ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 8, 2018

“பழனியம்பதியின் தத்துவம்” – பஞ்ச அபிஷேகம் – பஞ்சாமிர்தம்


போக மாமகரிஷியை நாம் எண்ணி அவன் காட்டிய உணர்வின்படி தீமைகள் அகற்றிடும் நிலையாக ஆறாவது அறிவின் தன்மை கொண்டு மெய்ப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும் ஈஸ்வரா….! என்ற
1.இந்த நினைவினைக் கொண்டு
2,கண்ணால் கூர்மையாக அந்தச் சிலையை உற்று நோக்க வேண்டும்.
3.போகன் அவன் சிலையாக வடித்த உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்து நமக்குள் சேர்க்க வேண்டும்.
4.நம்மை அறியாது வந்த தீமைகளை அகற்ற வேண்டும்.

நம் உயிரை கடவுளாக மதித்து நம் உடலை ஆலயமாக மதித்து அதற்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து நம்மை அறியாத தீமைகளை அது சுத்தப்படுத்தும் முறையாக நம்மை வணங்கும் நிலையாகத்தான் முருகனின் சிலையை உருவாக்கினான் அன்று போகன்.

இவ்வாறு நாம் செய்தோம் என்றால் இது தான் “பஞ்சபிஷேகம்…!” என்பது. ஐந்து புலன்களால் கண் காது மூக்கு இவைகள் கொண்டு ஒருக்கிணைந்த நிலையில் அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஏங்குதல் வேண்டும்.

ஒலி அலைகளை நாம் செவி வழி கொண்டு கேட்டாலும் கண்ணின் புலனறிவு கொண்டு அந்தச் சிலையைப் பார்க்கப்படும் போது அதன் உணர்வைச் சுவாசிக்கின்றோம்.

சிலையைப் பார்த்துச் சுவாசிக்கும் பொழுது அந்த நறுமணம் அதனின் உணர்வுகள் உமிழ் நீராக அரும் சுவையாக நமக்குள் சுரக்கின்றது.

இந்த உணர்வின் சக்தியை உயிரான நிலைகளுக்கு அபிஷேகம் செய்யச் செய்து அந்த உணர்வின் ஆற்றலை நாம் ஒவ்வொருவரும் பருகும் நிலைக்காக உருவாக்கினான் அந்தப் பண்பு கொண்ட போக மாமகரிஷி.

அதைக் காலத்தால் மறைத்து விட்டார்கள்.

முருகனுக்குப் பஞ்சமிர்தம் அதாவது பல கனிகளை அபிஷேகித்து அதை உணவாக உட் கொண்டால் நமக்குள் தீமை அகலும் என்று தான் எண்ணுகின்றோம்.
1.இது புற நிலைக்குத்தான் உதவும்.
2.அக நிலைக்கு உதவாது.

அன்று அகஸ்தியன் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகத்தின் அறிவை உணர்ந்து நுகர்ந்து விண்ணின் ஆற்றலை எடுத்து துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்த போகனும் மெய் ஞானத்தைக் கண்டுணர்ந்து
1.தீமையை அகற்றிடும் ஒவ்வொன்றையும் போகித்தான்… மோகித்தான்…!
2.அந்த உணர்வின் தன்மைகளை “ஒவ்வொரு சக்தியாகத் தனக்குள் இணைத்தான்….!”

ஆனால் அதை அவனுக்குப் பின் வந்தவர்கள் என்ன சொல்லி விட்டார்கள்..?

போகன் ஒவ்வொரு நாளும் மோகம் கொண்டு பெண் சிலையாகக் கூட கன்னி வாடியிலே கல்லைச் சிலையாக எடுத்து அதனுடன் இணைந்தான் என்று காட்டி விட்டார்கள்.

போகனின் தூய்மையான நிலைகளை இவர்களுக்குகந்த நிலைகளாகத் திரித்து அதன்படி தத்துவத்தைக் காட்டி விட்டார்கள்.

அந்த மகான் தனக்குள் தான் இருந்த அந்தச் சரீரத்திலிருந்தே முழுமை பெற வேண்டும் என்றும் இந்தச் சரீரத்தை விட்டு அகன்றால் வேறொரு சரீரத்திற்குள் புகாத நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணினான்.

அவன் கண்டுணர்ந்த உணர்வின் சத்தைத் தனக்குள் தெளிந்து இந்தச் சரீரத்தையும் காத்து முழுமை அடைந்து உயிருடன் ஒன்றி அந்தச் சப்தரிஷிகளுடன் சேர்ந்தான்.

போகன் கண்ட நிலைகள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது. காலத்தால் இது மறைக்கப்பட்டுவிட்டது.

போகருக்கு பின் வந்த அவர் சீடர்கள் என்பவர்கள் போகன் பச்சிலையை எடுத்தான் பல தாவர இனங்களை அவன் நுகர்ந்தான். கஞ்சாவைக் குடித்துவிட்டு மெய் மறந்தார் என்று போகனின் தத்துவத்தையே மாற்றி விட்டார்கள்.

அருள் ஞானி போகன் ஒவ்வொன்றையும் நுகர்ந்தான். தனக்குள் இணைத்தான் அந்த உணர்வை அறிந்தான். தீமையை அகற்றும் மெய்ப் பொருளைக் கண்டான்.

தீமையை அகற்றிடும் அரும்பெரும் சக்திகள் அனைத்தையும் முருகனின் சிலைக்குள் சாரணையாக்கினான்.

தீமை வரும் போதெல்லாம் ரிமோட் கண்ட்ரோல் REMOTE CONTROL போன்று முருகன் சிலையின் மணத்தை நுகர்ந்தால் நமக்குள் வரும் தீமையை அகற்றலாம். இது தான் பழனியம்பதியின் தத்துவம்.

1.போக மாமகரிஷி அவன் இட்ட உணர்வலைகள் இன்றும் இங்கே உண்டு
2.அந்த மெய்ஞானி போக மாமகரிஷியின் உணர்வை இணைத்து நாம் நமக்குள் உருவாக்க முடியும்.

இதன் படி நீங்கள் செய்தீர்கள் என்றால் தீமைகளை அகற்றலாம். மனிதப் பிறவியின் முழுமை அடையலாம்.