ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 6, 2018

ஒருவர் நோயால் அவதிப்படுகிறார் என்றால் அதே நோய் நமக்கும் எதனால் எப்படி வருகின்றது...? நோயைத் தடுக்கும் வழி என்ன...?


ஒரு நோயாளி வேதனையுடன் அவஸ்தைப்படுகின்றான். சந்தர்ப்பத்தால் நாம் உற்றுப் பார்க்கின்றோம்.

அவனிடமிருந்து வெளிப்படும் அந்த வேதனை உணர்வலைகளை நாம் நுகர்ந்தறியும் போது அவன் படும் வேதனை நமக்குள்ளும் அதே உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. நம் இரத்த நாளங்களிலே அந்த உணர்வுகள் கலக்கின்றது.

அந்த நோயாளியைத் திரும்பத் திரும்ப எண்ணும்போது அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்து அதே நோயை உருவாக்கும் கருவாகி முட்டையாக வெடித்த பின் நோயின் அணுக்கள் நம் உடலுக்குள் பெருகிவிடுகின்றது.

1.எத்தனை பேர் எந்தெந்த விதத்தில் பேசுகின்றனரோ
2.நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கி நினைவாக்கும் பொழுது
2.அந்தந்த விதத்தில் அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் கருவாக உருவாகத் தொடங்கி விடுகின்றது.

நாம் ரோட்டில் செல்லும் போது நமக்குச் சம்பந்தமே இல்லாத “யாரோ ஒருவன்... வேதனைப்படுகின்றான்...!” என்றால் உற்றுப் பார்த்த பின் “அவனைப் பற்றி நாம் திரும்ப எண்ணுவதில்லை.....!”

அவன் வேதனைப்பட்டாலும் அந்த உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் கருவுறும் தன்மை பெற்றாலும்
1.திரும்ப அவனைப் பற்றி எண்ணாததனால்...
2.அவன் வேதனைப்பட்ட உணர்வுகள் நமக்குள் வளராது தடைபடுத்தப் படுகின்றது.

அதே சமயத்தில் தொழில் செய்யும் இடத்தில் ஒரு நண்பனிடம் நாம் நெருங்கிப் பழகுகின்றோம். சந்தர்ப்பத்தால் அவனுக்கு ஒரு கஷ்டம் வந்துவிட்டால் அதை உற்றுப் பார்த்து நுகரப்படும் போது நாமும் “அடடா... உனக்கு இப்படி ஆகிவிட்டதே...!” என்று வேதனைப் படுகின்றோம்.

அப்பொழுது அது நம் இரத்தத்தில் கலந்து அணுவாக உருவாகும் கருக்களாக உருவாகத் தொடங்கி விடுகின்றது.

அவன் மேல் நாம் பற்று கொண்ட நிலையில் திரும்பத் திரும்ப அந்த நண்பனை எண்ணும் போதெல்லாம் அந்த உணர்வின் தன்மை நமக்குள் வளரத் தொடர்கின்றது.

ஒரு கோழி அது கருவுற்றால் உடனே கேறுகின்றது. கேறும் போது அந்தக் கரு வலு பெற்று முட்டையாக உருபெறுகின்றது. முட்டைகள் பருவமானபின் முட்டை வெடித்து கோழிக் குஞ்சுகளாக உருவாகின்றது.

குஞ்சுகள் வெளிவந்த பின் அது தன் ஆகாரத்திற்காக வேண்டி கத்துகின்றது. கோழியும் கூவி உணவிற்காக அழைத்து மண்ணைப் பறித்துக் காட்டுகின்றது.

இதைப்போன்று தான் நம் நண்பன் நோய்வாய்ப் பட்டு இருக்கும் போது கேட்டறிந்த உணர்வுகள் நமக்குள் கரு முட்டையாகி விட்டால் திரும்பத் திரும்ப எண்ணும்போது அது வளர்ச்சி அடைகின்றது.

வளர்ச்சி அடைந்து அணுக்களாக உருவான பின் அது உணவிற்காக அந்த உணர்ச்சிகளை வெளியிடும் போது அந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டி அதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

1.அப்போது உயிர் கண் காது மூக்கிற்கு ஆணையிட்டு
2.எந்த நண்பன் உடலில் இருந்து அந்த உணர்வுகள் வெளி வந்ததோ
3.அது காற்றில் கலந்திருப்பதைக் கவர்ந்து நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது
4.அதை உணவாக எடுத்து அந்த அணுக்கள் வளர்ச்சி பெறுகின்றது நோயாகின்றது.

பின் அந்த நோயை உருவாக்கும் அணுக்கள் பெருக்கிவிட்டால் அந்த நண்பனுக்கு எந்த நோய் வந்ததோ அதே நோயையே நமக்குள்ளும் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

உதாரணமாக இரத்தக் கொதிப்புடன் வாடுகின்றனர். அத்தகைய நண்பரைப் பார்க்கின்றோம். அவருக்கு வந்த இரத்தக் கொதிப்பை நாம் கேட்டு அதை விசாரிக்கின்றோம்.

