ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 20, 2018

சப்தரிஷி மண்டலத்தில் வாழும் வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரம் என்பது நான்கு நிலைகள் கொண்ட “அது ஒரு குடும்பம்....!” – நாமும் குடும்பமாக அங்கே செல்லலாம்


பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியின் சிகரமாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.

அவன் உணர்வை வளர்த்துக் கொண்ட அக்கால மக்களும் அவன் ஈர்ப்பு வட்டத்தில் அவனைப் போன்றே ஒளிச் சரீரமாகிப் பேரின்ப வாழ்க்கையாக சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.

அக்காலங்களில் அவர்கள் சென்றிருந்தாலும் அவர்களுக்குப் பின் அழியா ஒளிச் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்லும் நிலை படிப்படியாகக் குறைந்து குறைந்து அந்தப் பாதையே தெரியாத நிலை உருவாகிவிட்டது.

யார் அதைப் பெறுகின்றனர்...? அதனில் யார் போய் இணைகின்றனர்...!

இப்போது நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த மெய் வழி செல்லும் மார்க்கத்தைக் காட்டிய பின் அதைச் செயலாக்குகின்றோம். ஏனென்றால் இனம் இனத்தைச் சேர்க்கும்.

ஒளியின் சுடர் கொண்டு எந்த ஒளியின் சரீரத்தை நாம் எடுக்கின்றோமோ அந்த ஒளியின் தன்மையை வளர்க்கப்படும் போது இனம் இனத்தைச் சேர்க்கும்...!

இப்போது நான் கோபிக்கின்றேன் என்றால் அதே மாதிரியே இன்னொருத்தரும் கோபப்பட்டார் என்றால் கோபப்பட்ட இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து விடுவார்கள்.

ஒருவர் வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கிறார் என்றால் வாழ்க்கையில் கஷ்டம் என்றால்.. “வேதனையைத்தானே பட வேண்டும்” என்று இந்த இரண்டு உணர்வும் ஒன்றாகச் சேரும்.

இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள். நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கணவனை இழந்தவர்கள் என்ற நிலையில் யாரும் எண்ண வேண்டாம். அவர்களினுடைய உணர்வுகள் உங்களுடன் ஒன்றியே உண்டு.

அவர்கள் உங்களிடமிருந்து என்றும் பிரியவில்லை. அவர்கள் உணர்வு உங்களுடன் வாழ்கின்றது. அவருடன் வாழ்ந்த காலங்கள் நினைவுக்கு வரும்போது அந்த இயக்கங்களும் வருகின்றது.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்யும்போது உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைகின்றது. அதனால் அவர்கள் இன்னொரு உடலுக்குள் போவதில்லை. ஆனால்...,
1.இன்னொரு உடலுக்குள் போய்விட்டால் (மனவிக்கு) தனக்குக் கணவன் ஏது....!
2.உடலை விட்டுச் சென்று விட்டால் எப்போது கணவனும் மனைவியும் இணைவது...?

ஆகவே உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மா (கணவனோ அல்லது மனைவியோ) “பேயாகச் சென்று... நோயாகச் சென்று... இன்னொரு உடலுக்குள் போகாமல் தடுக்கும் நிலையைத்தான் “எமனிடமிருந்து... சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்...!” என்று சாஸ்திரங்களில் ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாவைத் தனக்குள் ஒன்றிய நிலைகள் கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ளுதல் எண்ணுதல் வேண்டும்.

தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் மீண்டும் இன்னொரு உடல் பெறாதபடி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று அந்த ஆன்மாக்களை விண்ணிலே செலுத்துதல் வேண்டும்.

ஒரு குடும்பப் பற்றுடன் வரப்படும் போது இதனைப் பார்க்கலாம். “வசிஷ்டரும் அருந்ததியும்” என்று சொல்வார்கள். அதாவது
1.தாய் தந்தையர்கள் இணைந்து ஒரு நட்சத்திரமானாலும்
2.திருமணமாகாத குழந்தையின் உயிரான்மாக்களும் அவர்களுடன் சேர்ந்தே
3.அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும்.

வசிஷ்டரும் அருந்ததி என்ற நட்சத்திரத்தில் ஒன்று மட்டுமல்ல நான்கு நட்சத்திரங்கள் உண்டு. அதாவது இரண்டு நட்சத்திரத்தின் (வசிஷ்டர் நட்சத்திரத்தின்) அருகிலே ஒன்று வரும்.. மற்றொன்றும் வரும். ஆக நான்கு நிலைகள் அங்கே வருகின்றது.

இன்று விஞ்ஞான அறிவினால் டெலஸ்கோப்பின் துணை கொண்டு சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்கின்றார்கள். வசிஷ்டர் அருந்ததி என்று இரண்டைத் தான் பார்ப்பார்கள். ஒன்று மற்றொன்று பின்னாடி செல்லும் போது மறைந்து விடும்.
1.மறைந்து விட்டால் முதலில் “ஒன்று” என்பார்கள்
2.அப்புறம் திடீரென்று.... “அபூர்வமாக இன்னொன்றும் தெரிகிறது...!” என்பார்கள்.

தாய் தந்தையின் மீது பற்று கொண்டவர்கள் தன் உடலை விட்டுச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம் சென்ற பின் அதன் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் பிறவியில்லா நிலைகளாக
1.இப்போது தன் குடும்பத்தில் எப்படிக் குழந்தைகளுடன் வாழ்கின்றாரோ அதே போல்
2.ஒளியின் சுடராக அன்னை தந்தையின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.

இவைகளை நீங்கள் எப்படி விஞ்ஞானக் கருவி கொண்டு பார்க்கின்றீர்களோ இதைப்போல மெய் ஞானிகளின் உணர்வை எமக்குள் (ஞானகுரு) செலுத்தி இந்த உணர்வின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றல் எவ்வாறு இருக்கிறது என்ற நிலையைத் தெளிவாக்கிக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குருநாதர் சொன்னபடி விளையச் செய்த அந்த உணர்வின் ஞானத்தைத்தான் “சொல் வடிவில்” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

 இதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாக இது பதிவாகின்றது. பதிவானதை மீண்டும் மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த அருள் ஞானி அகஸ்தியன் சென்ற வழிகளில் நீங்களும் செல்லலாம்.

கணவன் மனைவி குழந்தைகள் சகிதம் குடும்பமாக எளிதில் பெறலாம். இதில் ஒன்றும் கஷ்டமில்லை....!
1.நான் குண்டலினியைத் தட்டியெழுப்ப வேண்டும்.
2.கீழிருந்து மேலே ஏற்ற வேண்டும்.
3.காட்டுக்குள் போய் தவமிருக்க வேண்டும் என்று
4.காட்டிலே தவம் இருந்து பெறக் கூடியது அல்ல இது....!