடுமையான நோய்கள் வருகின்றது.

பெரிய பெரிய விஞ்ஞானிகளைப் பார்க்கலாம்….!

தன்னைக் காக்கும் நிலைகள் இல்லை. பல பல அரிய கண்டுபிடிப்புகளை அவன் கண்டுபிடித்தாலும் நோயின் தன்மை அதிகரித்து அவனுடைய உடல் உறுப்புகள் அகற்றப்படுகின்றது.

மீண்டும் விஞ்ஞான அறிவு கொண்டு உறுப்புகளை மாற்றுகின்றான். மாற்றினாலும் அவன் குறுகிய காலமே வாழ்கின்றான்.

அவன் உறுப்பை இழந்து பின் மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் அங்கே தடைப்படுத்தும் பொழுது மிருகங்கள் தனக்கு உணவில்லாத நிலைகள் ஏற்படும் பொழுது எப்படித் தவிக்கின்றதோ அதைப் போன்ற வேதனை தான் அதிகரிக்கும்.

இவன் இறந்த பின் யார் இவனைப் பின்பற்றுகின்றானோ அந்த மாணவன் உடலுக்குள் சென்றாலும் பிறரைக் கொன்று இரசிக்கும் உணர்ச்சியைத் தூண்டி அவனையும் வீழ்த்தும் உணர்வே வளரும்.
1.தன் குடும்பத்தையோ அல்லது பிறர் படும் துயரத்தையோ அவர்களால் அறிய முடியாது.
2.கடைசியில் மனிதல்லாத உருவைத்தான் இருவரும் பெறுவார்கள்.

அத்தகைய விஞ்ஞான அறிவைப் பற்றித்தான் இன்றும் நாம் போற்றிக் கொண்டுள்ளோம். ஆனால் அது அஞ்ஞான வாழ்க்கைக்கே வித்திடுகிறது என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

விஞ்ஞானம் உடல் இச்சைக்குத்தான் அடிகோலும். அழியா ஒளிச் சரீரமாக உயிராத்மாவை விண்ணுக்குச் செலுத்தும் மெய் ஞானத்தின் நிலைகள் இல்லை.