அப்பொழுது அந்த நண்பனைப் பற்றித் திரும்ப திரும்ப அதிகமாக எண்ணும் போது அதே உணர்வு நம் இரத்த நாளங்களில் கலந்து நமக்குள் இரத்தக் கொதிப்பை உருவாக்கும் அணுக்களாக மாற்றுகின்றது.

அதே மாதிரி நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசுகின்றோம்.. பழகுகின்றோம். சந்தர்ப்பத்தால் பகைமையாகி விட்டால் அந்தப் பகைமை உணர்வுகள் தோன்றிய பின் அவர்களை ஏசிப் பேசித் தாக்கும் உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.

அந்த மனிதனை எண்ணும் போதெல்லாம் நமக்குள் அந்தக் கொதிப்பை ஏற்படுத்தும் அந்த உணர்வின் அணுவாக கரு முட்டையாக நமது உயிர் உருவாக்கிவிடுகின்றது.

பின் அவனை நினைத்தாலே கடுமையான கோப உணர்ச்சிகளைத் தூண்டும்.
1.இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சி அடைந்து
2.நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றி
3.நாம் நல்ல குணங்கள் கொண்டு செயல்பட முயற்சித்தாலும்
4.அதைச் செயல்படுத்த முடியாத நிலைகள் தடையாகின்றது.
5.அதனால் மீண்டும் இந்தக் கொதிப்பின் தன்மை அடைந்து உச்சகட்டமாகி
6.அவனை எப்படியும் தாக்க வேண்டும் அல்லது அவனைக் கெடுக்க வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் தோன்றுகின்றது.

இந்த உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் பெருகப் பெருக
1.நம்முடைய எண்ணமே நமக்கு எதிரியாகி
2.நாம் சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்கு மாறாக
3.அவன் மேல் நினைவாகி அவனை எப்படியும் கெடுக்க வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் அதிகமாகி
4.நம் காரியங்கள் தடையாகி விடுகின்றது.

இவ்வாறு ஆன பின் நாம் நினைத்த காரியங்கள் செயல்பட வில்லை என்றால் அடுத்தடுத்து நாம் குடும்பத்தில் கோபமாகப் பேசுவதும் தொழிலில் கோபமாகப் பேசுவதும் கொதித்தெழும் சக்திகள் வரும் போது நமக்குள் அந்த இரத்தக் கொதிப்பு முழுமையாகி விடுகின்றது.

இரத்த கொதிப்பு வந்துவிட்டால் நம் அங்கங்கள் கைகால் எல்லாம் நரம்பு மண்டலங்களெல்லாம் இழுத்து விடுகின்றது. கைகால் வருவதில்லை.

1.யாரை நினைத்து இந்தக் கோபத்தின் நிலைகள் பெற்றோமோ
2.நாம் அடிக்கடி அவர்களைப் பேசுவோம்
3.அவர்களும் அதே நிலைகளில் நம்மைப் பற்றிப் பேசுவார்கள்.
4.உடலை விட்டு வெளியே சென்ற பின் இந்த ஆன்மா அவர் உடலுக்குள் தான் புகும்.
5.இறந்த பின்னும் அந்த உடலுக்குள் சென்று இதே வேலையைத் தான் அதை செய்யும்.

இதை எல்லாம்  நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நண்பர்களாக இருப்பவர்கள் இரத்தக் கொதிப்பு ஆகிவிட்டது என்று ஒருவருக்கொருவர் பாசத்துடன் கேட்டறிவதனால் அங்கே விளைந்த உணர்வுகள் இங்கேயும் விளைகின்றது.

இப்படித் தான் வாழ்க்கையில் மனித உருவைச் சீர்குலைக்கும் உணர்வுகளாக மாற்றி விடுகின்றது.

ஆகவே நண்பருக்குள் பகைமை உணர்வுகள் தோற்றுவித்தாலும் அதை நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.

எப்போது பகைமை உணர்வுகள் வருகின்றதோ அடுத்த நிமிடம் “ஈஸ்வரா....! என்று புருவ மத்தியில் உயிரை நினைத்து அந்தத் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும். எங்கள் ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை நம் உடலுக்குள் அதிகமாக வளர்த்து கொள்ளுதல் வேண்டும்.

அப்படி வளர்த்துக் கொண்டபின் அடுத்து
1.என் பார்வை எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்
2.என்னைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று
3.வெறுப்படையும் சக்திகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைத்துச் சாந்தப்படுத்திப் பழக வேண்டும்.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் எத்தகைய உணர்வுகளை நுகர நேர்ந்தாலும் அவைகளுக்குள் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைக்க வேண்டும்.

அப்பொழுது தீமையான உணர்வுகளின் செயலாக்கங்கள் தணிந்து ஒளியாக மாறும் அணுக்களாக நமக்குள் உருவாகும். வேதனையாக மாற்றாது.

இதைப் போன்று செய்து பழக்கப்படுத்திக் கொண்டால் நம்மை அறியாமல் வரும் நோய்களை நாமே நீக்க முடியும். செய்து பாருங்கள்.